"நமக்குள் விழிப்புணர்வு இல்லாதவரை நமக்கு கிடைப்பவை அணைத்தும் வீணே "

சனி, டிசம்பர் 31, 2016

இன்றே கடைசி 2016


இந்த வருடம் வேலையில் ஒரு மிகப்பெரிய ப்ரொஜெக்ட்டை மே மாதம் முடித்தோம். அது ஒரு குழு வெற்றி. பல முன்னிலைகளில் நானும் ஒருவன். ஆனால் எங்கள் நிறுவனத்தில் இது போன்ற வெற்றிகளை உணவு களியாடல் நிகழ்வுகள் முலம் கொண்டாடவோ அல்லது இரவு பகல் உழைத்து குலையும் தொழிலாளர்களை அழைத்து ஒரு பாராட்டு கூட்டம் நடத்தும் வழக்கமோ அல்லது தனிப்பட்ட முறையில் பாராட்டும் பழக்கமோ இல்லை. நிறுவனத்தின் உள் கட்டமைப்பு பல காரணங்களால் அதை அனுமதிப்பதில்லை என்று நினைக்கிறேன்.

புதியதாக நிறுவத்தில் இணைந்தவர்கள் என்ன சார் இது இவ்வளவு பெரிய ப்ராஜெக்ட் முடிச்சிருக்கோம் ஒண்ணுமே இல்லையா என்று கேட்டு அதிர்ச்சி அடைவார்கள்.  என்னை  போன்று வெகுநாட்களாக உரலை ஆட்டிக்கொண்டு இருப்பவர்களுக்கு அதுவும் ஒரு சாதாரண நிகழ்வு. அன்றய நாளும் ஒரு சாதாரண நாளாகத்தான் கடந்து போகும்.

எங்கள் குழுவில் பணிபுரிந்த தம்பிகளை மட்டும் வீட்டுக்கு அழைத்து ஒரு மத்திய விருந்து நானும் கவிதாவும் கொடுத்தோம். அது இந்த வருடத்தில் ஒரு நல்ல மற்றும் மகிழ்ச்சியான நினைவு.

கொஞ்ச நாட்கள் முன்புவரை கூட ஒரு ப்ராஜெக்ட் முடிக்கும்போது ஆகா முடித்துவிட்டேன் வெற்றி வெற்றி என்று என் மனம் கொண்டாடியது . ஆனால் இப்போது அதுவும் வடிந்துவிட்டது. இது போன்ற நிகழ்வுகள்  ம்.... அப்படியா என்ற அளவிலேயே கடந்து போய்விடுகிறது.

அடுத்த பெரிய நிகழ்வு கிராமத்தில் வீடு காட்டியது. வீடு கட்டுவது எங்களுக்கு ஒரு பெரிய கனவு என்று சொல்ல முடியாது. வீடு கட்டும் பணி   கால சூழலில் தன்னியல்பாக அமைந்தது. இதுவும் அநேகம் பேரின் நல்ல கூட்டு முயற்சி. நிறைவாக அமைந்தது.

எனக்கு உள்ளார்ந்து மகிழ்வை உண்டாக்குவது குடும்பம், நண்பர்கள், பயணம் , புத்தகம், கொஞ்சம் நாட்டு நல பணி.

இந்தவருடம் வீடு கட்டுவதற்காக மகனும் மனைவியும் என்னை ஆறு மாதம் பிரிந்து இருந்தார்கள். அதுவே பெரும் சோர்வைத்தந்தது.

இந்தவருடம் பழைய நண்பர்கள் யாரையும் சந்திக்கமுடியவில்லை. ஒவ்வொரு வருடமும் குடும்பத்துடன் நான்  மேற்கொள்ளும் பயணமும் நான்மட்டும் தனியாக ஊர் சுற்றி அலையும் பயணமும் அடுத்த ஒரு வருடத்துக்கு பெரும் உற்சாகத்தை அளிக்கக்கூடியது. ஆனால் இந்தவருடம் அதுவும் இல்லாமல் போனது சோர்வை அளித்தது.

இந்த வருடம் மூன்று நாவல்களை படித்தேன்.

1. வெய்யோன் - வெண்முரசு
2. பன்னிரு படைக்கலம் - வெண்முரசு
3. சொல்வளர்க்காடு - வெண்முரசு

மூன்றுமே என்னை பெரும் அலைக்கழிப்புக்கு உள்ளாக்கிய நாவல்கள். ஒரு சடைமுடி  சூடிய முதுமுனி முன் அமர்ந்து சொல் கேட்பது போல் இருந்தது இந்த நாவல்கள்.

இந்த வருடம் இரண்டு சமூக நிகழ்வுகள் என் மனதை பெரிதும் பாதித்தது. ஒன்று பியூஸ் மனுஷ் சமூக ஆர்வலர் கைது மற்றும் அவர்மேல் நடந்த வன்முறை.

இரண்டாவது முதல்வர் ஜெயலலிதாவின் மரணமும் அதை தொடர்ந்து நடக்கும் நாணமற்ற நாடகங்களும்.

ஒருவனை நான் என் பிரதிநிதி என்று வாக்களித்து நியமிக்கிறேன். அவன் சென்று ஒருவரின் காலில் விழுந்தால் நானும் காலில் விழுந்ததல்லவா அர்த்தம்.

மக்களுக்காக எந்த கலப்பணியும் செய்யாமல் எந்த மக்களையும் எந்த பகுதியிலும் சந்திக்காமல் ஒரு சின்ன மக்கள் நல போராட்டம் கூட நடத்தாமல் அவர்களின் நம்பிக்கையும் நன்மதிப்பையும் பெறாமல் ஒருவர் அனைவருக்கும் முதல்வராக முடியும் என்பதை சாமான்னிய எளிய மனம் கொண்ட என்னால் சகித்துக்கொள்ளவே முடியவில்லை.

இந்த வருடம் கொஞ்சம் சோர்வான வருடம் தான்.


ஆனாலும்  இந்த வருத்தத்தில் என் மகிழுக்கும் வாழ்வுக்கும் உதவிய அனைத்து நண்பர்களுக்கும் அன்பர்களுக்கும் நன்றி மற்றும் பல்லாண்டு பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்.

2017 புதுவருடம் முழுவதும் இனிதே அமைய வாழ்த்துக்கள்.




சனி, டிசம்பர் 10, 2016

நீயா நானாவில் ஆசிரியரும் மருத்துவர்களும்

நான் பார்த்தவரை கிராம மக்களின் வாழ்வியல் ஆதாரங்களில் ஒன்று அவர்களின் உடல் வலிமை. மண் எப்படி அவர்களுக்கு உணவு தருகிறதோ அதே போல அவர்களுக்கு உடல் வலிமையையும் தருகிறது. தினமும் மண்ணோடு புழங்கும் அவர்களின் கைகள் இறுக்கி  இருக்கும். தென்னை  ஏறும் ஏகாம்பரத்தின் வயிறு மரத்தின் கணுவரிகளை போலவே கட்டுக்களாக இருக்கும். தினமும் பத்து கிலோ மீட்டர் சைக்கிளில் பால் கேன் கொண்டுபோகும் நடராஜனின் தொடை திரண்டு வழியும். ஈரமான  புள் கட்டை பொருட்டே இல்லாமல் தலையில் ஏற்றி கதை பேசிக்கொண்டு வருவார் காமாட்சி அக்கா. பெரிய மக்கேறி ( பெரிய கூடை )  நிறைய தேங்காய்களை தோப்பிலிருந்து சுமந்து  வந்து வண்டிப்பதை அருகே கொட்டிக்கொண்டே இருப்பார்கள் சாந்தியும், அம்பிகா அக்காவும். காலையில் சூரியன் எழுவதற்குள் தென்னங்கன்றை நடுவதற்கு  பத்து குழிகளை எடுத்துவிட்டு நீரில் உரிய பழைய கேள்விறகு களியை பூசனை இலையில் வைத்து  கீரை குழம்பில் ஊற்றி நாவூற ஒலி எழுப்பி சாப்பிடுவார் சின்னத்துரை. இன்னும் இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.

