"நமக்குள் விழிப்புணர்வு இல்லாதவரை நமக்கு கிடைப்பவை அணைத்தும் வீணே "

வியாழன், ஜூன் 18, 2015

மகன் வயது 3

மகன் வயது 3

நேற்று நள்ளிரவு திடீரென்று தூக்கத்தில் அப்பா அப்பா அப்பா என்று மூன்று முறை சொல்லிவிட்டு திரும்பி படுத்து தூங்கிவிட்டான். ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த நான் சட்டென்ன எழுந்து அவனை பார்த்தேன். அவன் தூக்கத்தில் சிரித்துக்கொண்டு இருந்தான்.

நான் அவன் கனவில் எதோ விளையாட்டு காட்டிக்கொண்டு இருந்திருப்பேன் போலும்.

அந்த கனவில் நாங்கள் என்ன விளையாடி இருப்போம். எதற்க்காக அவன் சிரிக்கிறான். நானும் அவனும் மட்டும் தானா, வேறு யாரவது எங்களோடு இருக்கிறார்களா , எந்த இடத்தில் கனவு நடக்கிறது என்று யோசித்துக்கொண்டு இருந்தேன். அந்த கணத்தில் அவன் கனவில் ஒரு வாழ்க்கை , அவனுக்கு அருகில் படுத்துக்கொண்டு அவனை பார்த்து புன்னகைக்கும் இன்னொரு வாழ்க்கை என இரு வாழ்க்கையை  நினைக்கவே வியப்பாக இருந்தது.

எப்போதும் காலையில் எழும்போது அப்பா எங்கே என்று கேட்டுக்கொண்டே எழுவான். விடுமுறை நாட்களில் அவன் அம்மா , அப்பா ஆபீஸ் போய்டாங்க என்று சொன்னதும் புரண்டு படுத்துக்கொள்வான். ஏதோ ஒரு கணத்தில் நான் அவன் அருகில் படுத்திருப்பதை உணர்துகொண்டால் நெருங்கி கைகளினுள் புகுந்து அணைந்துகொள்வான்.

அவனுக்குள் எதோ ஒரு உணர்வு என்னை தேடிக்கொண்டே இருக்கிறது. கொடியின் நுனி இலைகள் படர்கொம்பை தேடுவது போல

என்னுள்ளும் எதோ ஒரு உணர்வு அவன் அருகாமையை தேடிக்கொண்டே இருக்கிறது. அவன் விலகும் தோறும் அந்த உணர்வை நான் உணர்கிறேன். அவன் என்னை பிடித்து தள்ளி , மேல் ஏறி குதித்து , அடித்து பின் அனைத்து முத்தமிடும் தருணங்களில் அந்த உணர்வு இல்லாமல் ஆவதையும் உணர்கிறேன்.

அந்த ஒற்றை உணர்வு தான் வாழ்வை அர்த்தமுள்ளதாகவும்  அழகாகவும் ஆக்குகிறது.

அவன் வாழ்க ........






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக