"நமக்குள் விழிப்புணர்வு இல்லாதவரை நமக்கு கிடைப்பவை அணைத்தும் வீணே "

ஞாயிறு, அக்டோபர் 13, 2013

கிராமத்து சிற்றுணவும் CHIPSம்

பள்ளி விடுமுறை நாள் ஒன்றில் நானும் கூட்டாலி வெகுளி கோபாலும், காலையில் கேள்விறகு கூழை  வெள்ளம் கடித்து குடித்து விட்டு கிளம்பினோம். ஒரு நீண்ட மூங்கில் அதன் மேல் ஒரு நீண்ட சோல தக்கை, தக்கையின் இறுதியில் சற்று பிளந்து ஒரு சிறிய குச்சி சொருகி கட்டிகொண்டோம்  ( தொறடு ). பள்ளிக்கு எடுத்து செல்லும் மஞ்சள் பை ஒன்று எடுத்துக்கொண்டோம். மாடு மேய்க்கும் பொழுது  பார்தேன்டா காணாத்து ஓரம் கோணக்கா மரத்துல ( கொடுக்கா புலி ) லட்டு லட்டா தொங்குது என்று கோபால் கண்களை விரித்தான். தொரடை எடுத்துக்கொண்டு ஐந்து நிமிடத்தில் கானாற்றை அடைந்தோம். கானாறு தண்ணிரை கானா ஆறு. அதன் ஒரு பக்க நெடுக்கிலும் கோணக்கா மரங்கள். நான் தொரடில் கோணக்கா அறுக்க ஆரம்பித்தேன். சிவந்து வட்ட வட்டமாக காய்கள்.அவைகள் எப்போதும் காய்கள் தான். வெளியே தோல் மட்டும் சிவக்கும். உள்ளே வெண்ணிற சோறு பழுக்காது . மூன்று  வகையான கோணக்க உண்டு. ஒரு வகை சுவைக்கும் , எவ்வளவு வேண்டுமானாலும் தின்னலாம், மறு வகை துவர்ப்பு , ஒன்று தின்றாலே தொண்டை அடைக்கும். இன்னொரு வகை இனிப்பும் இல்லாமல் துவர்ப்பும் இல்லாமல் வெறும் சோறு தின்பது போல இருக்கும். கோணக்க மரம் ஒரு அரசமரம் போல பெரியதாக வளரும் ஆனால் முட்கள் நிறைந்தது . எனக்கும் ஒரு முள் காலில் ஏறியது. ஆ..என்று முல்லை வெளியே எடுத்தால் கொஞ்சம் ரத்தம் வெளியில் வந்து புன்னகைத்தது. கோபால் ஓடி சென்று ஒரு  எருக்கம் இலையை பரித்துவந்தான். அதில் வரும் பாலை ரத்தத்தை துடைத்துவிட்டு அந்த இடத்தில் ஒற்றினான். சில்லென இருந்தது. பின்பு அதன் மீது கொஞ்சம் மண்ணை எடுத்து தூவினான்.  பை முழுவதும்  கோணக்காய் நிரம்பியது. இதுவே போதும் என்று பங்கு பிரித்து கொண்டு நடந்தோம். வழியில் ஒரு உயரமான வரப்பில் அமர்ந்துகொண்டு கோணக்காய் முழுவதும்   தின்று தீர்த்தோம். காலுக்கு கிழே ஓடிய கால்வாய் நீரை எடுத்து குடித்து விட்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தோம். 

 
இன்னொரு நாள் மாலை கோபால் ஓடிவந்து  " பக்கத்துக்கொல்லியில் ஆளடுறாங்க வரியா போலாம் " என்றான்.

ஆளை ஆடுதல் என்றால் ஆலையில் கரும்பை பிழிந்து வெல்லம்  செய்தல் என்று பொருள். இருவரும் ஆலை இருக்கும் இடத்துக்கு சென்றோம். அடிகரும்பை  உடைத்து தின்றோம். கரும்பு ஆலை ஒரு சிறிய இயந்திரம். அதில் மூன்ரு இரும்பு உருளைகள் ஒன்றோடு ஒன்று உரசிக்கொண்டு சுற்றுமாறு பொருத்தப்பட்டு இருக்கும். இதை மோட்டாருடன் இணைக்க ஒரு பெரிய சக்கரம் இருக்கும். பிழிந்த கரும்பு சாறு ஒரு தொட்டியில் சேகரித்து வைப்பார்கள். இந்த சாற்றை கொதிக்க வைக்க இரண்டு மீட்டர் விட்டம் உள்ள பெரிய அடுப்பு அதை விட சற்று பெரிய கொப்பரை இருக்கும். கொப்பரையின் பாதி அளவு கரும்பு சாறு நிரப்பப்படும். அடுப்பை எரிக்க கரும்பு சக்கை காயவைத்து பயன்படுத்துவர். காய்ந்த சக்கைக்கு  ' கோது ' என்று பெயர். சாறு சற்று கொதித்ததும் கொஞ்சம் சுண்ணாம்பு நீர் சாற்றில் விடுவார்கள். சிறிது நேரத்தில் கருப்பான அழுக்கு மற்றும் சகடுகள் மேலே மிதக்கும். ஒரு முனையில் சிறிய கூடை பொருத்திய  நீண்ட கொம்பு மிதக்கும் அழுக்கை எடுக்க பயன்படும். இந்த அழுக்கும் சகடும் பன்றிகளுக்கு உணவாக கொடுக்கிறார்கள். இனி கொஞ்சம் ஐட்ரோஸ் என்ற வேதிப்பொருள் கலந்தால் வெல்லம்  மஞ்சளாக வரும். சிலர் வெண்டக்காய் செடியை இடித்தும் போடுவார்கள். எதுவும் கலக்கவில்லை என்றால் கருப்பாக வரும்.  
ஆற்று ஓரம் விளையும்  கருப்பில்  வெல்லம்  மஞ்சளாக வரும்.ஒரு கம்பில் கலக்கி கொண்டே இருந்தால் சாறு கொஞ்சகொஞ்சமாக வெல்ல பாகாக மாறும். பதம் பார்க்க பாகை கொஞ்சம் தண்ணீரில் விட்டால் முற்றிலும் கரைந்து விட்டால் பதம் இன்னும் வரவில்லை என்று அர்த்தம். அடியில் தேங்கினால் பதம் வந்து விட்டது என்று பொருள். பாகின் மனம் சுவையான மனம் , அது உடல் முழுவதிழும் பரவும். நான்கு பேர் சேர்ந்து கொப்பரையை தூக்கி பாகை ஒரு அகலமான தொட்டியில் ஊற்றுவர். ஊற்றிய பாகை ஒரு முனையில் சிறிய பலகை பொருத்தப்பட்ட கம்பில் துழவிக்கொண்டே இருப்பர் . பாகு சூடு குறைந்து கெட்டியாகத்துவங்கும். முழுவதும் கெட்டியானபின் பாகு, வெல்லமாக மாறும். உதிரி நிலையில் இருக்கும் வெல்லத்தை ஒரு கை குட்டை போன்ற துணியில் இரண்டு கைநிறைய எடுத்து வைத்து உருண்டை உருட்டுவர். உருண்டைகள் சிறிது நேரத்தில் காய்ந்து விடும்.

அங்கு இருந்தவர் கொஞ்சம் சூடான வெல்லத்தை கையில் கொடுத்தார். எங்களுக்கு ஜோங்கு  வெல்லம் வேண்டும் என்றோம். ஒரு சிறிய கரும்பு துண்டை உடைத்து அதன் ஒரு முனையில் கொப்பரையில் மீதம் இருந்த பாகை எடுத்து சுருட்டி தண்ணிரில் நனைத்து கொடுத்தார். பாகு இளம் சூட்டில் மெது மெதுவென இருந்தது. அப்பா அதன் சுவை இன்று நினத்தாலும் நாவில் உமிழ் ஊருது.

ஒரு நாள் நாவல் பழம் தின்னலாம் என கன்னி கோவிலுக்கு சென்றோம். மரம் நல்ல உயரம். நாவல் மரம் வழுக்கும் எளிதில் ஏறமுடியாது. கிழிருந்தே அடிக்கலாம் என கர்களை எடுத்து வந்தோம். கல்லடி அதிகம் வாங்கும் மரங்கள்  மாமரம், புளிய மரம், நாவல் மரம். நம் மூலை அபாரமானது , கண்களில் பழத்தின்  தூரத்தை கணக்கிட்டு எந்த  திசையில் இவ்வளவு விசையில் கல்லை  எரிய வேண்டும் என நொடிபொழுதில் கணக்கிட்டு விடும். கோபாலு கர்களை எறிவதில் கில்லாடி, ஒருகாலை தூக்கி கொண்டு கல்லை முத்தமிட்டு குறிபார்த்து எறிவான் . நாவலின் அடர் நீலம் நாவில் படரும்.  துவர்ப்பும் இனிப்பும் வாய் முழுவதும்  பரவி தொண்டையில் சற்று அடைக்கும். உப்பும் சேர்த்து தின்றால் சுவை கூடும்.  நாவல் மர கிலையில் வில் செய்தால் அம்பு   வெகு தூரம் வரை பாய்ந்து செல்லும் என ஒரு பெரியவர் சொல்லி  கேள்வி பட்டு இருக்கிறேன்.

என் சிறிய வயதில் நாட்டு  பப்பாளி மரம் எங்கள் வீட்டு பின்புறம்  இருந்தது. காய் பழக்காயாக  இருக்கும் போதே பறித்து விடுவோம். உயரமான மரம் என்பதால் குச்சியில் பப்பாளியை தள்ள முடியாது. அதனால்  நான் தான் மரத்தில் ஏறுவேன்.மரத்தில்  இரண்டு கால்களையும் பின்னிக்கொண்டு இரண்டு கைகளாலும் பழத்தை அறுத்து கிழே போடுவேன். மரத்திலிருந்து கிழே இறங்கும் பொது  மேலே பார்க்கக்கூடாது. பழம்  அறுத்த இடத்திளிருந்து  பால் வடியும் , அது கண்களில் பட்டால் கண்கள் சிவந்து எறியும். பழக்காயை அடியில் செதுக்கி விட்டால் இரண்டு நாளில் பழுத்து விடும். பழக்காயை முழுவதுமாக தோல் சீவி சாப்பிட்டால் வெள்ளியே சற்று கடினமாகவும் உள்ளே பழமாகவும் சுவையில் திளைக்கலாம்.

வெயில் காலம் பன நுங்கு காலம். பனமரம் ஏற கூடுதல் கவனமும் பழக்கமும் வேண்டும். எங்கள் நிலத்தில் பனைமரங்கள் இருந்தது. ஆள் வைத்து தான் நுங்கு வெட்டுவோம். என் அண்ணன்கள்  நுங்கு சீவி தருவார்கள்.முதல்லில் இளம் நுங்கு கிடைக்கும். அதை விரைவாக தின்றுவிட்டால் அடுத்து முற்றிய
நுங்கு கொடுத்து விடுவார்கள். அதை கஷ்ட்டப்பட்டு  நோண்டி தின்பதற்குள் அவர்கள் எல்லாம் முடித்துவிட்டு கிளம்பி இருப்பார்கள். ஒரு மாதம் கழித்து வெட்டாத நுங்கு பழுக்க துவங்கும். பழக்காயாக இருக்கும் பொது அதை சீவி ஒரு பானையில் உப்பு போட்டு வேகவைத்தால் அதற்க்கு சக்கை என்று பெயர். அதன் மனம் வீடு முழுவதும் பரவும் சுவை நா முழுவதும் பரவும். பனம்பழம் பழுத்து ஒவ்வொன்றாய்  கிழே விழும். அதை பிளந்தால் மூன்று பகுதியாக பிரியும். உள்ளே மஞ்சள் நாறாக, நார் முழுவதும் சாறாக இருக்கும். பனம்பழத்தை நெருப்பில் சுட்டு தின்றால் அதன் சுவையை எந்த வார்த்தை கொண்டு எழுதுவது தெரியவில்லை. பழத்தை  சுடாமல் ஒரு மண் மேடு அமைத்து புதைத்து வைத்தாள் அது வேர்விட்டு , வேர் பனங்கிழங்காக மாறும். கிழங்கை அவித்து தின்னலாம். கிழங்கு வராத கொட்டையை குறுக்காக வெட்டினாள் உள்ளே தேங்காய் பூ  போல இருக்கும். அதை  வாயில் போட்டால் பஞ்சை தேனில் நனைத்து வாயில் போட்டது போல இருக்கும்.

எங்காவது தென்னை மரம் வெட்டினால் எங்களுக்கு கொண்டாட்டம் தான். மரம் வெட்டிகள் மரத்தின் தலையை வெட்டி ஓரமாக போட்டு விடுவார்கள். அதை நாங்கள் ஒவ்வொரு மட்டையாக குருத்துவரை வெட்டுவோம். தென்னங்குருத்து வெண்மஞ்சலில்  துவங்கி போகப்போக வெண்ணிறமாக இருக்கும். பார்க்கவே அழகாக இழைத்த தந்தம் போல. அதை சாப்பிட்டால் கெட்டியான வெண்ணிலா  ஐஸ் கிரீம் போல சுவைக்கும். நல்ல  வைரம் பாய்ந்த பட்டு போன மரத்தை துண்டாக வெட்டினால் வெட்டிய பகுதியிலிருந்து  நீர் சுரக்கும். அதை ஒரு பாத்திரத்தில் சேமித்து குடித்தால் இளநீரைவிட இரு மடங்கு சுவைக்கும். அரசு தென்னை மரத்திலிருந்து   கள் இறக்க அனுமதித்த பொழுது எங்கள் தோப்பிலும் கள் இறக்கினோம். தென்னம் பாலையை பாதியாக அறுத்து முனையில் கயிர் கொண்டு கட்ட வேண்டும். அதை ஒரு மர சுத்தியல் கொண்டு தட்ட வேண்டும். ஒரு பானையை அதன் மேல் கவிழ்த்தால் மறுநாள் அதில் கள் வடிந்திருக்கும். பானையின் உட்புறம் சுண்ணாம்பு தடவி வைத்தால் பதநீர் வடிந்து இருக்கும். ஒருமரத்து கள் உடம்புக்கு நல்லது என்பர். புதியதாக இறக்கப்பட்ட கள்ளில் பழைய கள் மற்றும் சாக்கிரீம் வேதிப்பொருள் , நீர் கலந்து வியாபாரம் செய்தனர்.

ஒடுக்கத்தூர் கொய்யாபழம் என்றால் வேலூர் மாவட்டத்தில் பிரபலம். மலை சார்ந்த இடம் ஒடுக்கத்தூர். ஆதலால் அந்த ஊர் கொய்யாபழம் தனி சுவை. பக்கத்து தோட்டத்தில் ஒரு மரம் இருந்தது. அதன் பழம் உள்ளே வெண்சிவப்பு வெளியே பச்சைநிறம். அதன் வாசமே எங்களையும் பறவைகளையும் இழுக்கும்.

இந்த பட்டியல் வெகு நீளமானது தென்னை மர பொந்தில் சிறு தேனீக்களை விரட்ட துளசி இலைகளை மென்று அதன் மேல் துப்பி தேனாடையை வாயில் போட்டு  சுவைத்திருக்கிறோம். இரவு நேரங்களில் வேர் கடலை செடியை பிடுங்கி கால்வாய் தண்ணீரில் கழுவி  மண் மனத்தோடு தின்றிருக்கிறோம். அம்மியில் உப்பும், மிளகாய் தூளும் வைத்து நசிக்கிய வெட்டு மாங்காய் , உப்பு தடவிய சிறு நெல்லி, பொறிகலந்த  வறுத்த ஈசல், பழுத்த ஈச்சம் பழம் , மந்தகாளி பழம், சுட்ட கேள்விறகு கதிர், வெள்ளம் கலந்த கம்பு, வறுத்த சோளம், பாதி பழுத்த புளியம் பழம், கோவை இலை எழுதும்  பலகைக்கு கோவை பழம்  எழுதும் நமக்கு.

நாக்கு இந்த அணைத்து சுவைகளையும மூளையில்  அதற்கான  folder யில்
சேமித்து வைத்துள்ளது. சுவைகள்  மறக்காமல்  இருக்கவே நாக்கு எப்போதும் ஈரமாகவே உள்ளது. 

இதில் ஒன்றை கூட என் மகன் விரும்பி உண்பான என ஐயம் தான். அவனுக்கு தெரிந்த சிற்றுணவு சிப்ஸ் மற்றும் சில பிஸ்கட் வகைகள். கிராமத்து   சிற்றுணவு ஒரு தனி உலகம் அதில் சுவை ஒரு அழகான தேடல். அந்த உலகம் என் மகனுக்கு  அறிமுகம் ஆகாமலே போகும் என்பதை நினைத்தால் வருத்தமாகவே உள்ளது. 


செவ்வாய், அக்டோபர் 01, 2013

அம்மாவும் அம்மாவீடும்

அரியூர்

வேலூர் அணைக்கட்டு சாலையில் உள்ள சிறிய ஊர் அரியூர். என் அம்மாவின் ஊர் . வேலூர் ஜெயிலிலிருந்து 5 km தூரம் இருக்கும். என் சிறிய வயதில் ஒரு மாத பெரிய விடுமுறைக்கு ஆயா , தாத்தா வீட்டுக்கு செல்வேன். அன்று நான் பார்த்த ஊருக்கும் இன்று பார்பதற்கும் நிறைய வித்தியாசங்கள். முக்கிய காரணம் இந்த ஊரின் அருகில் புதியதாக முளைத்திருக்கும் பொற்கோவில்.

