"நமக்குள் விழிப்புணர்வு இல்லாதவரை நமக்கு கிடைப்பவை அணைத்தும் வீணே "

திங்கள், மே 16, 2016

முனுசாமி ஓட்டு


ஊரில் இருந்தால் ஒரு நாள் விடுமுறை கிடைத்து இருக்கும். ஆனால் இங்கு வழி இல்லை.

நான் முதன் முதலில்  ஓட்டு  போட போனது இன்றும் நினைவில் இருக்கிறது. சைக்கிளை எடுத்துகொண்டு  ஓட்டு போடா ஜோராக கிளம்பினேன். நான் படித்த கிராமத்து பள்ளி தான்ஓட்டு போடும் இடம்.  அங்கு என் ஒன்றுவிட்ட அண்ணன் மகன் மற்றும் பலர் ஓட்டு போட வருவோருக்கு பட்டியலில் பெயர் பார்த்து எழுதி கொடுத்துக்கொண்டு இருந்தார்கள் . நான் அவனிடம் சென்று நின்றவுடன் பட்டியலை தேடிப்பார்த்தான் பின்  சித்தப்பா உன் ஓட்டு போட்டாச்சி சித்தப்பா என்று  கூறினான். டேய் யாரா போட்டது என்றால் தெர்ல சித்தப்பா என்று சொல்லிவிட்டு திரும்பி டேய் அந்த முன்சாமி ஓட்டு போட்டாச்சா , இல்லனா என்றான் பக்கத்திலிருந்த இன்னொரு பொடியன். சரி சித்தப்பா இத போட்டுடு வா என்று சீட்டை கொடுத்தான். முனுசாமி வயது 60 என்று இருந்தது. டேய் என்னடா இது மாட்டிப்பெண்டா என்றேன். அட போ சித்தப்பா நானே எத்தன வாட்டி போறது என்றான். வழி துணைக்கு ஒரு ஆளையும் அனுப்பினான்.

வந்தவன் தலைவரே மை வச்சவோனேயே அழிச்சிடு அப்பத்தான் இன்னொரு வாட்டி போக முடியும். வெங்காயம் வெச்சி தேச்சா கூட போய்டும் என்றான். டேய் என்னடா நடக்குது இங்க என்று கேட்டேன். தலைவரே ஒன்னும் பயப்புடாத வேண்ணா நூறு  மில்லி போட்டுக்கோ சரியா பூடும் என்றான். கடந்த ஒரு மாதமாக தலைவர் என்ற வார்த்தை அவன் நாக்கில் ஒட்டிக்கொண்டது என்று நினைத்தேன். பார்க்கும் எவரையும் அவன் அப்படித்தான் அழைத்தான். பள்ளியை நெருங்க நெருங்க பயம் தொற்றிக்கொண்டது. அங்கு போலீஸ் ஒருவர் நின்றிருந்தார். கூடவந்தவன் வணக்கும் தலைவரே என்றான் .  ஏய் நீ இன்னா சும்மா சும்மா இந்த பக்கம் வர்ற போடா அந்தபக்கம் என்றார் . எனக்கு வற்றை கலக்கி கால்கள் நடுங்கின. திரும்பிவிடலாம என்று நினைக்கும் தருணத்தில் போலிஸ் நீ மட்டும் உள்ள போ என்றார் . நான் அப்படியே ஓரமாக நடந்து தப்பித்து விடலாம் என்று திரும்பினேன் ஆனால் என் பங்காளிகள் என்னை என்ன நினைப்பார்கள் , வரலாறு பயன்தாகொள்ளி என்று பேசாதா  என்று நினைத்து உள்ளே நுழைந்து விட்டேன்.

அங்கு தெரிந்தவர்கள் நெறைய பேர் இருந்தார்கள். அங்கிருந்த பெண்மணியிடம்  பயசிரிப்போடு  பவ்வியமாக அந்த சீட்டை நீட்டினேன். என்னை மேலும் கிழும் பார்த்துவிட்டு அங்கு அமர்ந்திருந்த பூத் எஜண்ட்க்களை பார்த்தார். பின் ஏதோ சைகை கிடைத்து அவர் வைத்திருந்த பட்டியலை பார்த்துவிட்டு உங்க பேரு என்றர். நான் உலர்ந்த ஒலியில் முனு சாமி என்றேன். அவருக்கே சிரிப்பு வந்துவிட்டது. ஏங்க இந்த ஓட்டு முன்னாடியே போட்டசிங்க வெளிய போங்க என்றார். இது என்னடா ஜனநாயகத்துக்கு வந்த சோதனை என்று அமைதியாக திரும்பி விட்டேன். என்னை கூட்டிவந்தவன் அந்த போலீசிடம் சாவகசமாக பேசிக்கொண்டு இருந்தான். என்னை பார்த்து முடுஞ்சுதா தலைவரே என்றான். இல்லை என்று வேகமாக நடந்தேன். எதோ ஒரு பெரிய ஆபத்திலிருந்து தப்பிய மனநிலை. விடுபடல். சுகந்திரம். 

தூரத்தில் மகன் தெரிந்தான். தைரியத்தை முகத்தில் படரவிட்டு நிதானமாக அவனிடம் என்னடா ஓட்டு போட்ட பேரை மறுபடியும் குடுத்து இருக்க என்றேன். ஓ போட்டாச்சா . அவன் திரும்பி டேய் அந்த கண்ணியம்மா கிழவிது போட்டாச்சா பார்ரா என்றான். எனக்கு உள்ளுக்குள் மறுபடியும் ஆணி அடித்தது. சரி நா போய் சாப்புட்டு வரேண்டா என்று சைக்கிளை தாறு மாறாக மிதுத்துக்கொண்டு வீடு வந்து சேர்ந்தேன்.

இப்போது  மின்னணு வாக்கு பதிவு , அடையாள அட்டை என்று நிறைய வந்துவிட்டது.  அதன் பின் நான் ஒரே முறைதான் ஓட்டு போட்டேன். பெரும்பாலும் வெளியூரில் இருப்பேன். இப்போது வெளிநாட்டில்.

நான் அங்கு இருந்தால் வேட்பாளர்களை ஒரு அலசு அலசி இருக்கலாம். ஆனால் இப்போது அது முடியாத காரியம்.

வெற்றி பெருபவருகளுக்கு வாழ்த்துக்கள். வாழ்க ஜனநாயகம். வாழ்க தமிழகம்.

 







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக