"நமக்குள் விழிப்புணர்வு இல்லாதவரை நமக்கு கிடைப்பவை அணைத்தும் வீணே "

செவ்வாய், நவம்பர் 15, 2016

நான் இல்லை

தூ சனினே சனினே எத்தினி வாட்டி சொல்றது ஸ்கூல்லாண்ட வராத வராதுன்னு, என் உயிர எடுக்கரத்துக்குன்னே வாச்சியிருக்கு என்று அருகில் சத்துணவு சமையலுக்காக உலர்த்தப்பட்டிருந்த தென்னை மட்டையை எடுத்து அவன் மீது எடுத்து வீசி எறிந்தாள் ராணி டீச்சர்.

இதா ராணி ஏண்டி அவன அடிக்கிற என்று வெற்றிலையை துப்பிக்கொண்டே ஓடிவந்த சத்துணவு ஆயா எரிந்த மரத்துண்டில் இறுதியாக நிற்கும் கங்கு போல சிவந்த ராணியின் கண்களை பார்த்து அப்படியே நின்றுவிட்டாள்.

அவளை நோக்கி திரும்பிய ராணி "செத்தும் தொலைய மாட்டிங்குது" என்று சீறி எழுந்த மூச்சின் வேகத்திலேயே சொன்னாள்.

ஆயா அவனை நோக்கி  "ஏண்டா மில்ட்ரி காலங்காத்தால பள்ளிகோட்த்துக்கு முன்னாடி இப்டீ வந்து ஒக்காந்துக்கினா அவ புள்ளைங்களுக்கு எப்படிடா படம் நடத்துவா"  "ஏம்மா ராணி காலில வரும்போதே ஒரு பத்துரூபாய வீசாட்டிட்டு வரத்தானே" என்றாள்.

"காலில எங்க உடுது எல்லங் குடுத்துட்டுதான் வந்தங் அத குடுச்சுட்டு வந்து தான் இங்க வந்து உக்கார்ந்து இருக்கு".

ஆயா ஏண்டா சாண்ட குடிச்சவனே அறிவில்ல என்று துவங்க                  " களுக்கென்ற " சிரிப்பொலியை ராணி தன் பின்பக்கமிருந்து கேட்டாள்.

வாயை பொத்திக்கொண்டு கண்களில் சிரிப்பு நிறைந்து பள்ளிப்பிள்ளைகள் நின்றிருந்தனர்.

அவள் கைகள் நடுங்கத்துவங்கின. அவள் உச்சியில் உதித்த ஒற்றை வியர்வைத்துளி அழுத்தி வாரிய முடிகளில் வழுக்கி கன்னத்தில் இறங்கி தரை நோக்கி வேகம் எடுக்கும் தருணத்தில்
" ஏய் இங்க என்ன அவுத்து போட்ட ஆற்றாங்க" போங்கடி என்று கைநீட்டி கத்தினாள். மேல் எழுந்து வரும் கல்லை கண்டு பறந்தெழும் பறவைகள் போல பிள்ளைகள் கலைந்து ஓடினர்.

ராணியின் கண்களில் இயல்பாக கண்ணீர் துளிகள் எழுந்து கண்வளைவு மையை தாண்டி கன்னத்தில் வழிந்தது.

சட்டென துளிர்த்த உணர்வில் தன் ரவிக்கை இடுக்கில் இருவிரல்களை நுழைத்து நனைந்த பர்ஸை எடுத்தாள் . அதிலிருந்து  பத்து ரூபாயை எடுத்து வீசிவிட்டு ஆசிரியர் அமரும்  அறையை நோக்கி நடந்தாள்.

கைவிடப்பட்ட புற்று போல அமர்ந்திருந்த மிலிட்டிரி தலைமுதல் கால் வரை போர்த்தி இருந்த கம்பளியை சற்றே விலக்கி மெலிந்த நடுங்கும் கைகளால்  தன் முன்னால் விழுந்த கசங்கிய பத்து ரூபாய் தாளை எடுத்து கொண்டு ஊன்றுகோலை பற்றி எழுந்து எதிர் திசையில் நடந்தான்.

ஏதோ ஒரு வகுப்பறையிலிருந்து யாகாவாராயினும் யாகாவாராயினும் என்று வெவ்வேறு ராகங்களில் பிள்ளைகள் ஒலிப்பது கேட்டுக்கொண்டே இருந்தது.

ஆயா மட்டும் ஏனோ அங்கிருந்து நகர மனமில்லாமல் அங்கேயே அமர்ந்துவிட்டாள்.


                                                                       (2)

இன்னா மிலிட்ரி போன வேகத்துல திரும்பிவந்துட்ட என்று கேட்டவாறே ஐந்து லிட்டர் வெள்ளை கேனிலிருந்து மெதுவாக உச்ச கவனத்தோடு 100 மில்லி குவளையில் சாராயத்தை ஊற்றிக்கொண்டு இருந்தாள் சரசு. அருகில் யாக்கவ் யாக்கவ் ரவ்வூண்டு கா இன்னும் ரவ்வூண்டு என்று கெஞ்சிக்கொண்டு இருந்தான் டிஸ்க்கோ. நான்கு ஆட்கள் மட்டுமே அமர முடிந்த அந்த குடிசையில்  தன் உடலை மேலும் குறுக்கிக்கொண்டு நுழைந்த மிலிட்ரி பத்துரூபாய்யை எடுத்து குடுத்தான். சரசு 100 மில்லியை அளந்து பிளாஸ்டிக் தம்ளரில் ஊற்றி பானை நீரை கலந்து அவனிடம் நீட்டினாள். அவன் குடிக்கும்போது பாதி சாராயம் கன்று சிறுநீர் கழிப்பது  போல தாடி வழியாக வழிந்தது. அதை பொறுத்துக்கொள்ள முடியாத டிஸ்கோ யோவ் மிலிட்ரி இந்த வேலூர் மாவட்டம் மிலிட்ரிக்கு யோவ்லோ பாமஸ் தெரியுமா. ஒரு சாராயம் கூட ஒழுங்கா குடிக்க தெரியாம நீ எப்பிடியா மிலிட்ரில வேல சென்ஞ்ச இதுல பாதில வேற ஓடியாண்ட என்று தள்ளாடினான். டேய்  சாப்பிட இல்ல மூடிட்டு  வெளில போ யோவ் மிலிட்ரி இன்னும் அஞ்சுரூபா இருக்கு தோசையும் போட்டியும் துன்றியா  என்று உறுமினாள் சரசு. அவன் தலையாட்டும் முன்னமே சுட்டு வைத்த தடித்த தோசைகள் இரண்டு அவன் முன்னால் நீண்டது. 

பனிபோர்த்திய பாறைகள் உறைந்து இருக்க குளிர் சுமந்த காற்று சுழன்று அடிக்க ஒரு மஞ்சள் நிற சிறுமியின் மீது வெறிகொண்டு படர முயன்று கொண்டு இருந்தான் மிலிட்ரி. வாகனம் ஏறியது போல் துடித்த அந்த சிறுமியின் கைகளில் ஒரு  உருளை கல் சிக்கியது . அதை  அவன் பக்கவாட்டு நெற்றியில் படியிர் என்று அடித்தாள். அவன் அலறி எழுந்து நான் இல்லை நான் இல்லை அவுனுங்க தான் அவுனுங்க தான் என்று அறற்றினான். 

பொன்வெயில் கீற்று ஒன்று பசுந்தென்னை கீற்று வழியாக இறங்கி அவன் கண்களை கூசச்செய்தது. தன் நினைவு வந்து சுற்றும் முற்றும் பார்த்த போது தென்னத்தோப்புக்கு நடுவே மரத்துக்கு நீர் பாயும் கால்வாயில் கால்கள் இரண்டையும் அகல விரித்து அமர்ந்திருந்தான். அவன் கண்களில் நீர் ஊறி வழிந்தது. மறுபடியும் குடிக்க வேண்டும் என்ற வெறி எழுந்தது. அருகில் இருந்த தன் ஊன்று கோலை எடுத்து அதே கால்வாயில் குத்திக்கொண்டே நடந்தான். ஒவ்வொரு குத்துக்கும் சத் சத் என்ற ஒரே விதமான ஒலி எழுந்தது. சற்று தூரத்தில்  ஒரு இடத்தில் மட்டும் ஒலி மாறுபடுவதை உணர்ந்து அந்த இடத்தை வேகமாக தன் கைகளால் நோண்டினான். கொஞ்சம் மண்ணை தள்ளியதும் ஒரு தகர மூடி தெரிந்தது. அதை திறந்ததும் இரை கவ்வும் மலைப்பாம்பென சாராய ஊறல் நாற்றம் அவன் நெஞ்சை கவ்வியது. 

மண்ணில் புதைக்கப்பட்ட ஆளுயர பானையில் பாதி அளவு வேலமர பட்டையும் வெல்லமும் ஊறிக்கொண்டு இருந்தது. மிலிட்ரி கையை விட்டு அதை தொட முயன்றான் முடியவில்லை. சிவந்த கண்களால் அதையே பார்த்துக்கொண்டு இருந்தான். பின் மெதுவாக நடந்து தோப்பின் மூலையில் இருந்த கிணற்றை நோக்கி நடந்தான். கிணற்று ஓரமாக இருந்த பப்பாளி மரத்தை வெறித்து பார்த்துவிட்டு  பின் ஒரு நீண்ட தென்னை மட்டையை எடுத்து ஒரு பப்பாளி தண்டை அடித்து வீழ்த்தினான். தண்டின் முனையில் இருந்த இலைகளை களைந்து அந்த தண்டு குழாயை  மட்டும் எடுத்துக்கொண்டு பானையை நோக்கி நடந்தான். தண்டின் ஒரு முனையை வாயில் வைத்து மறுமுனையை பானையில் விட்டான். ஊறல் நீர் எட்டவில்லை. தலையை பானை வாயில் நுழைத்து பப்பாளி தண்டால் ஊறல் நீரை உறுஞ்சி குடித்தான். சூடாக்கப்பட்ட அமிலம் போல அது குடலை நிறைத்தது. 

பாம்பு கடித்தவன் போல வாயில் ஊறல் நுரையோடு தலை கவிழ்ந்து அமர்ந்திருந்தான். திடீரென வயிற்றை பிடித்துக்கொண்டு வாயுமிழ்ந்தான். புளித்த தோசையும் குடலை பிடுங்கும் ஊறலும் வெளியில் வந்து விழுந்தன. ஒடுங்கிய மார்பை பிடித்துக்கொண்டு தண்ணீர் தண்ணீர் என்று முனங்கிகொண்டு இருந்தான். கை மறுபடியும் பப்பாளி தண்டை எடுத்தது. மறுபடியும் தலையை பானைக்குள் விட்டான். நிலையழிந்து ஊறலில் தலைகீழாக விழுந்தான். மூக்கு வாய் கண் அனைத்தும் ஊறலில் நிறைந்தது. நீர்சூழலில் மாட்டியவன் நிலைப்பற்றை தேடுபவன் போல அவன் கைகள் அலைபாய்ந்தது. சிறுமியின் முகம் முன்னாள் தோன்றி நீ தான் என்றது. பயத்தில் சிறுநீர் கழித்தான். பானைக்கு மேலே கால்கள் உதறிக்கொண்டே இருந்தன . நான் இல்லை என்று சொல்லி அவன் மனமும் கால்களும் அடங்கின.  

ஞாயிறு, நவம்பர் 13, 2016

" ஊமை செந்நாய் "

திரு எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் எழுதிய

" ஊமை செந்நாய் "

சிறுகதை

வாசிப்பது கிராமத்தான்.





 

ஞாயிறு, நவம்பர் 06, 2016

நீலம் அறக்கட்டளையின் செயல்பாடுகள் - 2016



புதிய வீடு கட்டும் முனைப்பில் இந்தமுறை நான் திட்டமிட்ட அறக்கட்டளையின் செயல்பாடுகளை முழுமையாக செயல்படுத்தமுடியவில்லை.

இப்போதைக்கு நான் படித்த அரசு பள்ளியில் திட்டங்களை செயல்படுத்திவருகிறோம்.

இந்த வருட திட்டம் பள்ளி கழிவறைகளை புனரமைப்பது. மற்றும் இன்னும்  இரு  அரசு பள்ளிகளை  தத்தெடுப்பது.

கழிவறைகளுக்கு பழைய உடைந்த கதவுகளை அகற்றிவிட்டு புதிய சிமெண்ட் கதவுகளை பொருத்தப்பட்டுள்ளது.

குழாய்களை சீரமைக்கும் பணியும் மேல் கூரை அமைக்கும் பணியும் பாக்கியுள்ளது.  அடுத்த மாதம்  அந்த வேலையும் முடிந்துவிடும்.

ஒருகட்டிடம் முழுக்க போதிய வெளிச்சம் இல்லாமல் குழந்தைகள் படித்துக்கொண்டிருந்ததை தலையாசிரியர் சுட்டி காட்டி இந்த கட்டிடத்துக்கு மின்வசதிகள் உள்ளது ஆனால் மின்சாரம் அருகில் உள்ள கட்டிடத்திலிருந்து கொண்டுவர வேண்டும் என்கிறார். அப்படி கொண்டுவர கேபிள் வசதி இல்லை என்றும் கூறினார்.  அன்று மாலை 1700 ரூபாய்க்கு கேபிள் வாங்கி மறுநாள் காலை அந்த கட்டிடத்துக்கு மின்சாரம் கொண்டுவந்தோம்.

இந்த வேலைகளை பார்த்த  பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் தன் பங்குக்கு ஐந்து மின்விசிறிகளையும் ஐந்து டியூப் லைட் களையும் அன்பளித்தார்.

ஐந்து முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்பெடுக்க இரண்டு மணிநேரம் எனக்காக தலைமை ஆசிரியர் ஒதுக்கி அளித்தார். என் ஆசிரியர்  ( ஜெ )  எழுதிய அறம் பற்றிய கருத்துக்களை அவர்களுடன் விவாதித்தேன்.

இந்த முறை என்னுடன் வேலை செய்யும் பத்துக்கும் மேற்பட்ட நண்பர்கள் குழந்தைகளுக்கு உதவிட பணம் கொடுத்தனர்.
கேட்டவுடன் கணம் கூட யோசிக்கவில்லை. என் விழிகளைக்கூட பார்க்கவில்லை. கொடுத்தார்கள். இதில் என் பாகிஸ்தானிய நண்பர்களும் அடங்கும்.

அந்த பள்ளி குழந்தைகளின் குமிழ் சிரிப்பு இந்த வருடத்தில் நான் பெற்ற இணையற்ற செல்வம். அதை என் நண்பர்கள் அனைவருக்கும் பகிர்ந்தளிக்கிறேன்.




















