"நமக்குள் விழிப்புணர்வு இல்லாதவரை நமக்கு கிடைப்பவை அணைத்தும் வீணே "

ஞாயிறு, டிசம்பர் 29, 2013

ஒரு ஊர்ல ஒரு பள்ளிக்கூடம் - 1

அணங்காநல்லூர்  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி (வேலூர் மாவட்டம் ).அணங்காநல்லூர், மோட்டூர், கார்னாம்பட்டி, வாத்தியார்பட்டி, பட்டுவாம்பட்டி, ஏரிக்கரை என சுற்றி உள்ள கிராம பிள்ளைகளுக்கு ஒரே பள்ளிக்கூடம்.

என் பாட்டி தான் என்னை பள்ளியில் சேர்த்தாங்க . நுழைவு தேர்வு இல்லை, அப்பா அம்மா படித்திருக்க தேவை இல்லை, ஏங் பாட்டிகூட படித்திருக்க தேவை இல்லை , நன்கொடை ( கொடையே நல்லது நன்கொடை நல்லது அல்ல ) தேவை இல்லை, சிபாரிசு தேவை இல்லை ஆனா நீங்க ஒன்னாவுதுல சேரத்துக்கு ஒரே ஒரு தகுதி வேணும், உங்க வலது கைய அப்படியே உயர்த்தி தலைமேல மடக்கி இடது காத தொடணும் அவுளவுதான்.

தலைமை ஆசிரியர் சுப்பிரமணியம் நம்ம பக்கத்து ஊர்காரர் , அதனால சுற்று வட்டாரத்தில் அனைவரையும் தெரியும். அப்பா பேர் சொன்னதும் சேர்த்துக்கொண்டார்.

80பதுகளில் ரேடியோ தான் உலக தொடர்பு சாதனம். காலை 7.15க்கு செய்திகள் அதைதொடர்ந்து நிகழ்ச்சி நிரல், 7.40க்கு இன்று ஒரு தகவல் , தென்கட்சி  சுவாமிநாதன் தகவலை சொல்லுவார். நெருக்கமான மொழி நடையில் சிறிய கதையோடு அவர் சொன்ன தகவல்கள் இன்றும் வாழ்வோடு பயணித்து வழிகாட்டுகிறது. 7.45க்கு தமிழ் பாடல்கள் அதை தொடர்ந்து  8 மணிக்கு ஒரு இசை வரும் , அதுவே ம்ம்ம் டைம் ஆச்சு school க்கு ஓடு என சொல்வது போல இருக்கும் , அதற்குள் நானும் செங்கல் போடி அல்லது கரிதூள் அல்லது கோபால் பல்பொடியில் பல்விளக்கி, பம்பு செட்டில் குளித்து, பழயதை தின்று ஓடுவதற்கு தயாராகவே இருப்பேன். ஒரு பை அதில் பலகை மற்றும் பல்பம் போட்டு வைக்கும் டப்பா. ஒரு பக்க சிறகு போல அது தோளில் தொங்க, டப்பாவும் பலகையும் மோதி டங் டங் என சத்தத்துடன் பள்ளிக்கு ஒரு சிறிய பயத்தோடு ஓடுவேன். இன்றும் நான்  காலையில் வேலைக்கு கிளம்பும் போது coffee யில் மெலிதாக எழும் ஆவி போல பயம் எழுவது அதன் நீட்சியாக இருக்கலாம்.

இங்க ஒன்னு கவனிக்கணும், முதல்ல எங்க ஊர்ல "பள்ளிக்கூடம் போகலியா " ? என கேட்பாங்க . ஆனால் தானியார் பள்ளிகளில் கொஞ்சம் வசதியானவங்க புள்ளைங்கள சேர்த்தாங்க. அப்புறம் எங்க பள்ளிக்கூடத்தை  "school " அப்படின்னு கூப்பிட ஆரமிச்சிட்டாங்க.