கவிதாவின் அப்பா விவசாயி. அவருக்கு காலில் அடி பட்டுவிட்டது. நான் என்னப்பா கால் சரியா போச்சா என்றேன். அது அப்பவே சரியாப்போச்சு எனக்கு அடிப்பட்டா டக்குன்னு ஆறிடும். பாரு என்று காலை காண்பித்தார். அப்பொதுதான் புரிந்தது அந்த கேள்வி அவரை கொஞ்சம் சீண்டி இருக்கும் என்று.

என் அப்பாவும் அப்படிதான் தன் உடல் வலிமையை முதல்முற்றாக நம்புபவர். ஊருக்கு சென்றாலும் நல்ல இருக்கியா நைனா என்று நான் கேட்பதே இல்லை. அப்படியே தெரியாமல் கேட்டுவிட்டாலும் ஏன் என்னக்கு என்ன என்று கோவமும் சங்கடமும் கலந்த குரலில் கேட்ப்பார்.

ஆனால் ஊரில் கடந்த பத்து பதினைந்து வருடங்களில் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்திருக்கிறது. விவசாய நிலங்கள் முழுவது தென்னை மரங்கள் நடப்பட்டுள்ளன. சில கோழி பண்ணைகள் வந்துவிட்டன. சிலர் மேஸ்திரி வேலைக்கு பெங்களூர் சென்று விட்டனர். சிலர் வெல்டிங் , பீரோ வேலைக்கு சென்றுவிட்டனர். சிலர் படித்து வேலை கிடைத்து வெளியூர்களுக்கு சென்றுவிட்டனர். பெண்கள் பெரும்பாலும் shoe கம்பனிகளுக்கு சென்றுவிட்டனர். மேலும் பலர் நூறு நாள் வேலைக்கு போகிறார்கள்.

மக்களிடையே உடல் வலிமை என்ற ஆதார சுருதி குறைந்துகொண்டே வருகிறது. மக்களுக்கு மண்ணுடனான உறவு இன்று இல்லை. மதுவும் அவர்களை மட்க்க வைக்கிறது. இதயநோய், கல்லிரல் , சிறுநீரக பழுது, கண் பாதிப்பு, நீரழிவு  போன்ற நோய்கள் இன்று  எங்கள் கிராமத்தில் சாதாரணமாக புழங்குகிறது. கிராமத்தில் இறப்பு என்பது மாடுமுட்டி, கிணற்றில் தவறி விழுதல் , பாம்பு கடித்து, மரத்திலிருந்து விழுதல் , மின்கம்பிகளை மிதித்தல், தற்கொலை , பிரசவம் , வையோதிகம் என்று தான் நிகழும். ஆனால் இன்று முதல் காரணம் நோய்.

எங்கள் ஊர் பகுதியில்   மூன்று ஊருக்கு சேர்த்து ஒரு சுகாதார நிலையம் இருக்கிறது. அதில் குழுமுபவர்கள் பெரும்பாலும் தினக்கூலி வேலை செய்பவர்கள், வயோதிகர்கள்.

அங்கு வரும் அரசு மருத்துவர்களும் மருத்துவ பணியாட்களும்  வெளியூர்காரர்கள் என்பதால் தன் கீழ்மைகளையும், அதிகாரத்தையும்  வெளிக்காட்டுவதில்லை. ஆனால் சிறிய நகரம் மற்றும் நகரங்களில் நிலைமை முற்றிலும் வேறு.

அங்கு அலட்சியமும் அதிகாரமும் முன்னிறுத்தப்படுகிறது. சில விதிவிலக்குகளை தவிர்க்கலாம்.

கவிதாவுக்கு ஒருமுறை நள்ளிரவில் கடும் வயிறுவலி ஏற்பட்டது. அழைத்துக்கொண்டு அரசு மருத்துவமனைக்கு  சென்றோம். இரவு பணியில் இருந்த நர்ஸ் என்ன என்று கேட்டுவிட்டு ஒரு ஊசியை எடுத்து தயவில்லாமல் குத்தினார்.