வியாழன், நவம்பர் 03, 2016

வீட்டை கட்டிப்பார் -7 நிறைவு


முதல் நாள் பூசைக்காக முதல் குழி எடுத்தவன், பூமி பூசை செலவு, அந்த நிலத்திலிருந்து தென்னை மரங்களை அகற்றும் செலவு, வாஸ்த்து பார்ப்பவன் , ஜோசியம் பார்த்து நாள் குறிப்பவர், செங்கல், மணல், சிமெண்ட், கம்பிகள் , மேஸ்திரி , தேவையான போது குழிகளை எடுக்கும் ஆட்கள், சுத்தம் செய்யவும் இதர சிறு சிறு வேலைகளை செய்யும் ஆட்கள், கம்பி கட்டுபவன், பெயிண்ட் அடிப்பவர், ஸ்டீல் குழாய்களை அமைப்பவர், எலெக்ட்ரியின், எலக்ட்ரிக் பொருட்கள், பிளம்பிங் பொருட்கள், மரவேலை செய்யும் ஐந்து குழுக்கள், தூண்களுக்கு சிற்பவேலை செய்பவர்கள், மார்பிள்ஸ் மற்றும் டைல்ஸ், மார்பிள்ஸ் அமைப்பவர், வீட்டுக்கு லைன் கொடுப்பவர், பெயிண்ட் மற்றும் அதை சார்ந்த பொருட்கள், தேவையான பொருட்களை நகரத்திலிருந்து வீட்டுக்கு கொண்டு வருவதற்கான வண்டி கூலிகள் ( கொஞ்சம் மூச்சி வாங்கி கொள்கிறேன் ) , கேட் மற்றும் கதவுகள், வீட்டு மேல் தளத்தில் பதிக்க மொசைக் கற்கள் அதை பதிக்க கூலி
வீட்டை சுற்றி மண் கொட்டி மேடு ஏற்ற விளைநில மண் மற்றும் அதை கொண்டுவர வண்டி கூலி, ஆட்களுக்கு டீ செலவு, சிலருக்கு மத்திய சாப்பாட்டு செலவு , புதுவீடு புகுவிழா செலவுகள், வீட்டுக்கு அரோ வாட்டர் மெஷின் போட்டவன், டிஷ் ஆண்டனா போட்டவன், வீடு மாற்ற உதவியவர்கள், புது வீட்டுக்கு தேவையான அடிப்படை பிளாஸ்டிக் பொருட்கள், கூசா பெட்டி ( பிரிஜ் பா ) , அண்டா குண்டா அடுக்கு சட்டி என அத்தனையுக்கும் செலவு 34 ஐ தொட்டிருக்கும் என்று சொல்கிறது கவிதாவின் நீண்ட மிக நீண்ட டைரி குறிப்பு.
மறைமுகமாகவும், நேரடியாகவும் கடன் 10 லகரம் இருக்கும் என்றும் முறைக்கிறது அந்த குறிப்பு.
அத்தனை செலவுகளையும் எழுதிவைத்து , அதை சரியாக கட்டுப்படுத்தி, வழிநடத்தி, பணமில்லாமல் நான் கால் தளர்ந்து அமரும் போதெல்லாம் பிறந்த வீட்டின் உதவிகளை பெற்று நான் ஊருக்கு வந்தபின் மீதி இருந்த அத்தனை வேலைகளையும் இறுதி துளிவரை முடித்து சாவியை அம்மாவிடம் கொடுத்துவிட்டு இங்கு சவுதிக்கு வந்து காலை உணவுகாக சட்னி அரைத்துக்கொண்டு இருக்கிறாள் கவிதா.
தம்பியுடையான் படைக்கு மட்டும் தான் அஞ்சான். நல்ல மனைத்துணையுடையான் ( மனைவி ) எதற்கும் அஞ்சான் ( சும்மா ஒரு பன்ச் காக)
இவ்வளவு செலவை இழுத்துவிட்டானே என்று மேஸ்திரி மேல் கடும் கோவம் இருந்தது. நாம் சொல்வதை அவன் எதையும் கேட்கவில்லை. நல்ல இருக்காதுபா என் பெரு கேட்டும்பா என்று மறுத்துவிடுவான். ஆனால் வீட்டை பார்த்தவர்கள் முதலில் சொன்ன வார்த்தையே மேஸ்திரி வேலை நல்ல செய்த்திருக்கார் என்பதுதான். அவனிடம் வேலை பார்த்தவர்கள் வீண் அரட்டை, நேரம் கடத்துதல், வேளையில் அசட்டை என்று இல்லாமல் கடுமையாக உழைப்பவர்கள். அவனுக்கு கொஞ்சம் திருப்தி இல்லை எனிலும் இடித்துவிட்டு கட்டச்சொல்லுவான். வீடு துவங்கிய நாள்முதல் முடியும் வரை ஒரு நாள் கூட வேலையை நிறுத்தவே இல்லை. அதே போல கட்டுமான பொருட்கள் வீணாகவில்லை. அதிகம் சொல்லி மிகையாகவில்லை. உள்ளூரில் வீடு கட்டுவதால் பெரும் பொறுப்பும் அவனுக்கு இருந்தது. அந்த விதத்தில் அவன் மேல் எனக்கு மரியாதையே ஏற்பட்டது. வீட்டின் முழுமைக்கும் அழகுக்கும் முழுக்க முழுக்க வேலு மேஸ்தியே காரணம். அவன் குலம் தழைத்து வாழ்க.
கட்டுமான பணி நடக்கும் போது வேளையாட்டுகள் வேலை செய்த சூழல் மனதுக்கு சங்கடமாக இருந்தது. கொத்தனார்கள் நாள் முழுவதும் சிமட்டிலும் ஈரத்திலும் நின்று வேலை செய்கிறார்கள். அவர்கள் வேலைக்குவந்த புதியத்தில் அந்த ஈரத்தால் உடல்நலமில்லாமல் போயிருக்கும். கைகள் பூத்து வெடித்து காய்த்திருக்கும். இப்போது அது அவர்களுக்கு அது பழகி இருக்கலாம். வண்ணம் பூசுபவர்கள் சுவற்றில் பட்டியை தேய்த்துக்கொண்டு இருக்கும் போது நான் உள்ளே சென்றேன். வீடு முழுக்க வெள்ளை துகள்கள் பரவி இருக்க இருவர் உடல் முழுக்க திருநீர் பூசிய ஆதிவாசிகள் போல என் எதிரே வந்தார்கள். எனக்கு நெடி மண்டையில் ஏறி தலை கனத்து வெளியே வந்துவிட்டேன். மார்பிள்ஸ்ன் ஓரங்களை மழுங்க தேய்ப்பவன் முகத்தில் ஒரு துண்டு மட்டும் கட்டிக்கொண்டு நாள் முழுக்க அந்த தூசி துகள்களுக்கு நடுவே வேலை செய்த்துக்கொண்டு இருந்தான். அனைத்திலும் உச்சம் கதவு ஜன்னல்கள்களை பாலிஷ் போடும்போது எழுந்த நெடி. அவர்கள் compressor மற்றும் gun எடுத்துவந்திருந்தார்கள். அவர்கள் வார்னிஷ் அடிக்கும்போது ஒரு நொடிகூட அந்த பகுதியில் நிற்க முடியவில்லை. நெடி நெஞ்சை கவ்வியது. இருவர்மட்டும் முகத்தில் துணியை கட்டிக்கொண்டு இரண்டு நாள் அந்த வேலையை செய்தார்கள். முன்மாலையில் அவர்கள் சோர்ந்து தலைகவிழுந்து நெளிந்து அசைந்து அமர்ந்திருப்பதை பார்த்தேன்.
அந்த வேலைகள் அனைத்தும் அனைவரின் உடலுழைப்பை மட்டுமல்ல உடலையும் சேர்த்தே கோருகிறது. அத்தனை பேரும் நலமுடன் வாழ வாழ்த்துகிறேம் .
இங்கு பெரிய பெரிய ப்ரொஜெக்ட்டுகளில் முக்கிய பங்கு வகித்திருக்கிறேன். பல நெருக்கடியான சூழல்களை என் குழுவோடு சேர்ந்து சமாளித்திருக்கிறேன். அதில் அனுபவம் இருந்ததால் என் உள்ளுணர்வால் வேகமாக உறுதியான முடிவெடுக்க முடிந்தது.
ஆனால் வீடு கட்டுவது முற்றிலும் வேறானது. நம் சுற்றியுள்ள நெருங்கிய உறவுகளின் ஒவ்வொரு மனதிலும் ஒரு வீடு உள்ளது. அதனால் தன் விருப்பத்தை அவர்கள் சொல்லிக்கொண்டே இருப்பார்கள். கேட் சதுரமாக இருந்தால் நல்லா இருக்கும் , சுற்று சுவர் நான்கு அடி உயரம் இருக்கவேண்டும், முதல் நுழைவாயிலில் விநாயகர் சிலை செதுக்கு நல்லா இருக்கும், வீட்டுக்கு மஞ்சள் நிற வண்ணம் பூசு என்று சொல்லிக்கொண்டே இருப்பார்கள். அது நம்மை சுற்றி ஒரு உணர்வு வலையை ஏற்படுத்தும். அதன் நடுவே நின்றுதான் நாம் வேலை செய்யவேண்டும் . நாம் ஒரு சொல் தவறாக சொல்லிவிட்டாலும் அது நமக்கு எதிராக பூதம் போல எழுந்து நிற்கும். வேலை முடியும் வரை பொறுமையாக இருக்கவேண்டும். என்னைவிட கவிதா பொறுமையாக இருந்தாள். ஆனாலும் சுற்றத்தாரின் உதவி போற்றத்தக்கது.
நமக்கு நுண்ணுனர்வு மட்டும் இருந்தால் வீடு கட்டும் வேலை நமக்கு பலவிதமான மனிதர்களின் குணங்களையும் வாழ்வின் அத்தனை பக்கங்களையும் திறந்து காட்டிவிடும். அதைத்தான் வீட்டைக்கட்டிப்பார் என்று சொல்லியிருக்கிறார்கள் போல.
சிலர் இந்த இடத்தில் இவ்வளவு பணம் போட்டு வீடு கட்டி இருப்பது வீண்தான் என்றனர். சிலர் இந்த மாதிரி அமைதியான இடத்தில் வீடு அமைவது வரம் என்றனர். இப்போதைக்கு விடுமுறைக்கு மட்டும் சென்று நங்கள் அங்கு தங்குவோம். ஆனால் ஊழின் விழவு எப்படி இருக்கும் என்று நம்மால் கணிக்க முடியாது. என் ஆசிரியர் சொல்வது போல ஒரு கரையான் தன் வாழ்நாள் முழுக்க சில மண் துகள்களை மட்டுமே நகர்த்தி ஒரு மாபெரும் புற்றை கட்ட உதவும். அந்த புற்றை தூரத்திலிருந்து முழுமையாக பார்க்கவோ உணரவோகூட அதனால் முடியாது. அதுபோலவே நானும் இந்த மாபெரும் மனிதவாழ்வில் ஒரு அணுவின் அணுவை நகர்த்தி வைத்திருக்கிறேன். அதன் காரணங்களை என்னால் உணர முடியவில்லை.
என் வாழ்வின் வேர் அந்த பூர்விக இடத்திலும் கொஞ்சம் பரவி இருக்கிறது அவ்வளவே.
என்றோ ஒருநாள் இரண்டு கிழவனும் கிழவிகளும் கிராமத்தைவிட்டு தோப்புக்கு வந்து கூலிக்கு வேலைசெய்து குடில் அமைத்து பிள்ளைகளை பெற்று நிலங்களை பெருக்கி அங்கு ஓர் குறுங்குழுவை உருவாக்கி இருக்கிறார்கள்.
இன்று அந்த இடத்தில் ஐந்தாம் தலைமுறை உருவாகிவிட்டது.
நான் எங்கு பறந்தாலும் அந்த கிளை படரும் பெருமரத்தில் எனக்கும் ஒரு சிறு பொந்து இருக்கிறது. வருங்காலத்தில் சொந்தக்களின் வஞ்சத்திலும் , கூடி கொண்டாடும் மகிழ்விலும் நானும் என் மகனும் திளைக்க அந்த வீடு ஒரு வாய்ப்பாக அமைக்க.
ஓம் ஓம் ஓம் .....




வீட்டை கட்டிப்பார்- 6 மனை புகுவிழா


ஒரு பக்கம் வீட்டு வேலைகள் அதிவேகமாக சென்றுகொண்டு இருந்தது. ஐந்து வெவ்வேறு குழுக்கள் வேலை செய்தன. மறுபுறம் செப்டம்பர் 14 மனை புகுவிழா வைத்திருந்ததால் அதற்க்கான ஏற்ப்பாடுகளும் நடந்தான.
யார் யாருக்கு துணிகள் எடுக்க வேண்டும் என்பதில் ஒரு பெரும் விவாதம் எழுந்தது . அம்மாவிடம் ஒரு பெரிய பட்டியல் இருந்தது. நாங்கள் பணத்தை தேன் துளியன சிறுக சிறுக செலவழித்துக்கொண்டு இருந்தோம். அம்மாவுக்கு எப்படி புரியவைப்பது என்று தெரியவில்லை. எனக்கும் கவிதாவுக்கும் ஒரு பெரும் சொற்கலப்பு நிகழ்ந்து தணிந்தோம்.
அதன்பின் இறுதி பட்டியல் தயாராகியது . புடவை மற்றும் துணிகளில் சிறு ஏற்ற தாழ்வும் பெரும் சலசலப்பை ஏற்படுத்திவிடும் என்று கவிதாவே ஒவ்வொருவருக்கும் தேர்ந்து பார்த்து துணிகளை எடுத்தாள்.
நானும் அண்ணனும் சமையலுக்கு ஆட்களை தேடினோம். முகுர்த்த நேரம் என்பதால் ஆட்கள் கிடைக்க அரிதாக இருந்தது. இரவில் 70வது பேருக்கு காலையில் இருநுறு பேருக்கு என்பது எங்கள் கணக்கு. நாங்கள் செய்து வண்டியில் அனுப்பிவிடுகிறோம் என்று சிலர் சொன்னார்கள். ஆனால் கிராமங்களில் அது முறையல்ல. அதுவும் இது போன்ற சிறிய நிகழுவுகளில் நாமே முன்னின்று சமைத்து வருபர்களை இன்முகம் கூறி பரிமாற வேண்டும். எனக்கு அதுவே நல்லது என தோன்றியது.
இறுதியில் எங்களுக்கு பழக்கமான வேலு என்பவர் சமைக்க ஒப்புக்கொண்டு தன் சகாக்களை அனுப்பிவைத்தார். மளிகை பொருட்களை நானே வாங்கிவிட்டேன். காய்கறி வாங்க நானும் அண்ணனும் உழவர் சந்தைக்கு சென்றோம். நாட்டு தக்காளி எங்கும் இல்லை. காலையில் இரண்டு கூடை வந்தது. இப்போது இல்லை என்கிறார்கள். வாழை இலை ஒன்று ஐந்து ரூபாய். காலிபிளவர் சின்னது தான் உள்ளது. ஒவ்வொன்றாய் தேடி தேடி சுற்றி அலைந்து வண்டியில் போட்டுக்கொண்டு வீடுவந்து சேர்ந்தோம். வாசலில் கட்ட சாம்பார் வாழை கிடைத்தால் நல்லது என்கிறார்கள். அது தேடி கிடைக்கவில்லை . பின் அண்ணனின் நண்பர் நிலத்தில் கற்பூர வாழை மரம் இரண்டு கிடைத்தது.
ஐயரை தேடி அலைந்ததில் எங்களுக்கு மூச்சி வாங்கியது. எங்களுக்கு வழக்கமாக வரும் ஐயர் வயதாகி ஒடுங்கிவிட்டார் . அவர் மகன் பொறியல் படித்துகொண்டு இருந்தான் என்கிறார்கள். வேறு சிலரை அணுகினோம் . அவர்கள் 5000 ரூபாய் 4000 ரூபாய் என்று கேட்டார்கள்.
வேறு வழி இல்லாமல் அதே பழைய ஐயரை பார்க்க போனோம். அவர் மகன் பட்டாபி அந்த தொழிலில் கொடிகட்டுகிறான் என்கிறார் அவர் பெருமிதமாக .
தொலைவில் ஒரு முனீஸ்வர கோவில் கும்பாபிஷேகத்தில் முனைந்திருந்த பட்டாபியை பிடித்து பேசியபோது 3000 ரூபாய்க்கு ஒப்புக்கொண்டார் . உடனே ஒரு ஜூனியர் இன்ஜினியரை அழைத்து பூ பழம் பத்திரிக்கை கொடுத்து பூசைக்கு போகும்படி கூறிவிட்டு என் எண்னை வாங்கிக்கொண்டார். மறுநாள் வாங்க வேண்டிய பூசை பொருட்களின் பட்டியல் எனக்கு வாட்ஸப்பில் வந்தது.
பூசைக்கு முதல் நாள் மாலை வரை வீட்டு வேலைகள் நடந்து கொண்டு இருந்தன. இரவு கவியத்துவங்குமுன் அனைத்து வேலைகளையும் நிறுத்திவிட்டு அப்பா அழைத்து வந்திருந்த பெண் ஆட்களை வீட்டை சுத்தம் செய்ய சொன்னோம்.
பந்தல் அமைப்பவன் முருகன். எங்கள் கிராமம் தான். மலை முதலே வேலை செய்து வீட்டை ஜொலிக்கவிட்டான்.
சொந்தங்கள் அக்கா தங்கை கவிதாவின் அம்மா அக்கா இருவர் அண்ணியர் இருவர் அனைவரும் வந்து அவர் அவர் வேலைகளை துவங்கிவிட்டனர்.
இரவு உணவு தயாரானதும் முதலில் குழந்தைகளை பிடித்து அமரவைத்தோம். அவர்களை முடித்து சொந்தங்களை அழைத்து உணவு பரிமாறினோம்.
ஒருபுறம் உண்டாட்டு செல்ல மறுபுறம் பங்காளிகளின் மதுமகிழ் ஆடல் சென்றுகொண்டு இருந்தது. கிராமத்தில் சொந்தங்களின் வாழ்க்கை முரணியக்க நகர்வு. ஒரு சீரான நேர்கோட்டு வாழ்க்கை அல்ல. வஞ்சம் , பொறாமை , ஆற்றாமை என்று ஒரு எல்லைக்கு மனம் செல்லும். அதே மனம் அன்பு கனிவு குழைவு என்று அடுத்த எல்லைக்கு செல்லும். வழி சண்டை , வரப்பு சண்டை என்று கை கலக்கும், மனம் கசக்கும் சொந்தங்கள் இது போன்ற நிழவுகளில் ஒன்று கூடி களிந்தாடி , அரசியல் பேசி , கேலி பேசி பிணைந்து கொள்வர். அது அவர்களின் வாழ்வியல் முறை. வெளியிலிருந்து பார்ப்பவருக்கு புரிந்து கொள்ள சற்று சிரமமாக இருக்கும்.
படிப்புக்காக வேளியேறிவிட்ட எனக்கு அந்த வாழ்வில் மனம் ஒப்புவது இல்லை. ஒருமுறை சண்டை வந்தால் வாழ்நாள் முழுக்க எனக்கு எதிரிதான். மறுபடியும் எந்த விதத்திலும் ஒட்ட முடிவதில்லை.
இரவு யாரும் தூங்கவில்லை கதையாடிக்கொண்டும் சிறுவேலைகளை செய்துகொண்டும் இருந்தனர். நான் கால்கள் மறுத்து கண்கள் இருண்டு தள்ளாடிக்கொண்டு இருந்தேன்.
வீட்டின் மேல் கட்டியிருந்த கண்திருஷ்டி பொம்மையை கண்டு இயல்பாக சிரிப்பு வந்தது. அக்காவின் இளையமகள் மாமா பொம்மை உன்ன மாதிரியே இருக்கு ஆனா கொஞ்சம் smart ஆ இருக்கு என்று கிண்டலடித்தது நினைவு வந்தது. முன்பெல்லாம் அதை மேஸ்திரி தான் பூசை போட்டு எரிப்பார். ஆனால் இப்போது அதற்க்கு தனியாக ஆட்கள் இருக்கிறார்கள். எரிப்பதற்கு 2000 ரூபாய் வேண்டும் என்கிறார்கள். எரிக்கும்போது திருஷ்டி முழுக்க அவர்கள் மேல் படியும் என்றொரு நம்பிக்கை. அதை ஏற்பதற்கே அந்த பணம்.
இரவு பனிரெண்டு மணி ஆனதும் எங்கள் பழைய வீட்டின் கதவுகளை மூடி நாங்கள் சொல்லும்வரை யாரும் வெளியில் வரவேண்டாம் என்று சொல்லிவிட்டு அந்த பொம்மையை எடுத்து சென்றார்கள். சிறிது நேரம் கழித்து வந்தவர்கள் புதுவீட்டை முழுவதும் கழுவிடும்படி கோரிவிட்டு சென்றனர்.
நான் தள்ளாடி தள்ளாடி சென்று பக்கத்திலிருந்த திண்ணையில் படுத்துக்கொண்டேன். நிகழ்வுகள் கனவில் தொடர்ந்தது. சிறிது நேரத்தில் யாரோ என்னை எழுப்பிவிட்டு சென்றார்கள். சொக்கி கவிழ்ந்த தலையுடன் அமர்ந்திருந்தேன்.
கவிதா வந்து ஐயர் கோமியம் கேட்கிறார் இருக்க என்றாள். என்னது ஐயர் மாமிய கேக்கிறாரா என்றேன். கவிதா தலையில் இடித்துவிட்டு 3 மணி ஆச்சு மொதல்ல போய் குளிச்சிட்டு வா என்றாள். குளித்துவிட்டு முத்தாடை புனைந்து புதுவீட்டுக்கு வந்தேன்.
ஐயர் பூசை பொருட்க்களை பரப்பிக்கொண்டு இருந்தார். கோமியம் எங்கே, செங்கல் பணிரெண்டு எங்கே மணல் கொஞ்சம் எடுத்து வாங்க, மாவிலை எடுங்க என்று அவர் வேலையை துவங்கிவிட்டார்.
ஏம்மா கோவிலுக்கு போயிட்டு வந்துடுங்க என்று அவர் குரல் மணியின் சில் ஒலியில் கேட்டுக்கொண்டு இருந்தது. நானும் கவிதா மற்றும் கவிதாவின் அக்கா , அம்மா அனைவரும் கோவிலுக்கு சென்று மாலை சார்த்தி கற்பூரம் ஏற்றி வணங்கினோம். கவிதா காமாட்சியம்மன் விளக்கை ஏற்றி அதை வீடுவரை அணையாமல் இருக்கும் பொருட்டு ஒரு பாத்திரத்தின் நடுவே வைத்து வீட்டுக்கு எடுத்துவந்தாள்.
புதுவீட்டுக்குள் முதலில் பசுமாடும் கன்றும் நுழைந்தது. அப்பாவும் அம்மாவும் அதன் நெற்றியில் மஞ்சள் பூசி குங்குமம் மிட்டு கற்பூரம் காட்டி உள் அழைத்தது சென்றனர். நானும் கவிதாவும் வலது கால் வைத்து உள் நுழைந்தோம். கவிதா கையிலிருந்த விளக்கை பூசை அறையில் வைத்து வணங்கிவிட்டு வெளியில் வந்தோம்.
ஐயர் எரிகுளம் அமைத்து மாசுள்ளிகளை எரியூட்டி நெய் விட்டு வளர்த்தெடுத்து அதில் அவிய்ட்டு மந்திரங்களை ஓதிக்கொண்டு இருந்தார். சுற்றி நின்றிந்தவர்கள் பெரும்பாலும் அந்த எரி தழலை தான் பார்த்துக்கொண்டிருந்தனர்.
தாய்மாமன் கொண்டுவந்த சீர் முதன்மையாக வைக்கப்பட்டது. அப்பாவும் அம்மாவும் மாலையிட்டு மனையில் அமர்ந்து அதை ஏற்றனர். அதன் பின் நானும் கவிதாவும் மனையில் அமர்ந்தோம்.
ஏழு வருடங்களுக்கு முன் திருமணத்தின் போது அப்படி அமர்ந்தோம். அது தான் முதல் தொடுகை. தொடுகையில் உவகையும் தொட்டு உணர்ந்த பின் சட்டென விதிர்த்து விலகவும் நிலைகொள்ளாது அமர்ந்திருந்தோம்.
கவிதா வந்தவுடன் பொருளியல் தரும் அழகியலை எனக்கு காட்டினாள். நல்ல உணவுகள் தரும் சுவை , நல்ல உடைகள் தரும் பெருமிதம் , பொருள் சேமிப்பு தரும் மெல்லிய ஆணவமும் நிமிர்வும் அனைத்தையும் அறிமுப்படுத்தினாள்.
இன்று எங்கள் உடலும் மனமும் ஒன்றென நிறைந்து விட்டதால் இயல்பாக பூசை மனையில் அமர்ந்திருந்தோம். அக்க்ஷய் என் வாலத்தொடையில் அமர்ந்திருந்தான். கவிதா இரண்டு மூன்று நாட்கள் ஓவில்லாமல் வேலை செய்ததால் சோர்வடைந்திருந்தாள். முகமெல்லாம் கருத்திருந்தது. புதுப்பட்டை உடுத்திருந்தாள். கண்கள் தன் முன் எரிந்து கொண்டு இருக்கும் அனலையே நோக்கிக்கொண்டு இருந்தது. சன்னதம் வந்து தீ சட்டியை கையில் எடுக்க காத்திருக்கும் பெண் போல அல்லது தன் பிறந்தநாள் கேக்கின் மேல் வைத்திருக்கும் ஒற்றை மெழுவர்த்தியை ஊத காத்திருக்கும் குழந்தை போல.
செந்தழலும் நா சொடுக்கி அவளிடம் ஏதோ பேசுவது போல இருந்தது .
என் அண்ணியர் சிலர் அடுமனையில் புது அடுப்பில் பல்காச்சினார்.
ஒருவழியாக பூசனைக்காய் உடைத்து பூசைகள் முடிந்தன. சொந்தங்கள் ஒவ்வொருவராக அன்பளிப்பும் ஆசியும் அறிவுரைகளையும் வழங்கினர்.
காலை ஆறுமணிக்கு முதல் பந்தி துவங்கியது. ஒன்றுவிட்ட அண்ணன் மகன்கள் அத்துணை பேரையும் கவனித்துக்கொண்டனர். மூன்றாவது பந்திக்கு என் சகலையின் மகன் என்னோடு இணைந்துகொண்டான். இருவரும் பரிமாறினோம். சளைக்காமல் என்னோடு வேலைசெய்துகொண்டு இருந்தான். நேரம் காலை 10 மணியை தாண்டியது. என்கால்கள் கட்டையென மாறி கனத்தது. தேவையில்லா எடையை தூக்கிக்கொண்டு நடப்பதை போல இருந்தது.
கவிதாவை தேடி சென்றேன். வரிசை தட்டில் இருந்த இனிப்பு பலகாரங்களை பிரித்து ஒவ்வொரு சொந்தங்களுக்கும் கொடுத்து வழி அனுப்பிக்கொண்டு இருந்தாள். அவள் அண்ணியும் என் மருமகள்கள் இருவரும் அவளுக்கு உதவிகொண்டு இருந்தனர். பின்பு வீட்டை சுத்தம் செய்ய துவங்கினர். நான் அரை மயக்கத்தில் இருந்தேன். போர் நடந்த களத்தை சுத்தம் செய்வது போல இருக்கிறது என்றாள். நான் நகைத்து அப்படியே சாய்ந்து உறங்கிவிட்டேன்.
இரவு புது வீட்டில் படுத்தோம். அக்க்ஷய் ஏம்பா நம்ம இந்த வீட்டுக்கு வந்துட்டோம் என்றான். அவனுக்கு என்ன சொல்லினால் புரியும் என்று யோசித்துக்கொண்டு இருதேன். அவன் மறுபடியும் கேட்டான் அப்பா நா உங்க கல்யாணத்த பாக்கலன்னு இன்னக்கி மறுபடியும் கல்யாணம் பண்ணிக்கிட்டிங்களா என்றான். ஆமா செல்லம் என்று அவன் கன்னத்தில் முத்தமிட்டேன். வெகு நாள் கழித்து ஒரு சுகந்திரத்தை உணர்கிறேன் என்று கவிதா கூறிவிட்டு திரும்பி படுத்துக்கொண்டாள். சீக்கிரத்தில் இருவருமே ஆழ்ந்து உறங்கினர். பரதம் ஆடி அமர்ந்த பெண்ணின் கால்களில் ஆடி முடிக்காத நடனம் கொஞ்சம் மிச்சம் இருப்பதை போல பகிர முடியாத ஏதோ மகிழ்வு கொஞ்சம் கவிதாவின் முகத்தில் புன்னகையாக படர்ந்திருப்பதை நான் பார்த்துக்கொண்டு தூக்கம் என்னை தொட்டு படர்ந்திட காத்திருந்தேன் இருந்தேன்.

வீட்டை கட்டிப்பார் - 5 வெள்ளை எழில் மாளிகை


ஒரு காலை நேரத்தில் அருண் என்பவரை ரஞ்சித் அழைத்துவந்தான். "அருணே வீடு உள்ள போய் பார்த்துட்டு வா" என்று அனுப்பிவிட்டு என்னிடம் பெயிண்டர் சித்தப்பா பக்கத்தூர் பையன். நல்ல பண்ணுவான் என்றான் . வீட்டை சுற்றி பார்த்துவிட்டு ஒரு நாப்பது குடுத்துடுங்கணா என்றான் அருண் . சரி ஒரு முப்பத்தஞ்சி வாங்கிக்க என்ன சித்தப்பா சரியா என்றான் ரஞ்சித். நான் சரி என்றேன். அருண் சற்று யோசித்துவிட்டு சரிங்கணா நாளைக்கு வேலை ஆரமிச்சுடலாம் என்றான்.
அருண் வேண்டிய பொருட்களை தன் முத்து முத்தான கையெழுத்தில் எழுதி கொடுத்தான்.
முதல் இரண்டு நாட்க்களில் வெளிப்பகுதி முழுவதும் வெள்ளை சிமெண்ட்டை நீரில் கலந்து பூசினார்கள். மறுநாள் முழுக்க சுவர்களை நீரில் நனைத்து காயவிட்டானர்.
பின்பு Exterior primer white paint இரண்டு முறை அடித்ததும் வீடு நீவிய வெள்ளை குதிரைபோல மினு மினுத்தது . எங்களுக்கே அது ஒரு வீடு என்ற உணர்வு அப்பொழுதான் வந்தது.
அருண் பட்டி வேண்டும் என்றவுடன் நான் 20 லிட்டர் வாங்கிவந்தேன். இது வேண்டாம் பொடியாக மூட்டையில் வரும் அது வேண்டும் என்றான். அது இதனினும் பாதிவிலை தான். வீட்டின் உட்புறம் இருமுறை பட்டி பார்த்து காயவிட்டனர்..
வீட்டின் உள்வேலைகள் முடியும் தருவாயில் Interior Primary white paint ஒரு முறை மட்டும் அடித்தனர். அனைத்துவேலைகளும் முடிந்தபின்னர் இன்னொரு முறை வெள்ளை அடித்து வேலையை முடித்தனர். வீடு வெள்ளை எழில் மாளிகையானது.
எனக்கு பிடித்ததே அருணின் தன்மை தான். நாம் எந்த பகுதி எப்போது முடியவேண்டும் வேண்டும் என்று சொல்லிவிட்டால் போதும். அதேகேற்றாற்போல் ஆட்களை அமர்த்தி சொன்ன நேரத்தில் வேலையை முடித்துவிடுவான். அவனுக்கு காசு கொடுக்கும்போது மட்டும் மனசுக்கு அவ்வளவு திருப்தியாக இருக்கும்.
" உம் " என்ற ஒலியை ஒரு வார்த்தையாக பயன்படுத்துவர் தான் கார்த்திக். எங்கள் எலக்ட்ரிசியன். தயங்கி தயங்கி ஆனால் வேகமாக பேசுவார் .
நானும் அண்ணனும் அவரை கூட்டிக்கொண்டு எலக்ட்ரிக்கல் பொருள் வாங்க வேலூர் சென்றோம். வேண்டிய பொருட்களின் பட்டியலை ஒரு அட்டையில் எழுதிவைத்திருந்தார். வேலூரில் எலக்ட்ரிகல் கடைகள் நிறைய இருக்கின்றன. பெரும்பாலும் இது போன்ற பொருட்க்களின் மொத்த விலை சந்தை மார்வாடிகளின் கையில் இருக்கும் . " பாம்பே எலெக்ட்ரிக்கல்ஸ்" பழைய கடை , ஒரே விலை , எலெக்ட்ரிசின்னுக்கு கமிஷன் கிடையாது என்று அண்ணனுக்கு தெரிந்தவர்கள் சொல்லியிருக்கிறார்கள். அங்கு தான் சென்றோம். மொத்த பொருட்களையும் வாங்கி அடுக்கிய பின்னர் 80 ஆயிரம் பில் வந்தது.
அடுத்து பிளம்பிங் பொருட்கள் வேறு கடையில் வாங்கினோம். குளியலறை பொருட்கள் பல்வேறு தரத்தில் இருந்தது. Parry ware அனைவருக்கும் தெரிந்த கம்பெனி. பெரும்பாலான பொருட்களை அதில் தான் எடுத்தோம். குழாய் பொருட்களின் விலை பத்து ரூபாயில் துவங்கி ஆயிரம் ரூபாய்வரை செல்கிறது. மனதை கட்டுப்படுத்திக்கொண்டு பொறுமையாக நடுத்தரமாக பார்த்து எடுத்தோம். கடைசியில் விலைப்பட்டியல் 40 ஆயிரம் என கை நீட்டி நின்றது.
வீட்டுக்கு வந்ததும் அன்று செலவானதை கவிதாவிடம் சொன்னதும் அயர்ந்துவிட்டாள். ஏன்பா எல்லாம் கொஞ்சம் பார்த்து வாங்க வேண்டியது தானே என்றாள். ம்ம் .. பார்த்து தான் வாங்கினேன். என்று சுருங்க சொல்லிவிட்டு அகன்றுவிட்டேன்.
கையிருப்பை பார்த்து மனதிலிருந்து பயம் உடலுக்கு சொட்டிக்கொண்டு இருந்தது. அதன் குளிர்விசை தாளாமல் உடல் விதிர்க்க துவங்கியது.
மறுநாளே எலக்ட்ரிகல் மற்றும் பிளம்பிங் வேலைகளும் துவங்கின.
கார்த்திக்கின் கூட்டாளி சுவாரசியமான மனிதர். கூட வேலை செய்யும் பசங்களை " என் சின்னாள சீனத்து பட்டே வாடி செல்லம் அந்த சுத்திய எடு .... அடடா சனியனே சனியனே மூதேவி உளிய எடுக்காத சுத்தி சுத்தி என்று கத்துவார். ஆவுன்னா உளிய கையில எடுத்துப்பான் என்று பச்சை வாசனை வீச பேசிக்கொண்டே இருப்பார்.
அவர்கள் செய்யும் வேலை கோர்வையாக இருக்காது. ஒன்றை முழுமையாக முடிக்குமுன்னமே அடுத்த வேலைக்கு சென்றுவிடுவார்கள். ஒருவழியாக அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டாலும் ஏதோ ஒன்று குறை இருப்பதுபோலவே நமக்கு தோன்றுகிறது.
பேன் மற்றும் விளக்குகள் அனைத்தும் HAVELLS கம்பெனி வாங்கினோம். நல்ல விதவிதமான வடிவில் கிடைத்தது. LED tube லைட்டுகள் 18 வாட்ஸ் 600 ரூபாய். அது 40 வாட்ஸ் tube லைட் தரும் அதே வெளிச்சத்தை தரும் மற்றும் ஆயுட்காலம் அதிகம். ஆனால் எங்கள் நிலைக்கு அது கட்டுப்படி ஆகவில்லை. மூன்றை மட்டும் அதை வாங்கிக்கொண்டு மற்றவை சாதா விளக்குகளையே வாங்கினோம்.
அதுவே 37000 ரூபாய் வந்துவிட்டது.
குளியல் அறையில் டைல்ஸ் போடும்முன் அனைத்து நீர் வழி பாதைகளையும் ஒருமுறை சரிபார்க்க சொல்லி மேஸ்திரி சொல்லிக்கொண்டே இருந்தார். டைல்ஸ் போட்டபின் எதாவது ஒழுகினால் மறுபடியும் அனைத்தையும் உடைத்தெடுக்க வேண்டும் என்பது அவர்க்கவலையாக இருந்தது.
நல்லவேளையாக அதைபோல எந்த சங்கடமும் ஏற்படவில்லை . எல்லாம் முடிந்து குழாய்களை திறந்தபோது குழாய் இணைப்புகளில் எந்த ஒழுக்களும் இல்லை அதனால் சுவரும் ஈரமாகவில்லை.
என்னுடன் படித்த சரவணன் தான் அந்த பகுதி லைன் மேன். வீட்டு வேலை நடந்துகொண்டு இருக்கும்போது வாரம் ஒருமுறை வந்து பார்த்துவிட்டு சென்றான்.
மணியக்காரரிடம் இந்த வீட்டின் சர்வே நம்பர் எழுதி வாங்கு பின் இந்த நிலத்துக்கு வரிகட்டிய ரசீது ஊர் தலைவர் ஆபீஸ்ல வாங்கிக்க மற்றதை நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு போனான்.
என் அண்ணன் ஒருவர் ஊர் கவுசிலர். அவர் மூலம் மணியக்காரரின் சிப்பந்தியை பிடித்து பதிவுகளை எடுத்து பார்த்தபோது அந்த நிலம் உள்ள வரைபடத்தையே காணோம் என்றான். என்னாது கிணறு காணோமா என்றேன் . ஒரு சிறு தொல்பொருள் ஆராட்சிக்கு பிறகு சர்வே எண்ணை பிடித்து மணியக்காரரிடம் கையப்பம் வாங்கி நிலவரி ரசீதையும் வாங்கி சரவணனிடம் கொடுப்பதற்குள் பழைய செருப்பை மாற்றிவிட்டு புது செருப்பை வாங்கிவிட்டேன்.
நல்லவேளை நம்ம லைன் மேன் அலையவிடவில்லை. அரசு எந்திரத்துக்கு கொஞ்சம் ஆயில் மட்டும் விடவேண்டி இருந்தது. மீட்டரை கொண்டுவந்து அவர்களே பொருத்திவிட்டு அதில் சக்கரம் சுழல்கிறதா என்று பார்த்துவிட்டு சென்றார்கள்.









வீட்டை கட்டிப்பார் -4 - டைல்ஸ் , மார்பில்ஸ் , கிரானைட்


கவிதா வீட்டுக்கு டைல்ஸ் போடவேண்டும் என்றதும் அதற்கான கடைகளில் ஏறி இறங்கினோம். டைல்ஸ் பத்து பதினைந்து வருடம் மட்டும் நன்றாக இருக்கும் பின் தேய்ந்து பழையதாகிவிடும் அல்லது நடந்தால் சத்தம் வரும் என்று கேட்பவர்கள் சொன்னார்கள். கிரானைட் கல் சிலருக்கு ஆகாது என்றனர் . பெரும் குழப்பமாக இருந்தது.
மார்பில் ஆரம்ப விலை 45 ரூபாய். பாண்டிச்சேரி பக்கம் சென்றால் 35ரூபாய் முதல் கிடைக்கும். டைல்ஸ்சும் துவக்க விலை 42 ரூபாய். அதனால் நான் மார்பில் போடலாம் என்று முடிவெடுத்தேன்.
மார்பில்ஸ் போடுபவன் ஒருவன் வந்தான். அவன் பேச்சே யாருக்கும் பிடிக்கவில்லை. ஒரு சதுர அடிக்கு முப்பத்தி ஐந்து ரூபாய் என்று பேச்சை துவங்கினான். நாங்கள் 28 க்கு முடித்தோம்.
கவிதா இரண்டு மூன்று பேரிடம் விசாரித்து முடிவு செய். இவன் ஒருவனை மட்டுமே நம்பாதே என்றாள். எனோ நான் அவனை முடிவு செய்த்துவிட்டேன்.
அவன் ஆட்கள் இரண்டு பேர் முதலில் வந்து வேலையை துவங்கினார்கள். வேலை நன்றாக போய்க்கொண்டு இருக்கும் திடீர் என்று யாருமே வரமாட்டார்கள். செல் பேசியும் எடுக்கமட்டான். அடுத்து ஆறேழு பேர் கூட்டிவருவான் வேலை போகும் அப்படியே நிறுத்திவிட்டு போய்விடுவான். அவனை சமாளிக்கவே முடிவில்லை.
அப்போது தான் தெரிந்தது டைல்ஸ் மற்றும் கிரானைட் போடுவதில் வேலை குறைவு. மொத்தம் பத்து நாட்களில் அனைத்து வேலைகளும் முடிந்திருக்கும். ஒரு சதுர அடிக்கு எட்டிலிருந்து பத்து ரூபாய்த்தான்.
ஆனால் மார்பில்ஸ் அப்படி அல்ல. அங்கு கடையில் வாங்கும்போதே பஞ்சாயத்து துவங்கிவிடும். கற்களை வண்டியில் ஏற்றி இறக்குவதற்கு ஒரு சதுரடிக்கு இரண்டு ரூபாய் தனியாக தரவேண்டும். ஏற்றுவது கடையில் உள்ள ஆட்கள். நம் இடத்துக்கு வந்து அவர்களே இறக்கவும் செய்வார்கள். ஆனால் இறக்கும் இடம் நகரமாக இருக்கக்கூடாது. அப்படி இருந்தால் அந்த பகுதி யூனியன் கூலி ஆட்கள் தான் இறக்கவேண்டும். மீறி கடை ஆட்கள் இறக்கினால் அவர்களை மிரட்டவும் அடிக்கவும் செய்வார்களாம். அதனால் அவர்களை தனியாக பணம் கொடுத்து கவனிக்கவேண்டும். நம் வீடு கிராமம் என்பதால் கடை ஆட்களே இறக்கிவிட்டார்கள். பின் அவர்களுக்கு டீக்கு தனியாக இருநூறு கொடுத்ததால் பொன்போல் சிரித்து வணக்கம் வைத்துவிட்டு சென்றார்கள். செங்கல், சிமெண்ட், ஜல்லி எது இறக்கினாலும் நூறு இருநூறு தனி.
முதலில் அணைத்து அளவுகளும் எடுத்து கற்களை அதன் வரிசை படி அறுக்கவேண்டும். அதை ஒவ்வொரு அறையாக பதித்தபின் வண்ண கற்களால் பார்டர் மற்றும் டிசைன் செய்ய வேண்டும். வண்ணக்கற்களில் பார்டர் அமைத்தால் அதன் அகலம் எவ்வளவு சிறியதாக இருந்தாலும் அதை ஒரு அடியாகவே கணக்கில் கொள்ளப்படும். சுவர் ஓரங்களில் பதிக்கும் கற்களை அறுத்து அதன் ஓரங்களை மழுங்க தேய்த்து பதிக்க வேண்டும். ஓரங்களை மழுங்கடிப்பதை நோசிங் என்கிறார்கள். நேசிங் செய்ய ஒரு அடிக்கு 45 ரூபாய்.
கற்களை பதிக்கும் வேலைகள் முடிந்துவிட்டால் அடுத்து தேய்க்கும் வேலை துவங்கும். மொத்தம் ஏழு முறை தேக்கப்படும். அதற்கான மெஷினை கொண்டுவருவதற்கு ஆட்டோ கூலி நாம் கொடுக்க வேண்டும். போகும்போது அவர்கள் எடுத்து செல்வார்கள். ஒவ்வொரு முறையும் தேய்க்கும்போதும் அதற்கான தேய்க்கும் கற்களை அந்த மெஷினில் பொருந்துகிறார்கள். கடைசியாக தேங்காய் நாரை பொருத்தி தேய்க்கிறார்கள். இறுதியாக மார்பில்ஸ் கண்ணாடி போல பள பளக்க வேண்டும். மேலும் பளபளப்பு வேண்டும் என்றால் அதற்க்கான திரவங்கள் கடையில் கிடைக்கிறது. அதை பயன்படுத்தலாம்.
என் விடுமுறை நாட்களும் குறைந்து கொண்டே போனது ஆனால் வேலை முடியவில்லை. மற்ற எல்லா வேலையும் மார்பில்ஸ் போடுபவனால் பாதித்தது. கவிதாவுக்கு என் மேல் கடும் கோவம். டைல்ஸ் போட்டிருக்கலாம் என்று கடுகாடுத்தாள். எனக்கும் அதுவே தோன்ற ஆரமித்தது.
செப்டம்பர் 14 புகுவிழா வைத்தோம். அந்த நாளை சொல்லி சொல்லி அவனை வேலை வாங்கிக்கொண்டு இருந்தோம்.
ஒருவழியாக தரை மட்டும் முடித்து கொடுத்தான். அதன் பின் பத்து நாட்கள் வரவே இல்லை. இடை இடையே வந்து குளியலறை டைல்ஸ் போட்டு கொடுத்தான். ஒரு கட்டத்தில் வெறுத்து எங்களுக்கும் அவனுக்கும் கடும் வாக்குவாதம் நடந்தது. கவிதா வார்த்தைகளால் தாண்டவம் ஆடிவிட்டாள்.
மறுநாள் காலை ஆறுமணிக்கு வந்து கை வைத்த வேலை அனைத்தையும் முடித்தான். தொடாத வேலையை அப்படியே விட்டுவிட சொன்னோம். மாலை அத்தனையும் அளவெடுத்து கணக்கை முடித்து கையில் காசை கொடுத்தோம்.
அவனிடம் பேரம் பேசவே இல்லை. அது அவனுக்கு சங்கடமாக இருந்தது. ஆயிரம் ரூபாய் திருப்பி கொடுத்தான். வேண்டாம் நீயே வைத்துக்கொள் கிளம்பு என்றோம். கொஞ்சநேரம் யோசித்து கொண்டு இருந்தான். பின் திரும்பி சென்றுவிட்டான். அவனை புண்படுத்திவிட்டோம் என்று மனது சங்கடமாக இருந்தது. அவன் பண்பு எங்களுக்கு பிடிக்கவில்லை ஆனால் அவன் வேலையை கட்சிதமாக செய்கிறான் என்ற நம்பிக்கை இருந்தது.
மறுநாள் காலை தான் தரை காயும் யாரும் உள்ளே செல்ல வேண்டாம் என்று சொல்லி இருந்தான். மறுநாள் நாங்கள் உள்ளே சென்றோம். அப்படி ஒன்றும் தரை பளபளப்பாக இல்லை. அவன் நான்கு முறை மட்டுமே மெஷின் ஓட்டி இருப்பான் பின் மெழுகு (வேக்ஸ்) பயன்படுத்தி இருப்பான் என்று விஷயம் அறிந்தவர்கள் சொன்னார்கள். சின்ன வயதில் பேசித்திரிந்த எல்லா கெட்டவார்த்தைகளும் மனதில் எழுந்து குத்தாட்டம் போட்டன.
எங்களுக்கு கிடைத்த வேலை ஆட்களில் அவன் ஒரு திருஷ்டி.
அவனை நயமாக பேசி வரவழைத்து குமுறலாம் என்று தோன்றியது. அன்று எனக்கு இருந்த அழுத்தத்தில் முடியவில்லை.
நான் ஊருக்கு கிளம்பும் தருவாயில் வேறு ஆட்கள் கிடைத்தார்கள்.
நேர்த்தியாக சொன்ன நேரத்தில் முடித்துக்கொடுத்தார்கள்.
உடைந்த மரபெல்ஸ் துண்டுகளைவைத்து கோலமிடுவதுபோல அழகாக செய்திருந்தனர். அந்த வேலையும் நல்லபடியாக முடிந்தது.






வீட்டை கட்டிப்பார் -3 அணிநகை


ஆகஸ்டு இறுதியில் நான் ஊருக்கு வந்தேன். பூசு வேலை நடந்து கொண்டு இருந்தது.
அண்ணன் எங்களிடம் கணக்குகளை ஒப்படைத்தார் . அவர் ஆசிரியர் என்பதால் வேலைக்கு சென்று வந்து வீடுகட்டும் வேலையும் பார்ப்பார். அவருக்கு அது பெரும் அழுத்தமாக இருப்பதாக அண்ணி கூறினார். அதனால் அவருக்கு வீடு சம்மந்தமாக எந்த வேலையும் கொடுக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். அது ஒருவகையில் உண்மையே ஆனால் அப்படி திடீரென நான் அனைத்தையும் கையில் இடுத்துக்கொள்ள முடியவில்லை. ஏனெனில் எனக்கு யாரும் தெரியாது. அண்ணனே ஒவ்வொருவராக அறிமுகம் செய்துவைத்தார்.
மேஸ்திரி , பெயிண்டர் , எலெக்ட்ரிசின், மரபெல்ஸ் மற்றும் டைல்ஸ் ஓட்டுபவன் குழி எடுப்பவன் , வீட்டுக்கு லைன் கொடுப்பவன், சிற்ப வேலை செய்பவன் , ஆச்சாரி , கதவுக்கு பாலிஷ் போடுபவர் , செங்கல் கொடுப்பவர் , ஜல்லி கொடுப்பவர், மதிய சாப்பாட்டுக்கு ஹோட்டல் அனைவரும் எங்கள் வட்டத்துக்குள் வந்தனர்.
பூசு வேலை முடிவதற்குள்ளாகவே பதினைந்து லட்ச்சத்தை தொட்டு இருந்தது. ஏழு மாத சம்பளம் மற்றும் சிறிய சேமிப்பு , கையிருப்பு அனைத்தும் கரைந்திருந்தது. ஏல சீட்டு ஒன்று துவங்கி சில மாதங்கள் ஆகி இருந்தது. அதையும் எடுத்துவிட்டோம்.
கிராமத்தில் வீடு கட்டும்போது பெரும்பாலான வேலைகளை அந்த ஊர்காரர்களே செய்வார்கள். பெரும்பாலும் மாமா மச்சான் பங்காளி என்று உறவு கொண்டு அழைப்பவர்கள். அப்பாவுக்கும் அண்ணனுக்கும் பழக்கமானவர்கள். வெளி ஆட்கள் உள்ளே வந்து வேலை செய்ய சங்கடப்படுவார்கள். அதையும் மீறி ஜன்னல் மற்றும் மர வேளைகளை வாணியம்பாடியில் மாமா ( கவிதாவின் அண்ணன் ) அங்குள்ள ஆச்சாரிகளை வைத்து எங்களுக்கு செய்து கொடுப்பதாக ஒப்புக்கொண்டார். முதல் விஷயம் மரம் மண்டி மாமாவின் நண்பருடையது. அவரிடம் நன்கு விளைந்த நாட்டு தேக்கு இருந்தது. இரண்டாவது ஆச்சாரிகளின் (கங்கா & குரூப் ) நேர்த்தியான வேலை. அதனினும் முக்கியமான ஒன்று பணம் மாமா பார்த்துக்கொள்வார் நான் சில மாதங்கள் கழித்து கொடுத்தால் போதும்.
ஆனால் அது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. உள்ளூர் ஆச்சாரிக்கு ஏமாற்றம். மேஸ்திரிக்கு கொஞ்சம் ஒவ்வாமை. எப்பா நம்மவூர்ல இல்லாத ஆச்சாரியா என்று சிலர் எண்ணெய் ஊற்றினார். வீட்டில் என் தங்கம் என் உரிமை போராட்டம் எழுந்தது. நம்ம ஊர் ஆச்சாரி நல்லா செய்வான் அவன விட்டுட்டு அங்க எதுக்கு போன. அப்புறம் ஏதாவது சின்ன வேலை செய்ய கூட இவனுங்க வரமாட்டானுங்க பார்த்துக்க என்றார்கள். அது உண்மைதான்.
வாணியம்பாடி ஆச்சாரிகளும் அதை மனதில் வைத்தே வேலை செய்தனர். மாமா மரங்களை பார்த்து பார்த்து எடுத்திருந்தார். மரம் கதவுகள் அவர் மேற்பார்வையில் வணியம்பாடியிலேயே செய்யப்பட்டது. தேர்ந்த ஆச்சாரிகள் என்பதால் மர வேலைகள் நேர்த்தியாக இருந்தது.
ஜன்னல் கண்ணாடி , கைப்பிடி , பூட்டு ஆகியவற்றின் வகைகளை வீட்டுக்கு எடுத்துவந்து காண்பித்தார்கள். கவிதாவும் நானும் தேர்வு செய்தோம். முதல் நுழைவாயிலின் பக்கவாட்டில் பொருத்தும் கண்ணாடியில் மயிலிறகு ஓவியம் வரைய சொன்னோம். கண்ணாடியில் ஓவியம் வரைய தனியாக ஆட்கள் இருக்கிறார்கள்.
சாதாரணமாக வரைய வேண்டும் என்றால் ஒரு தொகை. அதிலே அமிலம் பயன்படுத்தினால் ( Acid Finishing) தொகை அதிகம். எப்போதும் முதல் தரத்தை விரும்பும் மாமா ஆசிட் பினிஷிங் செய்யுங்கள் என்கிறார்.
ஜன்னல்களையும் கதவுகளையும் கொண்டுவந்து வீட்டில் பொருத்தியபின் அதன் அமைப்பே மாறிவிட்டது. வீட்டை பார்க்கும்போது சட்டெனெ கண்ணில் படுவது ஜன்னல்கள்தான்.
ஜன்னல் மற்றும் கதவுகளை மெருகேற்றுபவர்கள் தனி குழுவாக வந்தார்கள். பத்துநாட்கள் வேலை செய்தார்கள். அதில் ஏழு நாட்கள் ஜன்னல்களையும் கதவுகளையும் சலிக்காமல் தேய்த்து மெருகேற்றி இறுதியில் மூன்று அடுக்கு வண்ணங்கள் பூசப்பட்டன.
Wood tech pu - Interior & Exterior
Wood tech - Varnish
Wood tech emporio PU
மரம் சம்பந்தப்பட்ட வேளையில் மட்டும் மரம் விற்றவர் , ஆசாரிகள் , அதில் கம்பி கிரில் பொருத்தியவர்கள் , கண்ணாடியில் ஓவியம் வரைபவர்கள், மரத்தை மெருகேற்றுபவர்கள் , கிரில்களுக்கு வண்ணம் திட்டியவர்கள் என்று ஆறு குழுக்கள் தனியாக வேலை பார்த்தன.
அத்தனை வேலைகளும் முடிந்ததும் ஜன்னல்களும் கதவுகளும் வீட்டை அலங்கரித்த அணிநகை போல ஜொலித்தன.