காலையில் prayer. அதில் தமிழ் தாய் வாழ்த்து ( நீராரும் கடலோடுத்த ) இரண்டு பெண்களே தினமும் பாடும்,ஒருகட்டதில் தாங்க முடியாமல் டேப் ரெகார்டரில் போட்டார்கள்,  அப்போது தான் தெரிந்தது அது எவ்வளவு அழகான பாடல் என்று. ( ஒரு நாள் இந்த பாடலை நீராரும் ஓ !ஓஹோ கடலோடுத்த ஓ !ஓஹோ என மச்சான வச்சிக்கடி முன்தான முடிச்சிலதான் பாட்டு மெட்டில் பாடிக்கொண்டு இருந்தேன் P .T வாத்தியார் தலமேல ஒரு அடிவிட்டார்) . பின்பு ஒரு குறளும் அதன் பொருளும் சொல்வார்கள், தினமணி செய்தித்தாள் வாசிப்பர், உறுதிமொழி ஒருவர் சொல்ல மற்றவர் சேர்ந்து சொல்லவேண்டும். அதில் இருந்த வார்த்தைகள் எனக்கு மறந்து விட்டது, ஆனால் ஒரு பெரிய அரசமரத்தை காற்று உலுக்குவதை போல  500 சிறுவர் சிறுமியர் சேர்ந்து ஒலிக்கும் போது ஏற்பட்ட  அதிர்வு இன்னும் நினைவில் இருக்கிறது. வெள்ளிகிழமை மட்டும் காலையில் தேசிய கொடி ஏற்ற வேண்டும். தேசிய கொடியில் மரமல்லி பூ போட்டு அழகாக மடித்து கட்டி பாதிவரை ஏற்ற பட்டு இருக்கும். ஒரு சிறுவன் மார்ச்பாஸ் அடித்து தலைவர் போல் நிற்கும் ஒரு சிறுவனிடம் கொடியின் கயிறை அவிழ்த்து கொடுப்பான். தலைசிறுவன் மெதுவாக அதை மேல் ஏற்றி கொடியை அவிழ்த்து பறக்க விடுவான். அனைவரின் கர ஒலி முடிந்ததும் தலைசிறுவன் சுதந்திர தியாகி யாராவது ஒருவரை பற்றி பேச வேண்டும். அதன்பின் தேசிய கொடி வாழ்த்து பாடலான தாயின் மணிக்கொடி பாரீர் பாடல் பாடப்படும். 

கிராமத்து சிறுவர்கள் எந்த தன்ஒழுக்க கட்டுக்குள்ளும் வருவது இல்லை. கெட்ட வார்த்தைகளை பெற்றோர் மற்றும் சூழ்லையிலிருந்து எளிமையாக எடுத்து கையாள்வர். வன்முறையில் வலியவன் வகுப்பில் அனைவராலும் மதிக்கபடுவான். ஒரே சாதி சிறுவர்கள் ஒன்றாய் விளையாடுவர். 

படித்தால் மட்டுமே வாழ முடியும் என யாரும் அவர்களை பயமுறுத்துவது இல்லை. ஏனெனில் கிராமத்தில், படித்தால் மட்டுமே வாழ முடியும் என்ற நிலை இல்லை.  நகரத்திலிருந்து வரும் ஆசிரியர்கள் இவர்களை ஒழுக்க எல்லைக்குள் நிருத்தவே படாதபாடுபடுவர். அதன்பின் அவர்களுக்கு கல்வி அளிப்பது இன்னும் சிரமமான விஷயம். ஆனாலும் சில ஆசிரியர் மாணவர்களுக்கு பிடித்தமானவர்களாக இருந்தார்கள். அவர்கள் பாடங்களை ஒரு சுவாரசியமான கதைகளாக மாற்றி நடத்தினார்கள். 


ஞாயிறு, டிசம்பர் 22, 2013

மகன் வயது ஒன்றரை


காலையில் எழுந்தவுடன்  உடல் முறுக்கி திமிர் விடுகிறான்.

படுக்கைலிருந்து இறங்கி வீட்டில் இருக்கும் இரு அறைகளையும் ஒரு நோட்டம் விட்டுவிட்டு டிவியை எழுப்பி அதில் விளம்பரம்  வருகிறதா என பார்க்கிறான். டிவியில் அவன் விளம்பரங்களை தவிர வேறெதுவும் பார்ப்பது இல்லை. பின்பு விளையாட துவங்கி விடுகிறான்.

எந்த பொருளுக்கும் அவனிடத்தில் எந்த மதிப்பீடும் இல்லை. ஆதலால் அவனை பொருத்தவரை எல்லா பொருளும் விளையாட்டு பொருள்தான்.
வயிறு  நிறைந்தாள் உணவை வைத்து விளையாடுகிறான். சமையல் அறையில் பாத்திரங்கள், குளியல் அறையில் தண்ணீரோடு ,  படுக்கை அறையில் படுக்கையில், அம்மாவின் அழகுசாதன பொருட்கள், என் சுத்தியல், திருப்பிலி , அடுக்கி வைத்த துணிகள் , துப்புரவு பொருட்கள் என அவன் விளையாடும் பொருட்களின் பட்டியல் நீளும். அவன் பொம்மைகளை அதிகம் தொடுவது இல்லை. ஏனெனில் அவன் எங்கள் இருவரை பார்த்து கற்றுக்கொள்ள நினைக்கிறான். ஆதலால் நாங்கள் உபயோகிக்கும் பொருட்களே அவனுக்கும் தேவைபடுகிறது. சில நேரங்களில் நானும் அவனும் விளையாடுவோம். அவன் உற்சாகத்தோடு ஏறி குதித்து , சிரித்து மகிழ்ந்து , ஓடி சுழன்று விளையாடுவான். அந்த உற்சாகம் எனக்குள்ளும் பொங்கும் ஆனால் ஐந்து நிமிடங்களுக்கு மேல் நீடிக்காது. மறுபடியும் மனம் இறுகி அமைதியாகிவிடும். ஆனால் அவன் தொடர்ந்து அதே நிலையில் இருப்பான். இந்நிலையில் அவன் முன் எஞ்ஞாநியும் அஞ்ஞானியே .