ஊசி குத்தும் முறை ஒன்று உள்ளது. தோளில் எங்கு குத்த வேண்டும். எந்த கோணத்தில் குத்தினால் தோலின் எந்த அடுக்கில் மருந்து ஏறும் என்று வரையறை உள்ளது. எதை பற்றியும் யோசிக்காமல் அந்த ஊசி போடப்பட்டதால் கவிதாவுக்கு வயிற்றுவலியோடு கை வலியும் வந்துவிட்டது.

ஆனால் அத்தகைய மறுத்தவமனைகளில் ஒன்றை கவனிக்கமுடியும். நோயாளிகளும் அவர்களை கவனித்துக்கொள்ள வருபவர்களும் ஒருவரை ஒருவர் பரஸ்பரம் நலன் பகிர்ந்துகொள்கிறார்கள். கவிதா தீடீர் என்று வாந்தி எடுத்துவிட்டாள். அருகே தன் மருமகளை பார்த்துக்கொள்ள வந்த கிழவி மெதுவாக எழுந்துவந்து வெளியே சென்று ஒரு பாத்திரத்தில் தண்ணிர் எடுத்துவந்து தரை முழுவதும் சுத்தமாக கழுவி துடைத்துவிட்டு ஒரு சொல்லும் சொல்லாமல் மறுபடியும் சென்று அமர்ந்துகொண்டது. கிழவியின் காலில் விழுந்து விடலாமா என்று கூட எனக்கு தோன்றியது.

நான் நேற்று யூ டியூபில்  வேறு எதையோ தேடிக்கொண்டு இருந்தேன். அப்போது இந்த வீடியோ பார்த்தேன். நீயா நானாவில் ஆசிரியர் கலந்து கொண்ட பதிவு.

அவர் என்ன சொல்ல வருகிறார் என்றே மருத்துவர்களுக்கு புரியவில்லை. அப்போதே ஆசிரியர் முடிவு செய்திருப்பார் இனி தொலைக்காட்சி விவாதங்களில் கலந்துகொள்ள போவதில்லை என்று.

இந்த நிகழ்ச்சி கடைசியாக எழுப்பிய கேள்வி இதுதான்.

நம் சென்னை அரசு மருத்துவமனையில் மிகசிறந்த மருத்துவர்கள் இருக்கிறார்கள் என்று நான் கேள்வி பட்டு இருக்கிறேன் அனைத்து விதமான மருத்துவ வசதிகள் இருக்கிறது என்கிறார்கள் . ஆனாலும் ஏன் நம் முதல் அமைச்சர்களை தனியார் மறுத்தவமனையில் சேர்க்கிறோம் ?

http://www.hotstar.com/tv/neeya-naana/1584/doctors-vs-the-public/1000031339






செவ்வாய், டிசம்பர் 06, 2016

மயில் கழுத்து ஒலி வடிவம்

திரு எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் எழுதிய "அறம் " சிறுகதை தொகுப்பிலிருந்து "மயில் கழுத்து "

வாசிப்பது " கிராமத்தான் "


ஜெயலலிதா

பெண்களை ஒடுக்கும் தோறும் அடக்கி சிறுமை செய்யும் தோறும் அவர்கள் தன் அறிவால், அழகால் , பெண்மைக்கேயான தனி சிறப்பால் அவற்றைக்கடந்து சென்று கொண்டே இருக்கிறார்கள்.

ஜெயலலிதாவும் அப்படி தான் என்று நினைக்கிறேன். அவர் அரசியலில் வாழ்வின் துவக்க நாட்களில் அவரை நசுக்க நினைத்திருப்பார்கள், அவமான படுத்தி , இழிந்துரைத்து ஏளனப்படுத்தி இருப்பார்கள் . அவை அத்தனையும் அவர் ஆளுமையை வடிவமைத்திருக்கலாம். இறுக்கமாக அணுகமுடியாதாராக ஆக்கியிருக்கலாம். ஆண்மையை பணியவைத்திருக்கலாம். கடந்துவரும்தோறும் தன்னை சக்திமிக்கவராக உணர்ந்திருக்கலாம்.

பெண்மை - சக்தி

பெண்மை போற்றுதும்.