வீட்டை கட்டிப்பார் - 2


பூசை முடிந்து மூன்று மாதம் பணம் சேருவதற்காக காத்திருந்தோம். சம்பளம் போனஸ் என்று 5 லகரம் நிறைந்தது.
ஜனவரி 2016 இறுதியில் வேலை துவங்கியது. மேற்பார்வை அண்ணன் பார்த்துக்கொண்டார்.
என் பெரியப்பா வழி அண்ணன் மகன் ரஞ்சித் ஹோம் பில்டர். என் தலைமுறையில் ரஞ்சித்தின் அப்பா தான் மூத்தவர் நான் கடைசி. அதே போல அடுத்த தலைமுறையில் ரஞ்சித் முதலாமவன். கடைசியில் என் மகன் அக்க்ஷய் . ரஞ்சித்திடம் தான் நாங்கள் முக்கியமான ஆலோசனைகளை கேட்போம்.
யார் யாருக்கு எவ்வளவு கூலி தரவேண்டும் எந்த வேலைக்கு எவ்வளவு பணம் தரலாம் என்று அவனை வைத்து தான் பேசுவோம்.
கட்டுமான பணிகளை பார்வையிட்டு தகவல்களை பரிமாறிக்கொள்வோம்.
ரஞ்சித், அண்ணன் மற்றும் அப்பா மூவரும் மேஸ்திரியுடன் அமர்ந்து கட்டுமானத்திற்க்கான கூலியை பேசி முடிவு செய்தனர்.
மேஷ்திரிக்கு கட்டிட வேலை , சிற்ப வேலை , எஞ்சினீரிங் வேலை அனைத்துக்கும் சேர்த்து 10 X 10 சதுர அடிக்கு ( ஒரு சதுரம் ) 19500 ரூபாய் பேசினர். கட்டுமான பொருட்கள் நாம் வாங்கி தரவேண்டும். அண்ணன் ஆசிரியர் என்பதால் ஒரு பெரும் நட்பு வட்டம் இருந்தது. அப்பா தன் பங்குக்கு உதவிகளை செய்தார்.
1000 செங்கல் 5500 ரூபாய் , 100 மூட்டை சிமெண்ட் 33000 ரூபாய் , கம்பி என்று கணக்கு துவங்கியது. பாலாற்று படுக்கை என்பதால் எங்கள் நிலத்திலேயே கொஞ்சம் தோண்டியவுடன் மணல் கிடைத்தது.
வீட்டின் அடித்தளம் வேகமாக மேல் எழுந்தது. வார இறுதியில் சனிக்கிழமை தவறாமல் கூலி கொடுத்துவிட வேண்டும். அது ஆணியில் அறைந்த விதி.
கொஞ்சம் கட்டிடம் மேலெழுந்துடன் இரண்டு கை நிறைய பொறியை எடுத்து காற்றில் ஊதியது போல 5 லட்சம் கரைத்து பறந்தது.
அண்ணன் அனுப்பிய புகைப்படங்களை பார்த்தபின்பு என் சென்னியில் தழல் ஒன்று எழுத்தாடியது. வீட்டின் முன்னால் பிரமிடு இல்லை வெறும் தூண்களை மட்டும் நான்கைந்தை மேஸ்திரி நிறுத்தி வைத்திருந்தான்.
மேஸ்திரியை அலைபேசியில் அழைத்து நான் கேட்ட அந்த பிரமீடு எங்கே என்றேன். அந்தாம்பா இது என்றான். அடேய் என்று கவுண்டமணி போல பொங்கிவிட்டேன்.
அவன் அப்பாவிடம் முறையிட்டிருப்பான் போலிருந்தது. அப்பா என்னை அழைத்து " அவன் நல்ல கட்டி தருவான் பா " , நல்ல கட்டி தருவான் என்று திருப்பி திருப்பி சொல்லிக்கொண்டே இருந்தார்.
எனக்கு தலை சுற்றியது.
இங்கு எனக்கு கடுமையான வேலை. அயர்ந்து சோர்ந்து வீடு வந்தால் இதை பற்றி பேச்சு எழுந்து மேலும் சோர்வடைவேன்.
அதனால் எல்லா கணக்குகளையும் கவிதா பார்த்துக்கொண்டாள்.
பணம் கொஞ்சம் முன் பின் அனுப்பினேன். உடனடி தேவைகளுக்கு அண்ணன் நண்பர்களிடம் வாங்கி பணம் வந்தவுடன் திருப்பி கொடுத்திருக்கிறார்.
சுற்று சுவர்கள் வேகமாக எழுந்து வீடு தன்னை முழுமை செய்துகொண்டிருந்தது.
மேல் தளம் (மோல்டிங்) அமைக்கும் நாள் வந்தது. அன்று ஒருநாள் மட்டும் ஒரு லட்சம் வேண்டும் என்று அண்ணன் சொன்னதால் இங்கு தின செலவுக்கு வைத்திருந்த பணத்தையும் சுரண்டி அனுப்பிவைத்தோம். மேல் தளம் அமைக்கும் பணியின் இறுதியில் சிமெண்ட் போதாமலானதால் அண்ணன் விரைந்து சென்று சிமெண்டு மூட்டைகளை கடனுக்கு எடுத்துவந்திருக்கிறார். ஒருவழியாக மேல் தளம் அமைத்து பூசை போட்டிருக்கிறார்கள்.
நானும் கவிதாவும் நிலைமை கொஞ்சம் மீறுவதை உணர்தோம்.
மேஸ்திரியின் போக்கு எங்களுக்கு புரியவில்லை. என்ன செய்வது என்று யோசித்தால் பதற்றம் மட்டுமே ஏறியது.
விவாதித்து ஒரு முடிவை எட்டினோம். அதன்படி கவிதா மே மாதம் ஊருக்கு கிளம்பினாள். நான் ஆகஸ்ட் இறுதியில் வருவதாக கூறினேன். நான்கு மாத பிரிவு. எங்களுக்கு வேறு வழியும் இல்லை. கவிதா அங்கு இருந்தால் இங்கு பணம் கொஞ்சம் மிச்சமாகும்.
மேஸ்திரி புதிய பூதத்தை கிளப்பினான். மாடியில் ஒரு அறை கட்டி அதன் மேல் தண்ணீர் தொட்டி காட்டினால்தான் குழாயில் தண்ணீர் வேகமாக வரும் என்றான் . டேய் ஒரு தண்ணீர் தொட்டி கட்ட ஒரு ரூம் கட்ட வேண்டுமடா என்றேன். அவன் கேட்பது போல தெரியவில்லை. அப்பாவிடம் உடுக்கை சொடுக்கி இருக்கான்.
கவிதாவின் தலையில் அனல் எழுந்தது. பணம் ரொம்ப நெருக்கடியாக இருக்கு , மேல ரூம் கட்டினா நமக்கு ரொம்ப கஷ்டம் அவர்களிடம் சொல் என்றாள். நான் கடுமையாக பின்பு வேறுவழி இல்லாமல் கனிவாகவும் சொல்லி பார்த்தேன். அவர்கள் கேட்ப்பது போல தெரியவில்லை. மேல் தளத்தில் அறை கட்ட அவன் காசு கொடுக்கவில்லை என்றாலும் பரவாயில்லை நான் தருகிறேன் என்று நாட்டாமை போல துண்டை உதறி எழுந்து போயிருக்கிறார் அப்பா.
கிடா வெட்ட காத்திருந்த மேஸ்திரி அந்த சிலிர்ப்பை பார்த்து ஒரே போடாக போட்டுவிட்டான். இரண்டு நாளில் மேலே ஒரு அறை எழுந்து விட்டது. அதற்க்கு மட்டும் ஆறு ஏழு லட்சம் தனியாக செலவானது.
கவிதா அப்பாவியாக உங்க அப்பா காசு கொடுப்பாரா என்றாள். எனக்கு சிரிப்பு வந்தது. வீட்டு விவகாரத்தில் முதல் முறையாக எனக்கும் அவளுக்கு முட்டிக்கொண்டது. ஒருவிசயத்தை எப்படி பேசணுன்னு தெரியல வாழ வாழ கொழ கொழவென்று பேசுவது, எத சொன்னாலும் மண்டைய மண்டைய ஆட்டுவது என்று அம்மியில் வைத்து நசுக்கி எடுத்துவிட்டாள்.
பெரும் போராட்டத்துக்கு பின் தண்ணீர் தொட்டியை தவிர்த்தோம். தொட்டி கட்டி இருந்தால் மேலும் ஐம்பதாயிரம் செலவாகி இருக்கும்.