ஒருநாள் parkக்கு அழைத்து சென்றேன். பரந்த புல்வெளியில் விளையாட விட்டேன். திடீரென உற்சாகம் கொண்டு புல்வெளி முழுவதும் கைகளை உயர்த்தி ஓட துவங்கினான். ஆனந்தமாக  ஓடிக்கொண்டே இருந்தான். என்னால் அவனை பிடிக்கவே முடியவில்லை. பெரிய மழைத்துளிகளை போல அவன் பாதங்கள் புல்வெளியில் படர்ந்து கொண்டே இருந்தது. அங்கிருந்த புல்வெளியும், சறுக்கு மரங்களும் , ஊஞ்சலும் மணல் பரப்பும் அவனை ஈர்க்கவில்லை, ஆனால் அந்த திறந்தவெளி அவனை ஈர்த்தது. மூச்சுமுட்ட அந்த திறந்தவெளியை பருகித்திளைத்தான்.

அவன் விரும்பி உண்ணும் உணவு என்று எதும் இல்லை. பசித்தால் பழைய சோறு முதல் பாதாம் பருப்பு வரை தின்பான்.  இப்போது ஊட்டுவது பிடிக்கவில்லை, அவனே இரைத்து பூசி தின்றால் ஒரு திருப்த்தி.

இட்லியை இட்டா அல்லது இட்டி என்பான். ஹலோவுக்கு ஹலா என்பான். இன்னும் சில நாளில் ஒரு புது மொழி எங்கள் வீட்டில் உலாவும் என நினைக்கிறேன்.

தூங்கும்முன் கட்டை விரலை வாயில் வைத்துக்கொள்கிறான். தூக்கத்தை உறுஞ்சி குடிக்கிரானோ என தோன்றும். அம்மா தலைமீது கொஞ்சநேரம், எங்களுக்கு இடையில் கொஞ்சநேரம், குருக்குவெட்டாக கொஞ்சநேரம் என புரண்டுவிட்டு இறுதியில் காலுக்கு அடியில் தூங்கிவிடுவான்.

கோவம் தெரியவில்லை ஆனால் வீம்பு உள்ளது. அழ தெரிகிறது ஆனால் துக்கம் தெரியவில்லை. அவன் நினைத்ததை செய்கின்றான் ஆனால் ஒரே மாதிரி அல்ல. சிரித்தாள் கண்களும் சிரிக்கின்றது.

அவன் விரல் பிடித்து என் உலகத்திற்கு அவனை அழைத்து வர இது வரை எனக்கு தோன்றவில்லை . அவன் மழலையில் திளைத்திடவே எனக்கு நேரம் போதவில்லை.

ஞாயிறு, டிசம்பர் 08, 2013

கவனம்


 நானும் என்னோடு வேலை செயும் சவுதி நண்பரும்   காரில்   சென்றுகொண்டு இருந்தோம். நாங்கள் சென்றுகொண்டு இருந்த சாலையின் இருபுறமும் ஆடு மற்றும் ஒட்டகங்களை வளர்க்கும் பண்ணைகள் அதிகம் இருந்தது. பண்ணையை சார்ந்த மனிதர்கள் சவுதியின் பாமர மக்கள் என்று அழைக்கப்படும் பத்து இனமக்கள். அவர்கள் வாகனம் ஓட்டுவது வரையறை இல்லாமல் இருக்கும். அதனால் நான் மெதுவாக வாகனத்தை செலுத்திக்கொண்டு இருந்தேன். எங்களுக்கு இணையாக இன்னொரு வாகனம் வந்துகொண்டிருந்தது. திடீரென அது எங்களை முந்திக்கொண்டு எங்கள் பக்கம் வளைந்து குறுக்கு சாலையில் நுழைய முனைந்தது. நான்  நிலை இழந்து அந்த வண்டியின் பக்கவாட்டில் மோதி நிறுத்தினேன். எனக்கு ஆழ்ந்த பயமும் அதை தொடர்ந்து கடும் கோவமும் ஏற்ப்பட்டது. தமிழிலேயே திட்டி தீர்த்தேன். 