ஊரின் கீழ் பகுதியில் முஸ்லிம் மக்களும் ஒரு மசூதியும் ஒரு கடை தெருவும் இருகிறது. அதற்கும்  மேற்பகுதியில் ஹர்ஜன மக்கள் வாழும் தெருக்கள் இருகிறது.  அதை தொடர்ந்து அனைத்து சமுக மக்களும் வாழும் பகுதியும் இருக்கும்.

மோட்டு பஜார் என்ற கடைத்தெரு உள்ளது. அது தான் இந்த ஊரின் முக்கிய பேருந்து நிற்கும் இடம். காலையும் மாலையும் வேலைக்கு செல்வோர் வருவோர் இங்கு கூடுவர்.

பொற்கோவில் அம்மா சாமீ வளரும்  போது இந்த ஊரின் சுற்றி இருந்த பகுதிகள்  அனைத்தும் விலைக்கு   வாங்கப்பட்டது. சில இடங்கள் ஆயிரங் கலில்,  சில இடங்கள் லட்சம் கோடிகளில். ஊரின் தோற்றம் முற்றிலும் மாறியது. பெரிய பெரிய வீடுகள் கடைகள் முளைத்தன. பொற்கோவிலை சுற்றி கோவிலுக்கு சொந்தமான மருத்துவமனை, பள்ளிகூடம் , விடுதிகள் என ஒரு பெரிய ஊராக மாறிவிட்டது.

இன்று பொற்கோவில் இருக்கும் இடம் முன்பு மலைக்கோடி என்ற சிறிய கிராமமாக இருந்தது. ஒரு சிறிய மலை மேலே முருகன் கோவில் இருக்கும் . என் தாத்தா அங்கு காவடி எடுத்து செல்வார். சுற்றி இருந்த கிராமங்களிலிருந்தும் காவடி எடுத்து வருவார்கள். இப்போது அந்த கோவில் இருப்பதாக தெரிய வில்லை.  அரியூரிளிருந்து நிறைய பேர் இங்கு சிறிய பணிகளுக்கு செல்கிறார்கள்.

இன்றைய நிலையில் அரியூர்  வேலூருக்கு அருகில் இருக்கும் ரியல் எஸ்டேட் தங்க சுரங்கம். Sq ft 2000 முதல் 3000 வரை போகிறது.

தாதா வீடும் தொழிலும் 

இப்போதைக்கு அந்த ஊரில் மிகவும் பழமையான வீடு அந்த வீடு. நுழைவாயிலின் இருபுறமும் பெரிய திண்ணைகள். அதை தொடர்ந்து சிறிய தாழ்வாரம். வலதுபுறம் ஒரு அறை, அது பூஜை அறையாக இருக்கிறது. அதை தொடர்ந்து இடப்புறம் ஒரு  தாழ்வாரம் நீளும். அதன் இறுதியில் ஒரு பெரிய அறை இருக்கும். வீட்டின் பின்புறம் இரண்டு அறைகள் கொண்ட ஓட்டு வீடு. இறுதியாக ஒரு கிணறு.

80 களின் இறுதியில் இந்த வீட்டில் ஒருமாதம் பள்ளி விடுமுறை நாட்களில் தங்கி இருக்கிறேன்.


என் தாத்தா தி.க. ராமன் , பாட்டி கமலா. தாத்தா சற்று பருமனான உருவம். கொஞ்சம் சாயிந்து , சாயிந்து நடப்பார். ஒட்ட நறுக்கிய தலை முடி, நெற்றி  நிறைய விபுதி , முட்டி வரை கதர் வெண் ஜூ ப்பா, வெள்ளை வேட்டி அணிந்து இருபார். காலையில் எழுந்து சூரியனை பார்த்து மந்திரம் சொல்லுவார். பின்பு பூஜை அறையில் நின்று சுப்ர பாதம் சொல்லுவார். உடல் நிலை சரி இல்லாமல் யாராவது வந்தால் மந்திரம் சொல்லி வேப்பிலை அடித்து திருநீர் கொடுப்பார் . எப்போதாவது சிரிப்பார். ஆயா ( பாட்டி ) மஞ்சள் பூசிய மங்களகரமான முகம் அந்த காலத்தில் எட்டாம் வகுப்பு வரை படித்திருந்தார்.

இவர்களுக்கு ஐந்து பெண்கள் மற்றும் கடைசியாக அவர்கள் எதிர் பார்த்தது போலவே எங்கள் மாமா.

இவர்களின் முக்கிய குடும்பத் தொழில் பீடி சுற்றுவது.  ராதா  கிஷ்ணா பீடிகள் என்று பெயர். அரியூர்  முதல் அணைக்கட்டு, ஒடுக்கத்தூர்,ஆலங்காயம் வரை வழியில் உள்ள எல்லா கிராமங்களுக்கும் சைக்கில் மற்றும் பேருந்தில் சென்று பீடி விநியோகம் தாத்தா செய்தார்.

பீடி ஒரு முக்கியமான குடுசைத் தொழில் , நிறைய கிராம பெண்கள்  இந்த தொழில் செய்கிறார்கள். பீடிக்கான முக்கிய மூலப் பொருட்கள் பீடி இலையும், புகை இலை  தூளும். இவை இரண்டும்  ஒரிசா மற்றும் அசாம் மாநிலத்திலிருந்து வேலூர் மார்கெட்டுக்கு வருகிறது. பீடியின் தரம் இந்த இலை, மற்றும் புகை இலையின் தரத்தை பொறுத்து அமையும். நல்ல இலையாக இருந்தால் ஒரு கிலோ இலை, 200 கிராம் புகை இலை தூளூக்கு 1000 பீடிகள் வரை வரும்.

இலையை ஒரு நாள் முழுவதும் தண்ணிரில் ஊறவைக்க வேண்டும். பின்பு சீசா என்ற  தகட்டை அளவாக வைத்து  இலைகளை கதிரிகோலால் வெட்ட வேண்டும். சீசா தகட்டின் அளவை பொறுத்தே பீடியின் அளவு இருக்கும் .வெட்டிய இலைக்குள் புகை இலை தூளை  உள்ளே வைத்து சுருட்ட  வேண்டும். பின்பு மெல்லிய நுர்கண்டால் கட்ட வேண்டும். இப்போது ஒருபுறம் அகலமாகவும் மறுபுறம் குறுகியும் பீடி இருக்கும். அகலமான திறந்த பகுதியில் மறுபடியும் புகை இலை  தூளை நிரப்பி மூட வேண்டும். பீடியின் இரண்டு பக்கம் மூடுவதற்கு சிறிய விரல் நீளமே உள்ள கத்தி பயன் படுத்துகிறார்கள். இந்த வேலைக்கு புண்ணி மூடுதல் என்று பெயர்.

24 பீடிகள் ஒரு கட்டாக கட்டி மறுபடியும் நாள் முழுவதும் வெயிலில் காயவைத்து பின்பு ஒவ்வொரு கட்டாக எடுத்து பீடியின் தரம் பார்க்கப்படும்.
அளவு குறைந்த பீடிகள், வளைந்த பீடிகள், சரியாக இறுக்கி சுற்றாத பீடிகள் களையப்படுகிறது. இந்த வேலைக்கு கழித்தல் என்று பெயர். பின்பு ஒரு சதுரமான காகிதத்தில் கட்டை வைத்து மடித்து ஓட்ட வேண்டும். பின்பு 14 கட்டுகள் சேர்த்து  லோகோ போட்ட பேப்பரில் ஒரு பண்டலாக சுற்றி ஒட்டப்படுகிறது.

பீடி சுற்றுதல் மற்றும் கழித்தல் ஆகிய வேலைகளை முக்கியமான ஆட்கள் செய்கிறார்கள்.புண்ணி மூடுதல் மற்றும் பண்டல் பொடுதலை சிறியவர்கள் செய்கிறார்கள். நிறைய முஸ்லீம் பெண்கள், கூலிக்கு பீடி சுற்றி கொடுத்தார்கள். தினமும் பீடியை சுற்றி கொடுத்து விட்டு ஒரு சிறிய நோட்டில் குறித்துவைத்துக்கொண்டு மாதா  மாதம் கூலியை பெற்றுக் கொண்டார்கள்.அவர்கள் பெரும்பாலும் தாத்தாவை " நைனா " ( அப்பா ) என்றே அழைத்தார்கள்.

தாத்தா காசை மிகவும் சிக்கனமாக செலவழித்தார். ஐந்து பெண்களுக்கும் ஒரு மகனுக்கும் திருமணம் செய்வித்தார். திருப்பதி பெருமாள் மீது தீராத பக்தி கொண்டிருந்தார். இறக்கும் வரை உண்டியல் கட்டி வருடா வருடம் திருப்பதி சென்று வருவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

அந்த வீட்டினுள் எப்போதும் பீடி இலையின் வாசனை உலவிக்கொண்டே இருக்கும். அந்த வீட்டில் யாரை நினைத்தாலும் அந்த வாசமும் சேர்ந்தே ஞாபகம் வரும். தாத்தாவை நினைத்தால் முதலில் நினைவுக்கு வருவது அந்த வாசம் தான். 

மாமா ஒரு நிழல் 

நான் எப்போது விடுமுறைக்கு சென்றாலும் மாமாவுடன் தான் அதிகநேரம் சுற்றுவேன். 80களின் இறுதியில் அவருக்கு திருமணம் ஆகாமல் இருந்தது. தாத்தா சற்று தளர்ந்ததும் கடைகளுக்கு பீடி இவர்தான் எடுத்து செல்வார். பெரும்பாலும் அவர் எங்கு சென்றாலும் நானும் உடன் செல்வேன். வேலூர் சற்று பரிச்சயம் ஆனது அவரால் தான்.

அம்புலி மாமா புத்தகம் அதிகம் வாசிப்பார். அவருடன் சேர்ந்து  நானும் வாசிப்பதுண்டு. அந்த புத்தகத்தில் வரும் அந்த கால ராஜாக்கள் மற்றும் குடிமக்கள் பற்றிய கதைகள் அதில் வரும் ஓவியங்கள் மனதில் அப்படியே பதிந்துள்ளது. பின்னாளில் இந்த பதிவுகளின் தொடற்சியாக வரலாற்று நாவல்களை தேடித்தேடி படித்தேன். அம்புலி மாமா புத்தகம் ஒரு கட்டத்தில் பதிப்புகள் நிற்று விட்டன. இப்போது மறுபடியும் கிடைகிறது போலும்.

 நானும் மாமாவுடன் சேர்ந்து சிறு சிறு வேலைகள் செய்வதுண்டு. ஒரு சிறிய ரேடியோ வீட்டில் இருந்தது .செய்திகள், கர்நாடக இசை என்று மதிய வேலை முதல் மாலை வரை ஒலித்துக்கொண்டே இருக்கும். பெரும்பாலும்  பீடி சுற்றும் நபர் அருகில் ரேடியோ ஒலித்துக்கொண்டு இருப்பதை பார்த்திருக்கிறேன். மாமாவுக்கு பழைய  A.M.ராஜா மற்றும் P.B. ஸ்ரீநிவாஸ் பாடல்கள் மிகவும் பிடிக்கும். அவருடன் சேர்ந்து எனக்கும் பிடித்துபோக "பாட்டு பாடவா பாட்டு  கேட்டகவா" பாடலில் துவங்கி எண்ணற்ற பாடல்கள் மனனம் செய்து பாடிக்கொண்டு இருந்தேன்.

பெரும்பாலும் எனது கிராமத்தில் விளம்பரம் செய்து கொண்டு வரும் ஆட்டோ பின்னால் நான் ஓடி இருக்கிறேன். ஆனால் முதல் முறையாக பீடி விளம்பரம் செய்ய  வில் நானும் மாமாவும் சென்றோம். "இனிக்க மனக்க புகைக்க சிறந்தது ராதா கிர்ஷ்ணா பீடிகள்" , வாங்கி புகைத்து மகிழுங்கள்  ராதா கிர்ஷ்ணா பீடிகள் என்று  ரேடியோவில் தொடர்ந்து  ஒலிக்க எல்லா கிராமங்களுக்கும் சென்றோம். ஆட்டோ பின்னால் ஓடிவந்த குழந்தைகளுக்கு நோடீஸ்சை தூக்கி எரிந்துகொண்டே வந்தேன்.

தொரப்பாடி டென்ட் தியேட்டரில் பழயப்படங்கள்  நிறைய பார்ப்போம். சந்தொரோதயம் M.G.R படம் பார்த்தது இன்னும் நினைவில் உள்ளது. ஒரு ரூபாய்  டிக்கெட், தரையில் நன்றாக காலை நீட்டி அம்மர்ந்து கொள்ளலாம். பீடி புகையின் வாசம் வீசிக்கொண்டே இருக்கும். இடைவேளையில் முறுக்கும் டீயும் கிடைக்கும். சிறிய  வயதில் என்  அம்மா இந்த தியேட்டரில் படம் பார்த்ததாக சொன்னார்கள். ஆனால் இப்போது தியேட்டர் இல்லை, வீடுகள் ஆகிவிட்டது.

