"நமக்குள் விழிப்புணர்வு இல்லாதவரை நமக்கு கிடைப்பவை அணைத்தும் வீணே "

வியாழன், அக்டோபர் 13, 2016

வீட்டை கட்டிப்பார் -1 - துவக்கம்


வீட்டை கட்டிப்பார் -1 - துவக்கம்
--------------------------------------------------------------
கடந்த வருடம் ஆகஸ்டு மாதம் விடுமுறையில் என் கிராமத்து வீட்டில் இருந்தேன். இரவு எதோ உணர்வு வந்து எழுந்தபோது கவிதா உறங்காமல் அமர்ந்திருந்தாள். பத்துக்கு பத்து அளவிலான அந்த சிறிய அறை மின்துண்டிப்பால் புழுங்கி தகித்தது.
வியர்வையில் என் பின் தலையும் முதுகும் நனைத்திருந்தது.
தண்ணீர் தேடி அருந்திவிட்டு கூடத்துக்கு வந்து படுத்துக்கொண்டேன்.
அது பூர்விக வீடு. அப்பா கட்டத்துவங்கி நானும் அண்ணனும் முடித்தோம். சவூதி வந்த முதல் இரண்டு வருட சம்பாத்தியம் அதற்க்கு செலவானது. இளையவன் தங்கும் அறை பெரியவன் அறையைவிட அளவில் சின்னதாக இருக்கவேண்டும். பெரியவன் மேல் பக்கம் தங்க வேண்டும் சின்னவன் கீழ் பக்கம் தங்கவேண்டும் என்று பல நெறிகளை கொண்டு கட்டப்பட்ட வீடு அது.
அந்த வீட்டை முடித்துவிட்டு திருமணம் செய்துகொள்ளலாம் என்று காத்திருந்தேன். வீடு முடிந்தவுடன் எனக்கும் திருமணம் ஆனது. பெரும் கடனுடனையே நானும் கவிதாவும் வாழ்வை துவங்கினோம். இவ்வளவு நாள் சவூதில இருந்திருக்க கொஞ்சம் கூட நீ சேர்த்துவைவில்லையா என்று பலமுறை கேட்டு கவிதா சலித்துவிட்டாள். இதோ இந்த வீடு இருக்கே என்று சிரிப்பேன்.
அதன்பின் கடந்த ஏழு வருடங்களாக ஊருக்கு செல்லும் போதெல்லாம் அந்த வீட்டில் அந்த சிறிய அறையில் தான் தங்குவோம்.
அந்த வீடு கிராமத்திலிருந்து தள்ளி தென்னந்தோப்புக்குள் இருக்கும். சுற்றி சொந்தங்களின் வீடுகள். தூய்மையான காற்றும் பார்த்தவுடன் மனதில் படியும் பசுமையும் சூழ்ந்திருக்கும். ஆனால் எதாவது வாங்க மற்றும் மருத்துவம் என்று அடிப்படை வசதிக்கு பத்து கிலோமீட்டர் தள்ளி குடியாத்தம் வரவேண்டும்.
கவிதாவுக்கும் எனக்கும் ஒரு ஆசை இருந்தது. வேலூர் போன்ற நகரத்தில் நல்ல குடியிருப்பு பகுதில் ஒரு வீடு வாங்க வேண்டும் என்று.
அன்று காலையில் கவிதா மாடியில் துணி உலர்த்திக்கொண்டு இருந்தாள். நான் காபி குடித்துக்கொண்டே நேத்து நைட் தூக்கமே இல்ல பா என்றேன். கொட்டாவி விட்டுக்கொண்டே ஆமா எனக்கும் தான் என்றாள். அடுத்த வருடம் எப்படியாவது நாம வேலூரில வீடு வாங்கணும் என்றேன்.
பின்பு சற்று யோசித்து ஆமா இங்க கிராமத்துக்கு வந்தா நாம எங்க தங்குவது என்றேன். அதான் கிழ நம்ம ரூம் இருக்கே என்றாள் துணியை உதறிக்கொண்டே.
ஆனால் தெய்வங்கள் ஆடல் வேறு மாதிரி இருந்தது. அப்பா கடந்த சில வருடங்களாக நான் கிராமத்தில் பழைய வீட்டின் முன்புறமாக வீடு கட்ட போவதாக பார்ப்பவரிடமெல்லாம் சொல்லிக்கொண்டு இருந்தார். தன் பிள்ளைகள் தன்னைவிட்டு சென்றுவிடக்கூடாது என்று நினைக்கும் ஒரு கிராமத்து தந்தையின் சராசரி ஆசை அது.
அப்படி அனைவரிடமும் சொல்லுவது ஒரு உத்தி . அதன் பின் என்னை பார்க்கும் சொந்தங்கள் அந்த வீடு பெரியவனுக்கு குடுத்துட்டு நீ முன்னாடி வீடு கட்டிக்க என்று அறிவுரை கூறினர். சிலர் எப்ப இங்க வீடு கட்ட போற என்று கேட்டார்கள்.
கல்வி பெற்று முதலாளித்துவ வாழ்வில் புகுந்துவிட்ட எனக்கும் கவிதாவுக்கும் எதையும் சம்மந்தப்பட்ட நபரிடம் நேரடியாக பேசி தீர்வு காண்பது தான் பழக்கம். ஆனால் வீட்டு சூழல் நேர்ரெதிரானது. எதையும் நேரடியாக சொல்ல மாட்டார்கள். தன்னிடம் அண்ணன் சொன்னதாக அத்தை சொன்னதாக அல்லது பங்காளி சொன்னதாக தான் கேட்ப்பார்கள். அப்பாவும் அம்மாவும் நேரடியாக நீங்கள் தனியாக வீடு கட்டிக்கொள்ளுங்கள் என்று சொல்லவே இல்லை. ஆனால் பேச்சு சுற்றி சுற்றி அதிலேயே வந்து நின்றது.
நாங்கள் அங்கு வீடு கட்டவேண்டும் என்ற எண்ணம் எங்கள் இருவரை தவிர மற்ற அனைவருக்கும் இருந்ததாக எனக்கு தெரிந்தது. சிலர் மறைமுகமா எங்களை அதை நோக்கி நகர்த்தினர். சிலர் நேரடியாக ஆனால் சிரித்துக்கொண்டே நகர்த்தினர்.
ஒரு கட்டத்தில் வேண்டுமென்றே நான் அந்த வீட்டில் விடாப்பிடியாக இருப்பது போன்ற பிம்பம் எனக்கே உருவானது. கவிதாவுக்கும் நிலைமை புரிந்தது.
அடுத்ததடுத்த நாட்களில் எனக்கும் கவிதாவுக்கும் பல யோசனைகள் விவாதங்கள். வேலூரில் வீடு வாங்கலாம் என்று துவங்கினோம். அதுதான் மகனை படிக்கவைக்கவும் மேற்படி எங்கள் வாழ்க்கைக்கும் சரியானது என்று நினைத்தோம்.
ஆனால் வீட்டு நிலைமை மேலும் மேலும் குழப்பத்தில் ஆழ்த்தியது.
யோசனை கேட்ட அனைவரும் நம் பூர்விக இடத்தில் ஒரு சிறு கூடாவது நமக்கு வேண்டும் என்றனர். இறுதியாக நாங்கள் ஒரு முடிவுக்கு வந்தோம்.
நம் குடும்பத்தில் ஒரு சிறு பிரச்சனை என்பது கிராமத்தாற்கு களியாடல் பொழுதுபோக்கு . தீர்வு யாருக்கும் தேவையே இல்லை. அந்த விவகாரத்தை பேசிப்பேசி சுவைக்கவேண்டும் அவ்வளவே. வீடு பற்றிய சலசலப்பு எங்கள் வீட்டில் எழும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். பஞ்சாயத்து செய்யவும் மேலாதிக்கம் செய்யவும் சிலர் காத்திருந்திருக்கலாம்.
ஆனால் நானும் கவிதாவும் அப்பா அம்மா அண்ணன் அண்ணி நால்வரைமட்டுமே பேச அழைத்தோம்.
இரண்டு வழிகளை முன் வைத்தோம் .ஒன்று பழைய வீட்டை நாங்கள் எடுத்துக்கொண்டு அண்ணன் புது வீடு கட்ட ஒரு தொகையை அளிப்பது அல்லது பழைய வீட்டின் முன் உள்ள நிலத்தை வீடு கட்டவும் பழைய வீட்டில் எங்களுக்கு உள்ள உரிமைக்காக அந்த நிலத்தை ஒட்டி உள்ள துண்டு நிலத்தையும் கோரினோம்.
கொஞ்சம் விவாதம் எழுந்தது. அதன் விளைவுகள் என்னவாக இருக்கும் என்று அனைவருக்கும் யோசனை இருந்தது. பெரும் தயக்கத்தோடு இரண்டாவது வழியை ஒப்புக்கொண்டனர்.
இந்த விவகாரம் எங்களுக்குள்ளே நல்லவிதமாக பேசி முடிக்கப்பட்டது. மூன்றாம் மனிதர் யாரும் உள்ளே வரவில்லை.
வீடு கட்டுவது என்று முடிவெடுத்த பின் அதை பற்றிய கனவு எனக்குள் விரிந்தது. நீரூற்றின் மேல் அடைத்துக்கொண்டு இருந்த இறுதி கல் நகர்ந்து நீர் மண்ணில் வழிந்தோடுவது போல.
அந்த தென்னத்தோப்பில் கேரள பாணியில் ஒரு பண்ணை வீடு அமைக்கவேண்டும் என்று விரும்பினேன். வலைத்தலத்தில் தேடி தேடி ஒரு சிறிய அழகான வீட்டை பிடித்து அச்சு எடுத்தேன்.
உள்ளூர் மேஸ்திரியை பேச அழைத்தோம்.அவன் கிராமத்து பள்ளியில் எனக்கு முன்னோ அல்லது பின்னோ படித்தவன். எங்கள் பழைய வீட்டை அவன் தான் கட்டினான்.
வீடுதானே கட்டிடலாம் என்று பேச்சை துவங்கினான். நான் 15 லகரத்துக்குள் வீடு முடியனும் இரண்டு அறை போதும் என்று அந்த அச்சு எடுத்த வீட்டை காட்டினேன். அதை பார்த்து அவன் சிரித்துவிட்டான். இதெல்லாம் நம்ம ஊருக்கு ஒத்து வராதுபா என்று காகிதத்தை ஓரமாக மடித்து வைத்துவிட்டான்.
நா ஏன் என்றதும் அதெல்லாம் முடியாதுபா என்று சிரித்தான். அதான் ஏன் என்றேன் பரிதாபமாக. அதெல்லாம் இங்க முடியாதுபா என்று செந்தில் போல அதெல்லாம் இதுல வாசிக்க முடியாதுண்ணே என்றான். ரெண்டு ரூம்தானே என்று பக்கத்தில் இருந்த பேப்பரை எடுத்து வேகமாக வரைந்தான். இரண்டு அறை ஒரு கூடம், பூசை அறை , ஒரு சமையல் அறை அவ்வளவு தான் என்று முடித்து கையில் கொடுத்தான். வீட்டின் கடைசியில் ஒரு சிறிய பலகணி வேண்டும் என்றேன். அங்க படிக்கட்டு வரும் வாஸ்து என்றான். சரி எங்க அறை கொஞ்சம் பெரியதாக வேண்டும் என்றேன். நீங்க கீழ் பக்கம் இருப்பிங்க அது கொஞ்சம் சின்னதா இருக்கணும் என்றான். சரி முன்னாடி மட்டும் நா கேட்ட மாதிரி பண்ணி குடு அதிகம் இல்லை ஒரு பிரமீடு வடிவம் இரண்டு தூண்கள் அவ்வளவு தான் என்றேன். அதெல்லாம் நா பாத்துக்குறேன் என்று வரை படத்தை குடுத்தான்அதை வாங்கி பார்த்தவுடன் அது எங்கள் பழைய வீட்டின் குறுக்கப்படட வடிவமாக இருந்தது.
அக்க்ஷய் பெயருக்கு ஜாதகம் பார்த்து செப்டம்பர் 2015 இறுதியில் பூமி பூசை நடத்தினோம். ஒரு ஆள் இறங்க குழி எடுத்து அதில் செங்கற்களை அடுக்கி ஐந்து உலோகங்கள் இட்டு மலர் அள்ளி குழில் இட்டு சொந்தங்கள் அனைவரும் குழில் தண்ணீர் ஊற்றி பூமித்தாயை வணங்கி பூசை செய்தோம். மேஸ்திரி கற்பூரம் ஏற்றி குழியில் தேங்கிநின்ற தண்ணீரில் இட்டான். கற்பூரம் எரிந்து கொண்டே தண்ணீரில் சுற்றி வந்தது.
பின் நான் சவுதி வந்துவிட்டேன்.

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

திங்கள், அக்டோபர் 10, 2016

பூனை

என் வீட்டில் இருக்கும் பூனையை பார்க்கும்போதெல்லாம் எரிச்சல் எழும்

எப்போதும் பதுங்கி பதுங்கி சோம்பலாக மெல்நடையில்  அருகில் வந்து குழைந்து படுத்துக்கொள்ளும்

அதை கொஞ்சினாலும் எந்த உணர்ச்சியும் காட்டுவதில்லை

பல நேரங்களில் அது என் அருகில் இருப்பது கூட எனக்கு தெரியாது
அதன் காலடியில் எந்த சத்தமும் எழுவதில்லை

பசிக்கும்போது மட்டும் " மியாவ் " என்று காலை சுற்றும்

பால் வைத்தால் பயந்து பயந்து பதுங்கி பதுங்கி குடிக்கும்

அந்த பால் தன்னுடையது என்ற உணர்வு அதற்கு வந்ததே இல்லை

நேற்று இரவு அது குழந்தை அழுவது போல கத்திக்கொண்டே இருந்தது

தூக்கம் கலைந்து அருகில் இருந்த புத்தகத்தை எடுத்து வீசினேன்.

அது ஜன்னல் வழியாக குதித்து  ஓடியது .

காலையில் அரைத்துயிலில் மென்மயிர் காலில் உரசுவதை உணர்தேன்

பூனை காலடியில் சுருண்டது படுத்திருந்தது

அதை பலமுறை துரத்த முயற்சித்ததுண்டு , எங்காவது விட்டு விட்டு வந்து விடலாமா என்று கூட யோசித்ததுண்டு

ஆனால் இன்றும் அது என்னுடன் தான் இருக்கிறது

உன் பழைய நினைவுகளை போல 



ஞாயிறு, ஆகஸ்ட் 14, 2016

ரமேஷ் அண்ணா

ஐந்து வருடங்களுக்கு முன் என் மனைவியை சவுதிக்கு அழைத்துவர இங்கு வீடு தேடிக்கொண்டு இருந்தேன். இங்கு வீடு எளிதில் கிடைக்கும். ஆனால் நாம் நினைக்கின்ற வாடகையில் நம் நாட்டு மக்கள் வசிக்கும் கட்டிடம் கிடப்பது அரிது.

அப்போது தான் எனக்கு ரமேஷ் அண்ணா அறிமுகமானார். என் கிராமத்துக்கு பக்கத்து கிராமத்துக்காரர். ஊரில் அப்பாவுக்கும் அறிமுகம் உண்டு. அவர் பெயர் மட்டும் தெரிந்து வைத்திருந்தேன்.

அவரே என் செல்பேசி எண்ணை யாரிடமோ வாங்கி என்னை அழைத்தார். நாந்தாம்பா ரமேஷ் நல்ல இருக்கியா என்று பழகியவர்போல இயல்பாக பேசத்துவங்கினார்.

அதன் பின் அவரை பலமுறை சந்தித்தது பேசத்துவங்கினேன்.

அவர் குடும்பம் தங்கியிருந்த குடியிருப்பில் எனக்கும் வீடு பார்த்து கொடுத்தார். என் மனைவி வந்தவுடன் அவர்களுடன் ஒரு குடும்பமென கலந்துவிட்டோம்.

ஒரு முறை அறிமுகம் இல்லாத ஒருவரின் வீட்டுக்கு அழைத்து சென்றார். அவர் வரவேற்பும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. ஆனால் ரமேஷ் அண்ணா சவுதியில் ஓட்டுநர் உரிமம் எப்படி பெறுவது என்று பொறுமையாக சொல்லிக்கொண்டு இருந்தார்.
யாரை பார்க்கவேண்டும் , எப்படி வண்டி ஓட்டி பழகவேண்டும் என்று நுணுக்கமான தகவல்களை சொல்லிக்கொண்டு இருந்தார்.
அந்த ஆள் எங்களை உக்கார கூட சொல்லவில்லை. எனக்கு எரிச்சலாக இருந்தது. ஆனால் ஒன்றை கவனித்தேன் அது ரமேஷ் அண்ணாவின் உதவும் குணம்.

புதியதாக வருபவர்களுக்கும் நண்பர்களுக்கும் அவர் இயல்பாக உதவுவதை நானும் கவிதாவும் ( மனைவி ) அடிக்கடி பேசிக்கொள்வோம். நாங்கள் தங்கியிருந்த குடியிருப்பில் தண்ணீர் பிரச்சனை மின் தூக்கி பழுது என்று எந்த சிறு பிரச்சனை ஆனாலும் அதற்கான ஆட்களை முதலில் சந்தித்து தீர்க்க முனைவது ரமேஷ் அண்ணா தான்.

அந்த குடியிருப்பில் இருக்கும் முப்பதிற்கும் மேற்படட குடும்பத்திற்கும் அறிமுகமானவர் அவர் மட்டும் தான்.

பதினைந்து வருடங்களுக்கும் மேலாக அவர் சவுதியில் வேலை செய்தார். நான் ஐந்து வருடங்களாக அவருடன் பழகினேன். நான் பார்த்து வியந்த இன்னொரு விஷயம் அவரின் உரையாடல்.

எதை பற்றி பேசினாலும் அந்த தருணத்தில் நுணுக்கமான தகவல்களை அடுக்கிக்கொண்டே போவார். நான்கைந்து பேர் பேச அமர்ந்தால்  முதலில் எல்லோரும் பேசுவோம்  பின் மூவர் பின் இருவர் பின் அவர் பேசுவதை அனைவரும் கேட்டுக்கொண்டு இருப்போம்.

70 - 80 களில் கல்லூரியில் படித்தவர்களுக்கு தமிழ் மீது அதிகப்பற்றுள்ளதை கவனித்திருக்கிறேன் . ரமேஷ் அண்ணாவுக்கும் தமிழ் மீது பற்று இருந்தது . தமிழ் சொல்வேந்தர் மன்றத்தில் மிகுந்த ஈடுபாட்டுடன் செயல்படுவதை பார்த்திருக்கிறேன்.

ஒரு நாள் எதிரில் நடந்துவந்த என்னிடம் நீ ஏன் சொல்வேந்தர் மன்றத்துல சேரல இன்னக்கி போலாம் வா என்று அழைத்து சென்றார்.

சரி அடுத்து நீ மேடைல ஏறி  பேசு என்றார். என்ன பேசுறது என்றேன். சும்மா உன்ன பத்தி ஐந்து நிமிடம் பேசு என்றார். ஏதோ ஒரு உற்சாகத்தில் நான் இருவது நிமிடம் பேசினேன். இறங்கி வந்ததும்  நேரம் முக்கியம் புரியுதா என்கிறார்.

அதன் பின் வெவ்வேறு தலைப்புகளில் பதினோரு முறை மேடையில் பேசிவிட்டேன். மன்றத்தில் பல உறவுகள் கிடைத்தன. பொங்கல் விழாவில் பட்டிமன்றத்தில் பேசவும் பாடவும் அவர்கள் வாய்ப்பளித்தார்கள்.

கவிதாவையும் விடவில்லை. கவிதா நீ அடுத்த வருடம் மேட ஏறு என்றார். அடுத்த  வருடம் தோழிகளான அவர் மனைவியும் கவிதாவும் கதம்பம் நிகழ்ச்சியை அழகாக நடத்தினர் . அது அவருக்கு அவ்வளவு பெருமையாக இருந்தது.

சில நாட்களுக்கு முன் நான் வேலையை விட்டு வரும்போது எங்கள் குடியிருப்பின் கீழே கடைக்கு முன் நண்பர்களோடு நின்று பேசிக்கொண்டு இருந்தார். என்னை பார்த்ததும் என்ன இப்பதான் வரியா என்கிறார். ஆமாணா  வேல கொஞ்சம் அதிகம் என்று அவரை கடந்து போனேன். குடியிருப்புக்குள் நுழையும்போது இந்தியாவில் கல்லூரியில் படிக்கும் அவர் மகன் எதிரில் வந்தான். என்ன Uncle நல்ல இருக்கீங்களா இப்ப தான் வரிங்களா என்று சிரித்துக்கொண்டே கடந்து போனான். படிக்கட்டில் விளையாடிக்கொண்டு இருந்த ஏழாவது படிக்கும் அவர் மகள் Hai Uncle இப்ப தான் வரிங்களா என்றதும் அவளுக்கும் அதே பதிலை கூறிவிட்டு வீட்டுக்குள் நுழைந்தேன்.

