"நமக்குள் விழிப்புணர்வு இல்லாதவரை நமக்கு கிடைப்பவை அணைத்தும் வீணே "

திங்கள், டிசம்பர் 29, 2014

2014

2014 ஆண்டு ஒரு இனிமையான வருடமாக கழிந்தது. இனிமையின், மகிழ்வின் ஊற்று  எங்கள் இரண்டரை வயது மகன் தான். கூடுதல் எடையோடு , இரண்டு தலைகளோடு இந்த வருடம் முழுக்க சுற்றினேன்.

நான் பார்க்கும் தொழிலில் இந்த வருடம் கொஞ்சம் மந்த நிலைதான்.

ஆனால் தனிப்பட்ட வாழ்வில் எனக்கு பிடித்ததெல்லாம் செய்துகொண்டு இருக்கிறேன்.

ஜுபைல் சொல்வேந்தர் மன்றத்தில் சேர்ந்து தமிழை தடை இல்லாமல் மேடையில் பேசும் திறனை வளர்த்துக்கொண்டு இருக்கிறேன்.

என் blogகிளும் facebook பக்கத்திலும் நான் பார்த்த படித்த விஷயங்களை எழுத முயன்றேன்.

புத்தகங்களை அதிகம் வாசித்தேன்

1. வென்முரசு - முதற்கனல் -ஜெயமோகன்
2.வென்முரசு - மழைபாடல் -ஜெயமோகன்
3.வென்முரசு - வண்ணக்கடல் -ஜெயமோகன்
4. வென்முரசு - நீலம் - ஜெயமோகன்
5. வென்கடல் - ஜெயமோகன்
6. யாமம் - எஸ். ரா
7. எனது இந்தியா - எஸ். ரா
8.ஆழிசூழ் உலகு - ஜோடி. குருஷ்
9. மிளிர் கல் - இரா. முருகவேல்
10. வனவாசம்  - கண்ணதாசன்
11. குருதிபுனல் - இந்திரா பார்த்தசாரதி
12. 20 க்கும் மேற்பட்ட சிறுகதைகள்

கடந்த வருடம் இனிதே அமையா உதவிய நண்பர்கள், உறவினர்கள், நலம்  விரும்பிகள் அனைவருக்கும் நன்றி.









ஞாயிறு, டிசம்பர் 28, 2014

விசும்பல்

குழந்தைக்கு ஐந்து மாதங்கள் முடிந்து , அவன்  அழைத்து செல்ல வந்ததுமே அவள் நிலையழிந்தாள்

துக்கம் துளிர்த்து கண்களில் முட்டி முட்டி நின்றது.

இரைச்சலும்  வெம்மையும் நிரம்பி வழிந்த பேருந்து நிலையத்தில்
அவர்கள் ஊர் செல்லும் பேருந்துக்காக காத்து நின்றனர்.

பேருந்து நுழைந்ததும் மதகு திறந்த ஏரிநீர் போல காத்திருந்த மக்கள் அதை நோக்கி ஓடி திறந்திருந்த நுழைவுகளில்லெல்லாம் புகுந்து இடம்பிடித்தனர்.

ஜன்னல் வழியாக தாவியேறி இடம்பிடித்து குழந்தையை அவன் வாங்கிக்கொண்டான்.

உடல் தளர்ந்து, உளம் சோர்ந்து அவள் வந்து அமர்ந்தாள்.

தன்னுள் புகுந்த அத்தனை மனித உடல்களையும் வளைத்து நெளித்து ஒற்றை உடலாக மாற்றியது பேருந்து.

வேற்று ஆணின் மூச்சுக்காற்று தன் கழுத்தில் உணர்ந்த பெண்கள் நெளிந்து விலக முயன்றனர்.

பெண்ணின் தோள்கள் நெஞ்சில் உரசிய ஆண்கள் சற்று வளைய முயன்று தோற்றனர்.

குழந்தை வெம்மையில் உருகி அழத்துவங்கியது. பால் புட்டியை எடுக்க கையை பையில் துழாவியபோது துணியெல்லாம் நனைந்து இருந்தது.

மெல்லிய பயம் ஊறி கை நடுங்கியது. வெறும் புட்டியை கையில் வைத்து            " பால் "  என்று நடுங்கும் குரலில் அவனிடம் சொன்னாள்.

"சனியன் " என்று சொல்லிவிட்டு புட்டியை பிடிங்கிக்கொண்டு ஜன்னல் வழியாகவே இறங்கி வெளியில் சென்றான்.

நேரம் ஏற ஏற குழந்தையின் அழுயொலி  மெலிதாகி விசும்பலாக மாறியது.

அவன் வரவே இல்லை. பேருந்து மெதுவாக நகரத்துவங்கியது. பயத்தில் அழும் குரலில் " ஏங்க பஸ்ஸ நிர்த்துங்க " அவர் பால் வாங்க போயிருக்காரு " என்றாள் .

" எவ்வளவு நேரம் இன்ன பண்ணிநிருந்திக " என்று வல்லேன்றார் நடத்துனர்.

அவள் ஜன்னல் வழியே அவனை தேடியபடியே தவித்து நடுங்கினாள், பேருந்து நகர்ந்து கொண்டே இருந்தது.

" ஏம்பா பஸ்ஸ நிறுத்துங்க பா " என்று நடுவயது பெண்மணி ஒருவர் பெருங்குரலெடுக்க, பேருந்து நின்றது.

சிறிது நேரம் கழிய " ஏம்மா இறங்குமா வேக்காடு தாங்கல  " என்று ஒரு குரல் எழுந்தது.
அவள் இறங்க எழுந்ததும் , அந்த குரலுக்கு சொந்தக்காரன் அந்த இடத்தில் அமர்ந்துகொண்டான்.

குழந்தை விசும்பிக்கொண்டே இருந்தது. அவள் அருகிலிருந்த டீ கடைக்கு சென்று குழந்தைக்கு பால் வேண்டும் என்றாள்.
பாலை நன்றாக ஆறவைத்து டீ கிளாஸ் கழுவும் தண்ணீர்ல் மேலும் குளிரவைத்து டீ மாஸ்டர் அவளிடம் நீட்டினார்.

மூன்று விரல்களை அந்த பாலில் முக்கி குழந்தையின் வாயில் வைத்தாள்.
விரலை சப்பி சப்பி பாலை குடித்தது குழந்தை. கடைசியில் மீந்த பாலை அவள் வாயில் உற்றிகொண்டாள்.

குழந்தை தூங்கியபின் அவன் நினைவு வந்து அந்த மாஸ்டரிடம் கேட்டாள்.
ஒருவன் வந்து பால் வேண்டும் என்று ஐனூறு ரூபாய்யை நீட்டினான்.  சில்லறை  இல்லை என்றதும் போய்விட்டான் என்றார்.

தலையை கைகளில் தங்கிக்கொண்டு அமர்ந்திருந்தாள்.

முன்பொருநாள் பள்ளிவிட்டு அவள்  வரும் வேளையில் அப்பா அவனை அறிமுகப்படுத்தினார். அவன் சைக்கிளில் ஒரு மட்டக்கோல் இருந்தது. தலை முழுக்க சிமன்ட் பரவி இருந்தது. குடிபோதை அவன் கண்களிலும் சிரிப்பிலும் வழிந்து கொண்டிருந்தது. நிக்க முடியாமல் சைக்கிளை பிடித்துக்கொண்டு இருந்தான். "பொண்ண நல்லா பாத்துக்கப்பா என்றார் அப்பா "

அன்று அழத்துவங்கியவள் இன்னும் அழுதுகொண்டு இருக்கிறாள்.

சாற்று தயங்கி அண்ணா இங்கு டாஸ்மார்க் ஏதாவது பக்கத்துல இருக்குதா என்று கலங்கிய விழிகளில் டீ மாஸ்டரை கேட்டாள்.

புதன், டிசம்பர் 24, 2014

கதைகள்


ஜுபைல் தமிழ் சொல்வேந்தர் மன்றத்தில் பேசியது


ஒரு நிகழ்வுக்கு வாரத்தைகள் மூலமாகவோ  அல்லது எழுத்தின் மூலமாகவோ ஒரு வடிவத்தை கொடுத்தால் அதை கதை என அழைக்கலாம்.

அந்த நிகழ்வு நடந்த ஒன்றாக இருக்கலாம். முழுக்க கற்பனையாக இருக்கலாம் அல்லது இரண்டும் கலந்து இருக்கலாம்.

மனிதன் கற்பனை செய்யத்துவங்கியது  முதல் கதைகள் உருவாகிவிட்டன. கதைகள் இல்லாத காலம் ஒன்று மனித வரலாற்றில் இல்லை எனலாம்.

நம் கலைகள் அனைத்தும் ஏதாவது ஒரு கதையை நமக்கு சொல்லிக்கொண்டே இருக்கிறது. கலைகள் மூலம் கதைகளும் கதைகள் மூலம்   கலைகளும் ஒன்றைஒன்று வளர்த்தேடுத்துக்கொள்கிறது.

ஆனால் இன்றைய நிலையில் கதைகள் நம் அன்றாட வாழ்வுக்கு அவசியம் இல்லை என்ற பொது மனநிலை மக்களிடைய இருக்கிறது.

கதை படிப்பவன் ஒரு கனவு மனநிலையில் இருக்கிறான். அவன் வாழ்வின் எதார்த்தங்களை புரிந்துகொள்வதே இல்லை என்ற கண்ணோட்டம் இருக்கிறது.

பிள்ளைகள் படிக்கும் போது பாடபுத்தகங்களை தவிர வேறு எந்த புத்தகங்களையும் நாம் படிக்க அனுமதிப்பது இல்லை. கதை புத்தகங்கள் உனக்கு "சோறு போடுமா " என்று கேட்ப்போம்.

உண்மையில்  கதைகள் ஒரு மனிதனுக்கு தேவைதானா ?
அது எந்தவகையான மாற்றங்களை  நமக்குள் ஏற்படுத்துகிறது ?

ஏன் கதைகளை படிக்க வேண்டும் ?

நம் வாழ்வில் தினம் தினம் எத்தனயோ நிகழ்வுகள் நடக்கின்றன. அதில் பாதிக்கும் மேற்பட்ட நிகழ்விலிருந்து நாம் எந்த அனுபவங்களையும் நேரடியாக பெற்றுக்கொள்வது இல்லை. ஆனால் அது நம் அகத்தை வடிவமைக்க பயன்படுகிறது. அதே போல தான் கதைகளும்.

நம் சலிப்புற்ற அன்றாட வாழ்வில் உணர்வுகளின் உச்சத்தை அடைவதே இல்லை. மகிழ்வின் உச்சத்தை, கொண்டத்ததின் உச்சத்தை , காம குரோத மோக உச்சத்தை, பயத்தின் உச்சத்தை. ஆனால் கதைகள் எளிமையாக  நமக்குள் அவற்றை நிகழ்த்திவிடும்.

நம்மை நாமே அறிந்துகொள்ள கதைகள் உதவும். ஒரு கதையில் உள்ள கிழ்மையை நாம் ஆர்வத்தோடு படித்தால் அது நம் மனதில் உள்ள கிழ்மையை நமக்கு காட்டிகொடுத்துவிடும். அதே போலதான் மேன்மையையும்.

நான் ஒருகட்டத்தில் வரலாற்று கதைகளை ஆர்வமாக படிக்கத்துவங்கினேன்.
அப்போதுதான் என்னக்கு வரலாறு பிடிக்கும் என்பதை அறிந்துகொண்டேன்.

கதை படிப்பவன் கனவுலகத்தில் கற்பனையில் வாழலாம் ஆனால் அவர்களால் தான் இந்த உலகத்தில் அழகான விஷயங்கள் நடக்கின்றன.

இப்படி தனிப்பட்ட மனிதனுக்கும் கதைகளுக்கும் இடையுள்ள தொடர்பை சொல்லிக்கொண்டே போகலாம் .

ஒரு கதைக்கும் ஒரு சமூகத்திற்குமான தொடர்பு என்பது முக்கியமான ஒன்று.

பாட்டி வடை சுட்ட கதையை கொண்டு எங்கள் ஊரில் பாட்டிகள் கூட உழைத்து உன்ன விழைகிறார்கள் , நரி என்பது  தந்திரத்துக்கும் , ஏமாற்றுக்கும் பயன்படும் ஒரு படிமம், காக்கை அறிவுக்கும் புத்திசாலி தனத்துக்கும் ஒரு பயன்படும் படிமம்  என்று நம் சமுகத்தின் நிலையை விளக்கிவிட முடியும்.

ஒரு குலம் தன் மூதாதையரின் கதைகள் வழியாக தனக்கான விழுமியங்களையும் , கட்டுப்பாடுகளையும் வடிவமைத்துக்கொள்கிறது.

நம் நாட்டின் ஒட்டு மொத்த பண்பாட்டு மரபையும் ஒரு சிறிய கதைக்குள் அடக்கி அதை காலம் தோறும் பயணிக்கச் செய்ய முடியும்.

மனிதம்  கண்டடைந்த வாழ்வின் உயரிய தத்துவங்களை  நம் வாழ்வின் ஒரு பகுதியா மாற்ற  கதைகள் பயன்படுகின்றன. ஜென் , சூபி , கீதை கதைகள் போல.

கதைகள் இல்லாத சமூகம் அடையாளம் இல்லாத சமூகமாக மாறிவிடும்.

வாழ்வை முன்னகர்த்துவதர்க்கு கொஞ்சம் தொழில்நுட்ப பயிற்சியும் அதை சார்ந்த அறிவும், நம்மை சுற்றி நடக்கக்கூடிய வாழ்வியல் நிகழ்வுகளும் அது தரும் அனுபவங்களும் நமக்கு போதாதா ? என்று கேட்பவர்களுக்கு கதைகள்  தேவை இல்லை.

ஆனால் வாழ்வை கொண்டாட நினைப்பவர்களுக்கும், உயர்ந்த நாகரீகத்தை நோக்கி நகர நினைக்கும் சமூகத்திற்கும் கதைகள் தேவை.

ஞாயிறு, டிசம்பர் 21, 2014

பாக்கிஸ்தானி நண்பர்

கடந்த வாரம் பாக்கிஸ்தானில் நடந்த குண்டுவெடிப்பு மனதை கனக்க செய்கிறது.
இன்று ஒரு பாக்கிஸ்தான் நண்பரிடம் இதை பற்றி பேசிக்கொண்டு இருந்தேன் .

கைபர் பக்துன்கவா மாவட்டம் ஆப்கானுக்கு அருகில் பழங்குடிகள் அதிகம் வாழும்  பகுதி. காடும் மலைகளும் நிறைந்த அந்த பகுதியை அரசு அதிகம் கவனம் செலுத்தவில்லை. அந்த பகுதி மக்கள் மேல் தலிபான்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர். பெரும்பாலான மக்கள் அவர்களை நம்புகின்றனர். இது அரசை நெருக்கடிக்குள்ளக்குகிறது.

இப்போது பாக்கிஸ்தான் ராணுவத்தின் பெரும் பகுதி அங்கு குவிக்கப்பட்டு இருக்கிறது. இங்கு நடந்து வரும்  நிகழ்வுகளுக்கு பின்னால் பலநாடுகளின் தந்தி மீட்டல் இருக்கிறது. காஷ்மீரில் பதட்டம் குறைக்கும் பொருட்டு பாக்கிஸ்தான் ராணுவத்தின் கவனத்தை அந்த எல்லையில் திசை திருப்ப நம் நாடு கூட அந்த பகுதியில் வேலை செய்யலாம் என்று அவர் கூறிய போது நான் வெறுமனே மறுத்தேன்.

இங்கு சவூதியில் நான் பல பாகிஸ்த்தான் நண்பர்களுடன் பணியாற்றி வருகிறேன். அனைவரும் இந்த தலைமுறையினர் .
பொது நோக்கில் பார்க்கும் போது தன்மையாக பழகக் கூடிய நன்கு உழைக்கக்கூடியவர்களாகவே இருக்கிறார்கள். அங்கு இன்னும் software துறை வளர்ச்சி அடையவில்லை. ஆதலால் பொறியில் படித்தவர்கள் பெரும்பாலும் வளைகுடா நாடுகளுக்கும் கனடா போன்ற நாடுகளுக்கும் வேலைக்காக செல்கிறார்கள். அவர்கள் தன் நாடு வளர்ச்சி அடையவேண்டும் என்று கனவு காண்கிறார்கள். இளையவர்களுக்கு இம்ரான்கான் நம்பிக்கை அளிக்கிறார். அந்த கட்சிக்கு இங்கிருந்து பணம் அனுப்புகிறார்கள்.

காஷ்மீர் பற்றி கேட்டால் அங்கு நிகழும் அரசியல் விளையாட்டில் அதுவும் ஒன்று என்ற புரிதல் இருக்கிறது. இந்தியாவின் மீதும் நம்மீதும் எந்த காழ்ப்பும் இல்லை. நாங்கள் இங்கு பெரும்பாலும் ஒன்றாகவே வேலை செய்கிறோம். தோல்மீது கைபோட்டு நல்ல நண்பர்களாகவே இருக்கிறோம்.

பாக்கிஸ்தானில் உள்ள பஞ்சாப் பகுதி மட்டும் நல்ல வளமான பகுதி. படித்தவர்களின் எண்ணிக்கையும் அதிகம். அதனால் அந்த பகுதி மக்கள் அரசியலிலும் மற்ற துறைகளிலும் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். மற்ற பகுதிகளில் வளர்ச்சி மிகவும் குறைவு. ஒரு நாளைக்கு பத்து மணிநேரம் மின்சார தடை என்பது தினநிகழ்வு.

அங்கு தினமும் நிகழும் வன்முறைகளும், குண்டு வெடிப்புகளும் நாம் அவர்கள் பின்பற்றும் மதம் சார்ந்து புரிந்துகொள்ளவும், விமர்சிக்கவும் முயல்கிறோம். ஆனால் அந்த நிகழ்வுகளுக்கு பின்னால் வறுமை, பசி, இயலாமை, நிலம், அரசியல், மற்ற நாடுகளின் சூழ்ச்சி , தனிப்பட்ட தீவிரவாத குழுக்களின் சுயநலம் என்று எண்ணற்ற காரணிகள் அணிவகுக்கின்றன. இதில் சாதாரன மக்கள் இலக்காகி சிதைக்கப்படுகிறார்கள்.

அந்த 142 பள்ளிக்குழந்தைகளின் கனவையும் உடலையும் சிதைத்த காரணி ஒட்டு மொத்த மனிதகுலத்துக்கே எதிரானது. அந்த நிகழ்வாள்  மனம் இன்னும் கணத்துக்கொண்டே தான் இருக்கிறது.

 என்னோடு பேசிக்கொண்டு இருந்த அந்த பாக்கிஸ்தானி  நண்பர் கடைசியா சொன்னார் " மற்ற நாடுகளை போல எங்கள் நாடும் வளர்ச்சி அடைந்து எங்கள் மக்களும் ஒருநாள் மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் வாழ்வோம் அதுவே இன்றைய இளைஞ்சர்களின் கனவு".

அந்த கனவு நிறைவேற நான் வாழ்த்தினேன்.

                                                                                                                         கிராமத்தான்


வெள்ளி, டிசம்பர் 19, 2014

என்ன பெத்த ராசா

என்ன பெத்த ராசா முத்தம் தருவாயா
என்ன பெத்த ராசா முத்தம் தருவாயா

நெஞ்சு நெரஞ்சாசெ உயிர்நிரைவையா
நெஞ்சு நெரஞ்சாசெ உயிர்நிரைவையா

நீயும் வந்த நேரம்
நீயும் வந்த நேரம் வாழ்க வரமாச்சே
இந்த வாழ்க வரமாச்சே

உன் கைகள் கோர்க்கும் நேரம்
வானம் தீகாடச்சே இந்த பூமி பூக்காடசே
என்ன பெத்த ராசா முத்தம் தருவாயா
என்ன பெத்த ராசா

ஆராரோ ஆரிரராரோ ஆராரோ ஆரிரராரோ
ஆராரோ ஆரிரராரோ ஆராரோ ஆரிரராரோ



உன் நடையில் சிங்கம்மும் தோற்க்குது
உன் மொழியில் குயில்களும் பாடுது
உன் சிறகை பறவைகள் கேட்குது
உன் அழகில் பூக்களும் மயங்குது
கண்களில் சிரிப்பொலி கேட்குது

என்ன பெத்த ராசா
என்ன பெத்த ராசா
என்ன பெத்த ராசா
என்ன பெத்த ராசா
என்ன பெத்த ராசா