மாமாவும் அந்த வீடும் ஒரு பெரிய மரத்தின் நிழல் போல, தேடி திரிந்து , தொலைந்து , கிடைத்து , மகிழ்ந்து , அழுது , களைத்து அமரலாம் என்று எங்களில் யாருக்கு தோன்றினாலும் நினைவுக்கு வருவது மாமாவும் அந்த வீடும் தான். ஐந்து அக்காமார்கள் , அவர்களின் பதினேழு பிள்ளைகளின் இன்ப துன்ப நிகழ்வுகளில் அவரின் உதவியும் பார்வையும் இருக்கும். என் பெரியம்மா ஒருவர் நோய் வாய் பட்டு இறக்கும் தருவாயில் மாமா தான் பார்த்துக்கொண்டார். இன்றும் என் அம்மாவிற்கு உடல் நிலை சரியில்லை என்றால் மாமா வந்து ஒரு முறை பார்க்க வேண்டும் என்று நினைப்பார். வருடம் தோறும் தன் அக்காக்கள் மற்றும் அவர்களின் பிள்ளைகள் யார் வருகிறார்களோ அவர்களை அழைத்துக்கொண்டு திருப்பதி சென்று வருகிறார்.

எங்கள் மீதும் என் அப்பா மீதும் உள்ள நம்பிக்கையை விட அம்மாவுக்கு தம்பி மீது அதிக நம்பிக்கை உள்ளது.

அம்மாவும் அம்மாவீடும் 

அம்மா அப்பாவின் கல்யாணம் 1970 ல் நடந்திருக்கலாம் .அப்போது அப்பாவுக்கு 30 வயது அம்மாவுக்கு 14 வயது. கல்யாணத்துக்கு முதல் நாள் தான் என் அப்பா, அம்மாவை பார்த்தாராம். அம்மாவும் அப்படியே. பெண் பிடிக்காமல் அப்பா தென்ன தோப்பில் யாருக்கும் தெரியாமல் படுதுக்கொண்டராம். எல்லோரும் சென்று அவரை தேடி சமாதான படுத்தி அழைத்து வந்திருகிறார்கள். இதை அறிந்ததும் அப்பாவின் பழைய புகை படத்தை தேடி எடுத்து பார்த்தேன் . ஒல்லியான உருவம் இயல்பான கருப்பு , தலை முடி கர்லிங் வைத்து பெரிய கிர்தா  வைத்து அந்த கால ஹீரோக்களை பிரதி பலித்தார். அம்மா நல்ல நிறம் அழகும் கூட ஆனால் உலகம் அறியாதவர். வயதில் சிறிவர், ஆதலால்அப்பாவின் கிண்டல் பேச்சு அம்மாவை எளிதில் ஓடிக்கி விட்டது. இன்றும் அது தொடர்கிறது. மற்ற படி அவர்களின் வாழ்வியல் முறை எல்லோரும் போலவே அது வேறு தளம்.  

சமிபத்தில் அம்மாவும் நானும் அவர்கள் வீட்டுக்கு சென்றிருன்தோம். அன்று ஒரு நிகழ்வை கவனித்தேன். அம்மா முகம் எப்போதும் இல்லாமல் மலர்ந்தது. சின்ன சின்ன விசயத்திற்கு கூட வாய்விட்டு சிரித்தார். காலை நீட்டிக்கொண்டு வெகு நேரம் கதை பேசிக்கொண்டு இருந்தார்.  வழக்கத்திற்கு மாறாக அதிகம் சாப்பிட்டார். ஒரு குழந்தை போல நான் என் அம்மாவை அன்று உணர்ந்தேன்.
காலையில் தனக்கு பிடித்த சேமிய வாங்கி வரச்சொன்னார். அது ஒரு சுகந்திரமான மகிழ்வு நிலை. அது அனுபவத்தில் புரியும்.

பிறந்த வீடு சிலருக்கு ஒடுக்கப்படும் அனைத்து  இயல்புகளையும் வெளிப்படுத்தும்  தளமாகவும், வெகு தூரம் சுடும் தரையில் நடந்தபின் கிடைக்கும் ஒருகுடம் குளிர்ந்த நீர் போலவும் இருக்கிறது.

அம்மா இருக்கும் வரைதான் அம்மா வீடு என்றொரு வழக்கு ஆனால் என் அம்மாவுக்கு அது விதிவிலக்கு.