கவிதாவிடம் குடும்பமே ஒரே கேள்வியை வரிசையா கேக்குறாங்க பா என்று நடந்ததை கூறினேன். கவிதா மேல போயிட்டு அவங்க வீட்டம்மா கிட்டயும் இப்ப தான் வந்தேன்னு சொல்லிட்டு வந்துரு போ என்று சிரித்துக்கொண்டு இருந்தாள். இல்ல பா ரமேஷ் அண்ணா முகம் கொஞ்சம் ஒடுங்கி இருக்கு   இல்ல என்றேன்.
ஆமாம் பா அவருக்கு சுகர் இருக்கு தெனமும் நடக்குறாரு என்று கவிதா சொன்னாள்.

அதன் பின் அவரை போன மாதம் குடியிருப்புக்கு கீழே இருக்கும் சிறிய உணவகத்தில் பார்த்தேன். என்ன சிவா கவிதா ஊருக்கு போயாச்சா என்றார். ஆமாணா  அவங்களும்  ஊருக்கு போய்டாங்களா என்றேன். ஆமா ..... நம்ம ஊர்ல நல்ல மழையாமே என்று ஊர் கதையை பேசத்துவங்கினார்.

எங்கோ தூர மண்ணில் நம்ம ஊர்காரர் நாம் வளர்ந்த மண்ணை பற்றியும் மக்களை பற்றியும் பேசுவதை கேட்பது எவ்வளவு அலாதியானது.

அவர் பேசுவதை கேட்டுக்கொண்டே சாப்பிட்டு முடித்தேன். சரினா வறேன் என்று சொல்லிவிட்டு கிளம்பினேன். கடைசியாக என்ன பேசினார், என்ன வார்த்தை சொன்னார் , அவர் முகம் எப்படி இருந்தது என்று நினைத்து நினைத்து பார்க்கிறேன். அதை நினைவிலிருந்து மீட்டெழுப்ப முடியவே இல்லை.

அதன் பின் அவரை நான் பார்க்கவில்லை. பின் ஒரு நாள் ரமேஷ் அண்ணாவுக்கு உடம்பு சரியில்ல ஹாஸ்பெட்டில சேர்த்திருக்காங்க போய் பார்த்துட்டு வா என்று கவிதாவிடமிருந்து குறுந்செய்தி வந்தது.

நானும் நண்பரும் ஹாஸ்பெட்டுளுக்கு சென்று பார்த்தோம். ICUவில் சேர்த்திருந்தார்கள். வார்டின் முன்னாள் நண்பர்கள் கனத்த மௌனத்தில் உறைந்திருந்தார்கள். அவர் அண்ணனும் இங்கு தான் பணியாற்றுகின்றார். மரியாதைக்குரிய மனிதர். அவரும் தளர்ந்து போய் அமர்ந்திருந்தார்.


உள்ளே சென்று ரமேஷ் அண்ணாவை பார்த்தேன். இதயம் மட்டும் மெதுவாக இயங்கிக்கொண்டு இருந்தது. அது மட்டுமே அவர் இருப்பாக இருந்தது.

சனிக்கிழமை அவருக்கு விடுமுறை நாள். வீட்டில் அவர் தனியாக தான் இருந்திருக்கிறார். காலையில் சற்று மூச்சு திணறல் ஏற்பட்டு இருக்கிறது. மருத்துவமனைக்கு சென்று முதல் உதவி எடுத்துக்கொண்டு வீடு வந்திருக்கிறார். இங்கு சவுதியில் கருணையற்று தழல் நின்றாடும் காலம் இது. அன்று காற்றில் ஈரப்பதமும் அதிகம் இருந்திருக்கிறது. வீட்டுக்கு வந்து ஓய்வெடுத்திருக்கிறார். US யில் படிக்கும் அவர் அண்ணன் மகள் அவரை பார்க்க வந்திருக்கிறார். இருவரும் பேசிக்கொண்டு இருந்திருக்கிறார்கள். அப்போதே அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு வியர்த்து வழிந்திருக்கிறது. மகள் அவர் அப்பாவுக்கு குறுந்செய்தி அனுப்பிவிட்டு ரமேஷ் அண்ணாவுக்கு முதல் உதவி அளித்திருக்கிறார். அருகில் இருந்த அவர் நண்பர்களையும் உதவிக்கு அழைத்திருக்கிறார். பின் அவர் அப்பாவும் வந்துவிடவே அவசர கதியில் ஹாஸ்பிட்டளுக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள். மகள் செல்லும் வழி முழுக்க ரமேஷ் அண்ணாவிடம் பேசிக்கொண்டும் முதல் உதவி அளித்ததுக்கொண்டும் சென்றிருக்கிறார்.

மருத்துவமனைக்கு சென்றடைவதற்கு மூன்று நிமிடம் முன்னாள் அவர் இதயம் தளர்த்திருக்கிறது.

மருத்துவமனையை அடைந்ததும் உடனடியாக சிகிழ்ச்சை அளிக்கப்பட்டு இதயம் மீண்டும் இயங்க துவங்கி இருக்கிறது.

அவர் மனைவியும் மறுநாள் ஊரிலிருந்து வந்துவிட்டார். மருத்துவர்கள் கடவுளை பிராத்திக்க சொன்னார்கள்.

அன்று முழுக்க மருத்துவ மனை வளாகத்தில் காத்திருந்தோம். இரவு ஒன்பது மணிக்கு மேல் அங்கு யாரும் இருக்க கூடாது. ஒருவர்க்கு  மட்டுமே அனுமதி உண்டு.

நான் வீட்டுக்கு வந்துவிட்டேன். தூக்கம் வரவில்லை . எந்த நினைவு எழுந்தாலும் அவரில் சென்று முடிந்தது . இரவு 12 மணிக்கு செய்தி வந்தது. அவர் இதயம் மலர்ந்ததென்று.

மறுநாள் அத்தனை நண்பர்களும் துக்கத்தில் ஆழ்ந்தனர்.  அழுது தவிக்கும் அவர் மனைவிக்கு என்ன ஆறுதல் கூறுவது என்று தெரியவில்லை . அழுது அழுது மட்டுமே கடந்து செல்லவேண்டிய துயரமல்லவா இது.

இங்கு யாரவது இறந்துவிட்டால் உடல் ஊருக்கு செல்ல ஒரு மாதம் ஆகிவிடும். ஆனால் அவர் அண்ணன் மற்றும் நண்பர்களின் தொடர் முயற்சியால் பத்து நாட்களுக்குள் அனைத்து முறைமைகளும் முடிந்து அவர் உடலை சொந்த ஊருக்கு எடுத்து சென்றார்கள்.

நேற்று உற்றார் உறவினர் நண்பர்கள் அழுது புடை சூழ அந்த நல் ஆத்மா வாழ்ந்த உடல் அடக்கம் செய்யப்பட்டது.

இன்றும் அவர் எப்போதும் நின்று பேசும் கடையை கடந்து போகிறேன். அவர் இல்லை ஆனால் வேறு யாரோ நான்கு பேர் நின்று பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.

கெத்து கதை


தட்.... தட் ....தட்.... தட் 
அவன் :  ஏய் வெளில வாடா அடிங்க வெளில வாடா

ஏய் கதவ தட்டுனா சீக்கிரம் தொறக்க மாட்டியா 

உனக்கு எத்தனை தடவ சொல்றது 

மேட ஏறி பேசாதேன்னு 

அது என்னடா கட்சி அது ஊர் பேர் தெரியா கட்சி

மொவன இந்த ஊர்ல ஒரு கட்சி தான் இருக்கணும் 

நா ஒரு தவைவன்தான் இருக்கணும் 

நேத்தே பசங்க கேட்டானுங்க முடுச்சுல்லமான்னு  

நா தான் ஏதோ பட் சிகிறையே ஊருக்கு சின்ன சின்னதா 

நல்லது பண்றியே உட்ருங்கடானு சொன்ன 

மொவன சோன்னா போதும் இந்த தம்மாத்துண்டு ஊட்டோட  

வச்சி உன்ன கொழுத்தி சாம்பல ஏரில கரைச்சிட்டு வந்துடுவானுங்க 

ஏய் இன்னா நா பேசினே கீரங் சொம்மா மோரிக்கிர
 
------------------------------------------------------------------------------------------------


 நான்  :  இல்ல நீ தனியாவா வந்திருக்க