"நமக்குள் விழிப்புணர்வு இல்லாதவரை நமக்கு கிடைப்பவை அணைத்தும் வீணே "

வியாழன், ஏப்ரல் 30, 2015

அகம் - ஆறாவது திருமண நாள்

நேற்று முதல் முறையாக ஒரு புடவைக்கடைக்கு சென்றேன். கடைக்குள் நுழைந்தவுடன் தான் தெரிந்தது இதுவரை நான் தனியாக வந்து யாருக்கும் புடவை எடுத்ததே இல்லை என்று.

கடைக்காரர் என்ன வேண்டும் என்றதும் நான் புடவை என்று இயல்பாக சொன்னேன். அவர் எனக்கு ஒன்றும் தெரியாது என்று நினைத்திருப்பார் போல அதை மென்சிரிப்பில் வெளிபடுத்தினார்.

நான் அப்படியே நின்றேன் . அவர் நகர்ந்து போய்விட்டார். பூக்களை கொட்டிவைத்தால் அவை ஒற்றை பூவாக தெரியும். அதுபோல தான் புடவைகளும்.

பக்கத்தில் பெண்கள்  ஒவ்வொரு புடவையாக மென்மையாக  தொட்டு வருடி மேலே வைத்துப்பார்த்து ரசனையோடு  பார்த்துக்கொண்டு இருந்தார்கள். புத்தாடைகளுக்கு முன்னாள் பெண்கள் சிறுமிகளாகவே இருக்க விரும்புகிறார்கள் போல

ஆண்களால் அப்படி துணிகளுடன் உறவாட முடிவதுதில்லை.

மனைவிக்கு கம்மல் , பென்டன்ட் என சின்ன சின்ன பொருட்கள் வாங்கி இருக்கிறேன். அந்த பொருட்களைவிட அதை தேடுகின்ற தருணம் அழகானவை. அந்த ஐந்து பத்து நிமிடங்கள் அவர்களையே நினைத்து கொண்டு இருப்பேன் . கவிதையான தருணம்.

அதேபோல எப்படியோ தேடி  ஒரு புடவையை கண்டுகொண்டேன். அதே ஆளை அழைத்து பில் போட சொன்னபோது அதே மென்சிரிப்பை உதிர்த்தான். ஆனால் இந்த முறை என்னால் உகிக்க முடியவில்லை.

என் மனைவிக்கு இரண்டு மனங்கள்.

ஒன்று புறவயமானது.

அது  தன் சுயத்தை நிறுவ முயன்று கொண்டே இருக்கிறது. அதற்காக  பெண்மை பேசுகின்றது.உரிமை பேசுகின்றது. என் சிறுமைகளோடு   சண்டை இடுகின்றது. கேள்வி கேட்கின்றது.
அது அவர் கண்களில் ஒளியை  ஊறி  நிரையச்செய்கிறது . ஒரு நிமிர்வு முகமெல்லாம் பரவி திளைக்கச்செய்யும் . எனக்கும் அந்த மனதுக்கும் இடையேயான உறவு என்பது  சிறு நீர்த்துளி தாமரை இலைமேல் ஒட்டாமல் உருளுவது போல.

இன்னொன்று அவர் அகம்

அது என்னோடு எப்போதும் உறவாடிக்கொண்டு இருப்பது. தாமரை இலை அடிப்பரப்பும் தண்ணீரும் போல

அந்த அகம்  தான் என்னை எப்போதும் மகிழ்வோடு வைத்திருக்கிறது . என்னை பாதுகாத்தும் வைத்திருக்கிறது.

இன்று எங்கள் ஆறாவது திருமண நாள் .

கடவுளுக்கு நன்றி.