இந்த ஊரில் வண்டிகள் மோதிக்கொண்டால் யார் மீது தவறு என்று ஒருவரை ஒருவர் சண்டையிட்டு  பணம் கேட்க்க தேவையில்லை. போலீஸுக்கும் , இன்சூரன்ஸ் companyக்கும்  phone செய்தாள் போதும் அவர்களே வந்து யார் மீது தவறு என்று உறுதி செய்து    இன்சூரன்ஸ் பணத்துக்கு ரசிது தருவார்கள் அதை கொண்டு நாம் வண்டியை சரிசெய்து கொள்ளலாம். உயிர் சேதம் வந்தாள் தவறு செய்தவர் மீது கேஸ் போடுவர். அதனால் சிறியதாக மோதிகொண்டவர்கள் சண்டையிடாமல் கை கொடுத்து போலீஸ் வரும்வரை பேசிக்கொண்டு இருப்பர்.

நான் இடித்த வண்டியில் இருந்து ஒரு வயதான பெரியவர் இறங்கி வந்தார். அவரை பார்த்தவுடன் என் கோவம் சற்று தனிந்தது. அவர் மெல்லிய புன்னகையுடன் கை கொடுத்தார். நானும் கை கொடுத்தேன். அவர் ஏதோ அரபியில் பேசினார்  ஆனால் எனக்கு புரியவில்லை. ஆனால் அவர் புன்னகையை , மன்னித்துவிடு நான் தெரியாமல் வண்டியை வளைத்து விட்டேன் என்பதாக புரிந்து கொண்டேன். என் புன்னகையின் அர்த்தம் , பரவாயில்லை வண்டிக்கும் எனக்கும் எதுவும் ஆகவில்லை என்பதாக இருந்தது. 

அவரே போலீஸ்க்கும் , இன்சூரன்ஸ் companyக்கும் phone செய்தார். தொழுகை நேரம் என்பதால் அருகில் இருக்கும் மசுதிக்கு சென்று தொழுகை முடித்து திரும்பி வந்தார்.

போலீஸ் வந்ததும் முதலில் அவரிடம்  நடந்ததை பற்றி விசார்த்தனர். பின்பு என்னிடம் வந்தனர் நானும் நடந்ததை விளக்கினேன். அவர் மறுபடியும் போலீசிடம் பேசினார். நான் அருகில் இருந்த அரபிநண்பரிடம் அவர் என்ன சொல்கிறார் என்று கேட்டேன். நீ பொய் சொல்லுவதாகவும் நீயும் அதே வழியில் திரும்புவதாக சென்று திரும்பாமல் நேராக வந்து அவரை மோதியதாக அவர் சொல்கிறார் என்றார். எனக்கு மறுபடியும் கோவம் தலைக்கு ஏறியது. ஆனால் போலீஸ் அவர் மீது தான் தவறு என்று சிட்டு எழுதி கொடுத்துவிட்டு களைந்து செல்லுமாறு கூரினர். அவர் போலீசை திட்டிக்கொண்டே அங்கிருந்து சென்றார்.

ச்சே என்ன பெரிய மனுஷன் இவன் தப்பு பண்ணிட்டு இப்படி பொய் சொல்றான் என்று திட்டிக்கொண்டே நானும் வண்டியை எடுத்துக்கொண்டு officeக்கு கிளம்பினேன். அவர் முதலில் என்ன நினைத்து என்னிடம் கை கொடுத்திருப்பார் என்று யோசித்தேன் இன்னும் கோவம் அதிகமானது. 

இரவு படுக்கும்போது இதைபற்றி யோசித்துக்கொண்டு இருந்தேன். ஏன் எந்த ஊரிலும் தவறை ஒத்துக்கொள்ள மறுக்கிறார்கள், அறம் என்பது எல்லா மனிதருக்கும் நாடு, நிறம், மொழி , மதம் தாண்டி பொது தானே என்று மனம் அலை பாய்ந்து கொண்டே இருந்தது.  அப்போது ஒரு எண்ணம் தோன்றியது ஒருவேளை அவர் பார்வையில் அவர் சொல்வது உண்மையாக இருக்குமோ, அவரும் என்னை திட்டிக்கொண்டே தான் சென்றிருப்பார். நான் இன்னும் சற்று வேகமாக வந்திருந்தாலும் அவருக்கு பலத்த அடி பட்டிருக்கும். இப்படி மனம் மாற்றி யோசித்த பின்னே மனம் அமைதியானது , தூக்கம் வந்தது.

கவனக்குறைவு விபத்தின் முதற்முக்கிய காரணம். வேகம், வண்டியின் நிலை, சாலை, ஓட்டுனரின் உடல்நிலை அடுத்தடுத்த காரணங்களாகின்றன.